dimanche 21 octobre 2012

நன்மை உண்டோ?





வந்தாரை வாழ்விக்கும் தமிழன் என்றும்
            வருவோரை விருந்தோம்பும் அன்பன் என்றும்
நொந்தாரை விடுவிக்கும் நேயன் என்றும்
            நுண்ணியமாய்ப் போர்புரியும் வீரன் என்றும்
அந்தாதி பாடுவதில் கவிஞன் என்றும்
            அடுக்குமொழி பேசுவதில் அறிஞன் என்றும்
சிந்தாமல் பாடியுள்ள பாக்கள் போதும்
            சீர்திருத்தம் பெற்றானா தமிழன் இங்கே?

தன்மொழியைக் கற்கவில்லை! புகழை நல்கும்
            தண்டமிழின் பண்பாட்டைக் காத்தான் இல்லை!
பொன்மொழியைக் கேட்டுமனம் மாற வில்லை!
            புகழ்சூடி ஒற்றுமையாய் வாழ வில்லை!
தன்விழியைத் தன்னுடலைப் பேணி நாளும்
            தன்னலத்தில் கிடந்ததனால் உயர்ந்தான் இல்லை
நன்னெறியை ஏற்றானா? நல்லார் தம்மின்
            நட்புறவைப் பெற்றானா? இல்லை! இல்லை!

சூழ்ச்சிகளின் பிறப்பிடமாய் நெஞ்சம் கொண்டு
            சுற்றுகின்ற கொடியவர்கள் திருந்தல் என்றோ?
தாழ்ச்சிசொலல் பாவமெனப் புலவன் சொன்னான்
            சால்புடைய இக்கருத்தை உணர்தல் என்றோ?
வீழ்ச்சியுறும் தன்னிலையை எண்ணி டாமல்
            வீட்டுக்குள் உறங்குபவன் விழித்தல் என்றோ?
மாட்சியுறும் நற்செயலை நாடி டாமல்
            மதிமயங்கி நிற்பதனால் நன்மை உண்டோ?

5 commentaires:

  1. நன்று சொன்னீர் அய்யா நன்று சொன்னீர்.
    வந்தாலை வாழ்விக்கும் தமிழனாய்
    வந்தோலை விருந்தோம்பும் தமிழனாய் இருந்தோமோ
    தவிர, நம்முள் ஒன்றுமை காக்கத் தவறிவிட்டடோமே அய்யா. நம்மைத் தவிர அனைத்து மொழியினரும் ஒற்றுமையாய் இருக்க, நாம் மட்டும், அனைத்திலும் வேறுபட்டு நின்று நின்று, இருப்பதையும் அல்லவா கொஞ்சம் சொஞ்சமாய் இழந்து வருகின்றேர்ம்.
    வீழ்ச்சியுறும் தன்னிலையை எண்ணி டாமல்
    வீட்டுக்குள் உறங்குபவன் விழித்தல் என்றோ?
    மாட்சியுறும் நற்செயலை நாடி டாமல்
    மதிமயங்கி நிற்பதனால் நன்மை உண்டோ?

    RépondreSupprimer
  2. எத்தனை எத்தனை அருமையான கருத்துள்ள சிந்தனை கேள்விகள்...

    அருமை... நன்றி ஐயா...

    த.ம.1

    RépondreSupprimer
  3. கொஞ்ச நாள் வெளி ஊரு போயிருந்தேன் ஐயா இன்னக்குதான் வந்தேன் கவிதை மழையில் நனைந்தேன் நல்லா இருக்கு வாழ்த்துகள்

    RépondreSupprimer
  4. அருமையான கவிதை.பழம் பெருமை பேசிக் கொண்டிருக்காமல் செயலில் இறங்கி மானம் காக்க வேண்டும்.
    தமிழ்மண வாக்கு 2

    RépondreSupprimer