dimanche 18 novembre 2012

பாரதி இன்று வந்தால்




பாரதி இன்று வந்தால்...

கொளுத்தும் விழிகள்! கவியமுதைக்
     கொடுக்கும் திருவாய்! புவியழுக்கை
வெளுக்கும் சிந்தை! புரட்சியினை
     விளைக்கும் சொற்கள்! தமிழ்த்தேரைச்
செலுத்தும் கைகள்! சிந்துப்பா
     செழிக்கும் உள்ளம்! பாரதியே
மளுக்கு மளுக்(கு) என்றெதிரிகளை
     ஒடிக்கும் வன்மை பெற்றவனே!

திம்திம் என்று ஒலிக்கிறது!
     திசைகள் நான்கும் தமிழ்வாசம்!
நம்..நம்.. என்றே என்னரம்பு
     நன்றே ஊறிப் புடைக்கிறது!
கும்..கும்.. இருட்டு அகன்றோட
     குதித்தே ஆடும் பாரதியே
பும்..பும்.. மாட்டு மாந்தர்களைப்
     பொசுக்க மீண்டும் வந்தனையோ!

அடியேன் வணக்கம்! அனுப்பிய,மின்
     அஞ்சல் படித்து மகிழ்ந்தாயா?
விடியேன் என்று விழுந்துள்ள
     வினையை அறிந்து துடித்தாயா?
கொடிஏன்? கொள்கை ஏன்?என்று
     குனியும் வாழ்வு! கொதித்தாயா?
முடியேன் என்று மூலையிலே
     முடங்கும் நெஞ்சம் உயா்ந்திடுமோ?

எல்லோ ரும்இந் நாட்டுடைய
     மன்னர் என்று மொழிந்திட்டாய்!
எல்லோ ரும்பேர் தலைவரானார்!
     எங்கும் சங்கம்! தொண்டனில்லை!
அல்லா! கிருத்து! சிவாவென்றே
     அழகாய்த் தமிழர் பிரிந்தள்ளார்!
உள்ளம் கொதிக்கும் பாரதியே
     உலகில் தமிழன் உயர்வானோ?

அச்சம் இல்லை! இல்லையென
     அதிரும் வண்ணம் அரைந்திட்டாய்!
மெச்சும் வாழ்க்கை அடிவருடி
     விழுந்து கிடந்தால் கிடைத்திடுமோ?
பச்சைத் தமிழன் பதவிபெறப்
     பணிந்து உரிமை இழப்பதுவோ?
எச்சம் இவனைத் துச்சமென
     எரிப்பாய் மீண்டும் பாரதியே!

ஒன்று பட்டால் வாழ்வுண்டு!
     என்று தமிழர் உணர்வாரோ?
அன்று தொடங்கி இன்றுவரை
     அடிமை வாழ்வு! தமிழினத்தை
நின்று காக்க நம்பெரியார்
     நெடிது உழைத்தார்! விழித்தோமா?
நன்று! தீது பிரித்துணரும்
     ஞானம் அளிப்பாய் பாரதியே!

பாப்பா பாட்டில் சாதியெலாம்
     இல்லை! இல்லை! எனப்பகர்ந்தாய்!
பூப்பா பாடி நெறிசொன்னாய்!
     புவியில் நீதி கற்றோர்கள்
தாட்..பூட போட்டுத் தம்சாதி
     தகவாய் வளர்க்கக் காண்கின்றேன்!
கேட்பார் இல்லை! பிறப்பொக்கும்
     கீர்த்தி உரைப்பாய் பாரதியே!

பட்டம் சூட்டி, நலந்தரும்
     சட்டம் தீட்டிப் பெண்ணுயரத்
திட்டம் போட்டு வழிவகுத்தாய்!
     தீராக் கொல்நோய் ஒழிந்ததுபோல்
வட்டம் உடைத்தே உயர்வாழ்வை
     வகுத்தார் பெண்கள்! தமிழ்ப்பண்பை
முற்றும் மறந்த நிலையேனோ?
     சற்றே சாற்றித் திருத்துகவே!

