lundi 29 octobre 2012

வெள்ளைப் புறா




வெள்ளைப் புறா

துணிவும் உண்டு! தூயவர்தம்
     பணிவும் உண்டு! நல்லழகாய்
அணியும் மணிபோல் ஒளிர்கின்ற
     அகமும் உண்டு! கனிவுண்டு!
பணியும் பண்பும் ஒன்றாகிப்
     படரும் பசுமைப் புகழுண்டு!
பிணியும் பிறவும் ஒழித்திங்குப்
     பெருமை தந்த இந்திராவே!

நீண்ட மூக்கு! நேர்பார்வை!
     நிலத்தைப் புரட்டும் நெஞ்சுறுதி!
ஆண்ட தென்ன? நல்லறிவும்!
     அன்பும்! ஆசை நிறைந்தினிது
பூண்ட தென்ன? நம்நாட்டின்
     புகழும் பொலிவும்! கைகளினால்
தீண்ட தென்ன? வானுச்சி!
     திண்மைச் செயலர் இந்திராவே!

தந்தை நேரு தந்தநெறி!
     தரணி போற்றும் தங்கநெறி!
சிந்தை தரித்து நம்நாட்டைச்
     செதுக்கி வடித்த அருஞ்சிற்பி!
பந்தைப் போன்று பகைவர்களைப்
     பறக்கச் செய்த மறச்செல்வி!
விந்தை! நம்மின் விடிவெள்ளி!
     விழிபோல் இருந்த இந்திராவே!

வன்மை அடைந்த நாடுபல
     வளரும் நாட்டைச் சுரண்டுகிற
தன்மை அறிந்து தடைபோட்டுத்
     தாய்போல் அணைத்துத் துயர்தீர்த்தார்!
நம்மை அடையும் வழிகளையே
     நன்றே நவின்று நலஞ்சேர்த்தார்!
இன்மை நீக்கி இருள்போக்கி
     இனிமை அளித்த இந்திராவே!

நாடே உயிராய்! மக்களுறும்;
     நலமே உணர்வாய்! அறமூட்டும்
ஏடே உணவாய்! குமரிவரை
     இனிதே செழிக்கும் வன்னுரமாய்!
வீடே மறந்து! எதிர்வந்த
     விதியே ஓட வினைபுரிந்து!
ஈடே இல்லாப் பெண்மணியாய்
     இருந்த எங்கள் இந்திராவே!

ஆட்சி செய்யும் நுட்பங்கள்
     அனைத்தும் அறிந்த பெண்மணியார்!
காட்சிக் கென்றும் இனியவராய்க்
     கண்ணில் கமழும் கண்மணியார்!
சாட்சி சொல்லும் இவ்வுலகம்!
     சற்றும் அஞ்சா வன்மதியார்!
மாட்சி மிக்க வரலாறாய்
     வாழும் எங்கள் இந்திராவே!

ஆளும் ஆட்சி போர்க்களமாய்
     ஆன பொழுதும்! காலமெனும்
நாளும் கோளும் சரியின்றி
     நடந்த பொழுதும்! ஓய்வின்றித்
தோளும் காலும் நற்பணியில்
     தொடந்த பொழுதும்! எதிர்வந்து
மூளும் சதியை முற்றறுத்து
     முழங்கும் வெற்றி இந்திராவே!

காந்தி நாடு! கர்மவீரர்
     காம ராசர் கருணைநாடு!
நீந்தி முழுகி முத்தெடுக்கும்
     நேய கவிஞர் நிறைந்தநாடு!
சாந்தி! சாந்தி! அமைதியினைச்
     சாற்றும் நாடு! தலைமீதே
ஏந்திக் காத்தே இரவுபகல்
     எண்ணா துழைத்த இந்திராவே!

உலகம் போற்றும் தலைவர்களில்
     ஒப்பில் நிலவாய்த் திகழ்கின்றார்!
திலக மாகப் பாரதத்தாய்
     தீட்டி அழகாய் மிளிர்கின்றாள்! 
குலவும் சீர்கள் நாடெய்தக்
     கொள்கை கொண்டார்! உயிரீந்தார்!
உலவும் நினைவில் எந்நாளும்
     ஒளிரும் எங்கள் இந்திராவே!

கொள்ளைப் புறத்து மலர்க்கூட்டம்
     கொஞ்சி மணக்கும் வடிவழகு!
பிள்ளை அமுதாய் நம்முயிரைப்
     பிடித்து மயக்கும் சொல்லழகு!
கள்ளை நிகர்த்த சுவைக்கவிகள்
     கட்டிக் கொடுக்கும் செயலாழகு!
வெள்ளைப் புறாஎன் றிவ்வுலகம்
     வியந்து போற்றும் இந்திராவே!


3 commentaires: