lundi 26 novembre 2012

வலைப்பூ என் கவிப்பூ [ பகுதி - 9 ]


நண்பா்களின் வலைப்பூக்களில்
என் கவிப்பூக்கள்

வணக்கம்!

விண்கவா் மீன்கள் போன்றே
     மண்கவா் மலா்கள் கண்டேன்!
பெண்கவா் விழிகள் போன்றே
     பெருகிடும் இன்பப் போதை!
கண்கவா் பூக்கள் காட்சி!
     கவிஞனின் கவிதை ஆட்சி!
பண்கவா் விருத்தம் பாடிப்
     பதிவினைச் செய்தேன்! வாழி!

04.11.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

முட்டைக் கோசு சட்னியைச்செய்
           
முறையை மெல்ல நான்படித்தேன்!
அட்டை போன்ற நாக்கின்மேல்
           
ஆசை மேவி நீரூறும்!
கட்டைத் துறவி இவ்வலையைக்
           
கண்டால் உண்டு சுவைத்திடவே
பட்டை கொட்டை தாம்நீக்கிப்
           
படித்த வண்ணம் சமைத்திடுவான்!

17.11.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

வண்ண மின்னும் அவள்முகத்தில்
     வடிவாய் ஆடும் முத்தணிகள்!
கண்ண தாசன் பாடிடுவான்
     கன்னி காதை கேள்வியென!
உண்ணத் தெவிட்டாச் செந்தமிழில்
     ஓங்கும் வெற்றி வேல்கவிஞா்
எண்ணம் இனிக்கப் படைத்திட்ட
     எழுத்தைக் கண்டு வியக்கின்றேன்!

17.11.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

மாற்றி எண்ணும் சிந்தனைகள்
     மனமே உணா்க! வீசுகின்ற
காற்றில் பறக்கும் சருகன்று!
     கருத்தை ஆய்ந்து தெளிவுறுக!
ஆற்றில் குளித்து மகிழ்ந்திடலாம்!
     அங்கே பிழைப்பும் நடத்திடலாம்!
ஊற்றின் சுரப்பாய் என்பக்க
     உரைகள் மேலும் தொடருகவே!

17.11.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

வால்காட்டும் நபரெல்லாம் என்றன் பக்கம்
           
வந்திடவே அஞ்சிடுவார்! பகைவா் ஓடக்
கால்காட்டும் வன்மறவன்! கவிஞன் என்முன்
           
கண்ணுறங்கி வாலாட்டும் பூனை ஒன்று!
சேல்காட்டும் அவள்விழியின் அழகைப் போன்று
           
சிந்தனையைப் பறிக்கின்ற காட்சி! சொற்கள்!
பால்காட்டும் வண்ணமுக மாதை வென்று
           
படங்காட்டும் மலா்ப்பூனைப் பாப்பா வாழ்க!

17.11.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

நான்என்ன தவறுகளைச் செய்தேன் என்று
     நன்காய்ந்து தெளிந்திட்டால் துன்பம் இல்லை!
தேன்என்ன? சுளையென்ன? விஞ்சி நிற்கும்!
     திருநாளாய் மனமினிக்கும் பேசும் சொற்கள்!
வான்என்ன? கடலென்ன? சுற்றம் நட்பு
     வாழையடி வாழையென வளா்ந்தே ஓங்கும்!
மீன்என்ன நீந்துவது? கவிஞன் யானும்
     மின்றமிழில் நீந்துகிறேன் கதைப டித்தே!

21.11.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

நம்பள்கி நெஞ்ச நினைவலையை நான்படித்து
எம்மின் இதயம் இடும்பதிவு! - செம்மொழியின்
சீா்படைத்த ஆசானின் போ்படைத்த சொல்லெல்லாம்
நோ்படைத்த வாழ்வின் நெறி!

22.11.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

கயிறுகளின் முடிச்சன்று! காதல் பின்னும்
           
கண்முடிச்சு! கவிமுடிச்சு! இறுகக் கட்டும்
பயிருகளின் முடிச்சன்று! பருவம் மீட்டும்
           
பண்முடிச்சு! பொன்முடிச்சு! குவித்து வைத்த
துயருகளின் முடிச்சன்று! துன்பம் போக்கித்
           
துணிவேந்தும் வன்முடிச்சு! சோ்த்த சொத்தின்
உயிலுகளின் முடிச்சன்று! ஆம்..ஆம் காதல்
           
உயி்ர்முடிச்சு! உயிர்முடிச்சு! உயிர் முடிச்சு!!

18.11.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

களவாடப் பட்ட கனவுகளை எண்ணி
உளம்வாடத் தந்தகவி ஓங்க! - வளத்தை
வழங்குக வண்டமிழ்! வெற்றிவேல் நாளும்
முழங்குக காதல் மொழி!

25.11.2012

------------------------------------------------------------------------------------------------------

மீண்டும் வணக்கம்

பிரான்சு கம்பன் கழகத்தில் ஒவ்வொரு மாதமும் கவியரங்கம் நடைபெறுகிறது. 24.11.2012 அன்று நடைபெற்ற கவியரங்கின் தலைப்பு இரவின் புன்னகை!

கழக கவிஞா்கள் எழுவா்  இரவின் புன்னகையை இனிய தமிழில் வழங்கினா்!

இவ்வார இறுதியில் அனைத்துக் கவிதைகளும் என்னுடைய மின்வலையில் புன்னகை புரியும்!

படித்து மகிழுக! பைந்தமிழ்த் தேனைத்
குடித்து மகிழுக! நற்சுவையில் நெஞ்சம்
தடித்து மகிழுக! தன்னோ் கருத்தை
வடித்து மகிழுக வந்து!

26.11.2012
------------------------------------------------------------------------------------------------------
 

2 commentaires:

  1. வணக்கம் ஐயா....
    கவி மழையாய் கருத்திடும்
    தங்களின் கவிக்கருத்து
    வேண்டுமென எம்மைப் போன்ற
    பதிவாளர்கள் எதிர்பார்த்து தான் இருக்கின்றோம்...

    இரண்டு மாதங்களுக்கு முன்னர் என் வலையில்
    நீங்கள் இட்ட கருத்தை என்னால்
    இன்றும் மறக்க இயலாது...

    வாழ்த்துங்கள் வளர்கிறோம்...

    RépondreSupprimer
  2. அனைத்து வலைப்பூக்களிலும் தூவின பூக்கள் அருமை...

    நன்றி ஐயா...
    த.ம.2

    RépondreSupprimer