தன்னின் நலமே எண்ணுபவர்
     தமிழின் நலத்தை நினைப்பாரோ?
கண்ணின் பார்வை, தெளிந்தொளிரும்
     கருத்தின் பார்வை செலும்வரையில்
எண்ணிப் பார்த்தேன்! இன்றமிழை
     ஏந்திக் காப்பார் உள்ளாரோ?
என்னின் உயிரே! பாரதியே!
     ஏனோ உனைப்போல் எனைச்செய்தாய்!

இமய உச்சித் தலைப்பாகை!
     பரிதி எழும்பும் மலைப்புருவம்!
அமைந்த மீசை நம்பகையை
     அழிக்க எடுத்த இருவாள்கள்!
எமையிங் கிணைந்த பொய்யர்யார்?
     இன்பத் தமிழின் மெய்யர்யார்?
உமையின் மைந்தா! பாரதியே!
     உண்மை உரைத்த(து) உன்வரவே!

9 commentaires:

  1. சிறப்பான சிந்தனை வரிகள் ஐயா...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    த.ம.1

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வந்தனை செய்தான்! இன்ப
      வளா்தமிழ்த் தாயைப் போற்றி!
      நிந்தனை செய்தான்! வீணில்
      நிலத்திடைக் கிடப்போர் தம்மை!
      சிந்தனை செய்தான்! இந்தச்
      செகத்தினைத் திருத்த வேண்டி!
      சிந்தினை நெய்தான்! பாட்டின்
      சீரணி காத்த மன்னன்!

      Supprimer
  2. பாரதி இன்று வந்தால் ரொம்ப நொந்து போயிடுவார்

    RépondreSupprimer
  3. மிக்க நன்றி ஐயா நல்ல ஒரு பாடத்திற்கு.
    மீண்டும் மீண்டும் படிப்பேன்.
    ஒரு கேள்வி ஐயா..
    வாழ்த்து --வணக்கம்.
    இவைகளிற்கு பன்மைச் சொல்லு இல்லையன்றோ!.
    பலர் வாழ்த்துகள் - வணக்கங்கள் என்கிறார்கள்
    கொஞ்சம் விளக்கம் தாருங்கள் ஆசிரியரே!
    வேதா. இலங்காதிலகம்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வாழ்த்து வணக்கம் நன்றியெனும்
      வண்ணச் சொற்கள் மூன்றினையும்
      கோர்த்துக் கள்கள் வந்திடலாம்!
      குறைகள் நிறைகள் என்பனபோல்!
      சோ்த்து வைத்த தமிழ்ச்செல்வம்
      செப்பச் செப்பச் செழித்திடுமே!
      வோ்த்துக் கொட்டும் கோடையிலே
      வீசம் தென்றல் தமிழின்பம்!

      Supprimer
  4. கும்..கும்.. இருட்டு அகன்றோட
    குதித்தே ஆடும் பாரதியே
    பும்..பும்.. மாட்டு மாந்தர்களைப்
    பொசுக்க மீண்டும் வந்தனையோ!

    தமிழோடு சேர்த்து யாவரும் மகிழ்வர்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பும்..பும் மாடும் சிலநேரம்
      போனால் போடா என்றிருக்கும்!
      நம்மின் தலைவா் தொண்டரெலாம்
      நன்றே கழுத்தில் வலிகொண்டார்!
      தம்திம் என்றே குதித்தாடித்
      தமிழை விற்கும் தறுதலைகள்!
      இம்மண் இழியும் ஊழல்களை
      எடுத்தே உரைக்க இயன்றிடுமோ?

      Supprimer
  5. மிக்க நன்றி ஆசிரியரே.
    வேதா. இலங்காதிலகம்.

    RépondreSupprimer
  6. இதை பொழிப்புரையாக எழுதுங்களேன். சில இடங்கள் புரியவில்லை...

    RépondreSupprimer