mercredi 14 novembre 2012

கம்பன் கவியரங்கம் [பகுதி - 1]




கம்பன் அணிந்த அணி
(தமிழ் - மானம் - மாண்பு - புகழ்)
(தலைமைக் கவிதை)

தமிழ் வணக்கம்

உலகெல்லாம் ஒளிர்கின்ற தமிழே! தாயே!
      உயர்மொழியே! என்னுயிரே! மணக்கும் வண்ண
மலரெல்லாம் பறித்துவந்து மாலை கட்டி
      மகனுனக்குச் சாற்றுகிறேன்! கம்பன் பாட்டின்
நிலையெல்லாம் நானுணர! சான்றோர் சொன்ன
      நெறியெல்லாம் நானுணர! இந்த மன்றில்
அலகில்லாக் கவிபொழிய அம்மா வாராய்!
      அழகெல்லாம் அணியெல்லாம் அள்ளித் தாராய்!

இறை வணக்கம்!

பூக்குளத்துப் பேரழகா! புனகூதா! அந்தக்
      கோகுலத்துக் குழழற்செல்வா! கொஞ்சும் கண்ணா!
பாக்குளத்தில் நானிறங்கி ஆழம் காணப்
      பாக்குவமாய் இறக்கிடுக! ஆடிப் பாடி
ஆக்குலத்துக் கன்னியர்கள் அடைந்த இன்ப
      அருந்நிலையை அடியவனும் காணச் செய்க!
நாக்குளத்தில் மலருகின்ற கவிதைப் பூவில்
      நலத்தோடு அமர்தொளிர்க! யாவும் நீயே!

அவையடக்கம்

பகையிடத்தில் அடங்குகிற பழக்கம் இல்லை!
      பணமிடத்தில் அடங்குகிற வழக்கம் இல்லை!
குகையித்தில் மறைந்துள்ள நரிகள் வந்து
      குழிபறித்து நின்றாலும் தயக்கம் இல்லை!
புகையிடத்தில் மதுவிடத்தில் புகுதல் இல்லை!
      பொய்யிடத்தில் ஒருநொடியும் கழித்தல் இல்லை!
மிகையிடத்தில் என்கவியை ஏற்றி வைத்த
      வியன்அவைக்கே என்னுள்ளம் அடக்கம் என்பேன்!

இலக்கியச்சுடர் த. இராமலிங்கம்!

கலைக்கனத்தில் நடக்கின்ற கலைஞர் உள்ளார்!
      கவிகனத்தில் படைக்கின்ற கவிஞர் உள்ளார்!
விலைகனத்தில் வாங்குகின்ற மனிதர் உள்ளார்!
      விளம்பரத்தில் வாழுகின்ற தலைவர் உள்ளார்!
இலக்கணத்தில் என்போன்ற சிலரும் உள்ளார்!
      இலக்கியத்தின் சுடராவார்! இராம லிங்கம்!
தலைக்கனத்தில் சிக்காத அறிஞர்! அன்பர்!
      தமிழ்க்கனத்தில் இமயத்தை ஒப்பாய்க் கொண்டார்!

பதினொன்றாம் படியேறித் தமிழ்மு ழங்கும்!
      பகலிரவாய்ப் பணியாற்றி நன்கி யங்கும்!
எதிர்நின்றார் வாயடக்கி ஒதுங்கச் செய்யும்!
      எத்திசையும் தமிழ்ப்புகழைப் பரவ வைக்கும்!
மதிநன்றாய் அவ்வானில் மின்னும் நாள்போல்
      மாக்கம்பன் விழாவொளிரும்! மகிழ்ச்சி பொங்கும்!
கதியென்றே கம்பனவன் திருத்தாள் போற்றிப்
      களித்திட்ட அன்பரெலாம் காலம் வென்றார்!

சந்தமொளிர் செந்தமிழைச் சாற்றிப் பாடும்
      சால்புடைய தமிழ்க்கம்பன் கழகம்! நன்றே
சொந்தமொளிர் உறவுகளால் உயர்ந்து நிற்கும்!
      சோர்வின்றித் தொடர்பணிகள் ஆற்றி ஓங்கும்!
நந்தமொளிர் வாழ்வுக்கே வழிகள் காட்டும்!
      நாளைவரும் தலைமுறைக்கு நெறிகள் ஊட்டும்!
நத்தமொளிர் யானையென வலிமை கொண்டு
      தமிழ்காக்கும் நம்கழக அன்பர் வாழி!

சிந்தையொளிர் செழுந்கம்பன் சீர்கள்
      செப்புதற்கு எளிதாமோ? கடல்போல் நீளும்!
விந்தையொளிர் கவிதையிலே பாடஉள்ளோம்!
      விருந்தாகச் சுவைத்ததெனில் கைகள் தட்டி
முத்தையொளிர் முத்தமிழை வா..வா.. என்று
      முன்னின்று வரவேற்பீர்! என்னை மேவி
எந்தையொளிர் கவியாற்றல் காக்க வேண்டி
      என்னாட்டுத் திசைநோக்கி வணங்கு கின்றேன்!

                                          (தொடரும்)

3 commentaires:

  1. அருமை...

    தொடர்கிறேன் ஐயா...

    நன்றி...
    த.ம. 1

    RépondreSupprimer
  2. கவியரங்கம் கலை கட்டுகிறது. தாங்கள் தலைமை இல் நடை பெற்றது என்று கருதுகிறேன்.வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  3. பதினொன்றாம் படியேறித் தமிழ்மு ழங்கும்!
    பகலிரவாய்ப் பணியாற்றி நன்கி யங்கும்!

    அழகான அர்த்தம் பொதிந்த வரிகள், பாராட்டுக்கள்..

    RépondreSupprimer