mardi 9 octobre 2012

மணிமொழியார் வாழ்த்துமலர்!



  ( திருக்குறள் செம்மல் ந, மணிமொழியாருடன்)




மணிமொழியார் வாழ்த்துமலர்!
 
கனிமொழியார்! கன்னல் கமழ்மொழியார்! தையின்
பனிமொழியார்! பாசப் படர்மொழியார்! நற்றேன்
நனிமொழியார் எங்கள் மணிமொழியார்! மேன்மைத்
தனிமொழியார் சால்பினைச் சாற்று!

மாமதுரை மீனாட்சி மலர்த்தாள் போற்றும்
    மணிமொழியார்! மதுத்தமிழார்! சந்தக் கம்பன்
பா..மதுரை பரவுகின்ற பணிகள் ஆற்றும்
    பண்புளத்தார்! அன்புளத்தார்! தமிழாம் தேறல்
பூ..மதுரை பொலிகின்ற சோலை காக்கும்
    புகழுடையார்! பொதுச்செயலார்! கற்றோர் நெஞ்சம்
வா..மதுரை என்றேத்தி மகிழும் வண்ணம்
    வள்ளுவத்தை உலகெலாம் வழங்கி வாழ்க!

மணிமொழியார் அளிக்கின்ற உரையைக் கோட்டு
    மதியொளியார் மகிழ்கின்றார்! குறளார் சொன்ன
அணிமொழியார் அறநெறியார் வாழ்வைக் கண்டே
    அருந்தமிழாள் குளிர்கின்றாள்! மணக்கும் மாண்பின்
பணிமொழியார் காட்டுகின்ற பாதை சென்று
    பயனடைந்தார் வளர்கின்றார்! கொள்கை ஊட்டும்
திணிமொழியார் திருக்குறளைத் தலைமேல் ஏந்தித்
    திசையெட்டும் பரப்புகிறார்! தொடர்வோம் நாமே!

இவ்வுலகம் இனிமையுற வேண்டும் என்றால்
    இனியதமிழ்த் திருக்குறளை ஏற்கச் செய்வீர்!
அவ்வுலகம் எனவொன்று இருக்கும் என்றால்
    அருங்குறளைத் தினமோதிக் களிக்கும் என்பேன்!
எவ்வுலகம் இணையாமோ? குறளின் மேன்மை
    ஈரடியில் உலகளந்த செயலை விஞ்சும்!
செவ்வுலகம் வள்ளுவத்தின் வாக்கே என்று
    செப்புகின்ற மணிமொழியார் செந்தேன் ஊற்றே!

அருங்கம்பன் கழகத்தார் குறளை முற்றும்
    அகங்கனிந்தே ஓதுகின்ற இந்நாள்! யாப்பின்
பெருங்கம்பன் பேணுகின்ற உறவைப் போன்று
    பெருக்குகிறோம் தமிழ்நட்பை! ஈடே இல்லா
வரும்கம்பன் காலத்தை எடுத்துக் கூற
    வந்துள்ளார் மணிமொழியார்! தமிழின் சீர்கள்
தருங்கம்பன் இவரென்று போற்று கின்றோம்!
    தமிழ்வாழ்க! தமிழ்வாழ்க! வாழ்த்து கின்றோம்!

29.09.2012


2 commentaires:

  1. திருக்குறள் செம்மல் ந. மணிமொழியார் அவர்களுக்கும், சிறப்பாக பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...

    RépondreSupprimer

  2. மணிமொழியார் மீதிங்கு அளித்ததமிழ் கண்டேன்!
    அணிமொழியாய் அள்ளி அணிந்தேன்! - பணியென்று
    வண்ணக் கவிதைகளை வாரி இறைக்கின்றீா்!
    எண்ணம் மணக்கும் எனக்கு!

    RépondreSupprimer