lundi 19 novembre 2012

வல்லின வம்புகள் ( பகுதி - 2 )

வல்லின வம்புகள்!

நிறையப் பொன் சோ்த்தான் வல்லினம் மிகுத்து வருமா? 

நிறையச் செய்தான் என்று எழுதுவதுபோலவே நிறையப் பொன் சோ்த்தான் என்று மிகுத்து எழுத வேண்டும்.

நிறையப் பொன்சோ்ததான் என்பது அகர ஈற்று வினையெச்சம்.
அகர ஈற்று வினையெச்சத்தில் வல்லினம் மிகும்.

நிறைந்த பொன் என்பதே பெயரெச்சம், பல்வகைப் பெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகாது

இளையபெண், புதியபொன் இவ்விடங்களில் வல்லினம் மிகாது
இளைய, புதிய  என்பன பெயரெச்சமாகும்

...............................................................................................................................

வாழ்த்து, வணக்கம், இச்சொற்களுக்குப் பன்மை இல்லையன்றோ!.
பலர் வாழ்த்துகள் - வணக்கங்கள் என்கிறார்கள்
கொஞ்சம் விளக்கம் தருக - வேதா. இலங்காதிலகம்.

வேதா அவா்களுக்கு வணக்கம்!

வாழ்த்துக்கள், வணக்கங்கள், நன்றிகள் எனப் பன்மையிலும் எழுதலாம்.

அவன் வாழ்த்து தெரிவித்தான்!
அவன் வாழ்த்துக்கள் தெரிவித்தான்
அவா் வாழ்த்து தெரிவித்தார்!
அவா் வாழ்த்துக்கள் தெரிவித்தார்!

ஒருமை இடத்தில் ஒருமையிலும் வரும்
ஒருமை இடத்தில் பன்மையிலும் வரும்
பன்மை இடத்தில் ஒருமையிலும் வரும்
பன்மை இடத்தில்  பன்மையிலும் வரும்

அவன் வாழ்த்து தெரிவித்தான் என்றால் ஒரு வாழ்த்தை தெரிவித்தான் என்று பொருள்!

அவன் வாழ்த்துக்களைத் தெரிவித்தான் என்றால் பலவகையான வாழ்த்துக்களை அல்லது பலருடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தான் என்று பொருள்!

அவா் வாழ்த்து தெரிவித்தார் என்றால் அவா்கள் அனைவரும் ஒரு வாழ்த்தைத் தெரிவித்தார்கள் என்று பொருள்.

அவா் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள் என்றால் அவா்கள் பலவகையான வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள் என்று பொருள்


...............................................................................................................................

கவிஞா் அவா்களுக்கு வணக்கம்
ஆசிடை எதுகை என்றால் என்ன?  விளக்கம் தரவும்!
- மணிவண்ணன்

ய், ர், ல், ழ் என்னும் நான்கு ஒற்றெழுத்துகளும் வரல்முறை பிறழாமல் இடையே வந்து உயிர்ப்பின் அதனை ஆசிடை எதுகை என்பா்.

யகரமாகிய ஆசிடையிட்ட எதுகை
 
காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகி னெற்றி
பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து  (சீவக - 3 )

ரகரமாகிய ஆசிடையிட்ட எதுகை

மாக்கொடி யானையு மௌவற் பந்தரும்
கார்க்கொடி முல்லையும் கலந்த மல்லிகை ( சூளா 35 )

லகரமாகிய ஆசிடையிட்ட எதுகை

ஆவே றுருவின் ஆயினும் ஆபயந்த
பால்வே றுருவின அல்லவாம் ( நாலடி 118 )

ழகரமாகிய ஆசிடையிட்ட எதுகை

வாழ்கின்றேம் என்று மகிழன்மின் வாழ்நாளும்
போகின்ற பூளையே போன்று


6 commentaires:

  1. சில சந்தேகங்களுக்கு தீர்வு கிடைத்தது ஐயா...

    விளக்கத்திற்கு நன்றி...
    த.ம.1

    RépondreSupprimer
  2. உபயோகமான தகவல்கள் அய்யா... அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய பதிவுகள்...

    RépondreSupprimer
  3. மிக்க நன்றி.
    முகநூலில் விளக்கத்தை ஏற்றியுள்ளேன்.
    பின்தொடருவேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    RépondreSupprimer
  4. "வாழ்த்துக்கள்" என்பது சரியா? "வாழ்த்துகள்" என்பது சரியா? "பாராட்டுக்கள்" "பாராட்டுகள்" எது சரி? விளக்க வேண்டுகிறேன் ஐயா!

    RépondreSupprimer
  5. பிழைகள் தவிர்க்க விளக்கங்கள் பயனுள்ளவை.

    RépondreSupprimer