samedi 13 octobre 2012

ஏக்கம் நுாறு [ பகுதி - 13 ]




ஏக்கம் நுாறு [ பகுதி - 13 ]

பொங்கிவரும் ஆசையினால் புலவன் நெஞ்சம்
     புலம்புகின்ற சொல்லெல்லாம் கவிதை யாகும்!
மங்கிவரும் என்வாழ்வில் ஒளியை ஏற்றி
     மதியாகத் தவழ்பவளே! மயக்கும் மாதே!
தொங்கிவரும் குரங்காக மனமும் ஆடும்!
     தொடா்ந்துவரும் கற்பனையால் தேனும் பாயும்!
சிங்கிவரும் நடையழகில் சிங்கன் சொக்கிச்
     சிதறுகின்ற காலங்கள் சொர்க்கம்! சொர்க்கம்!! 61

நீள்வடிவ முக்கோண மூக்கில் சிக்கி
     நெஞ்சலைந்து தடுமாறும்! வலிமை மிக்க
ஆல்வடிவ விழுதுகளாய் ஆசை தொங்கி
     ஆள்வடிவை அரையாக்கும்! அன்பே உன்றன்
சேல்வடிவ நீள்விழிகள் செய்யும் சேட்டை
     சிந்தனைக்கு விருந்தளிக்கும்! நடந்து செல்லும்
கால்வடிவ பேரழகைக் காட்டும் என்..பா
     கால்வடிவம் என்றுரைப்பேன்! கன்னல் பெண்ணே! 62

படைத்திட்ட பரம்பொருளான் காதல் பாடிக்
     பயனுற்ற பொழுதினிலே பிறந்த பெண்ணே!
அடைத்திட்ட மது..திறக்கப் பாயும் வெள்ளம்!
     அழகொளிரும் விழியழகில் ஆசை துள்ளும்!
உடைந்திட்ட பொருளாக ஆகும் முன்னே
     ஒப்புக்குக் காதலெனும் ஒருசொல் சொல்வாய்!
குடைந்திட்ட நெஞ்சுக்குள் உயிரின் காற்றைக்
     கொடுத்திட்ட பேரழகே! கவிதை ஊற்றே! 63

குழந்தையைப்போல் பார்க்கின்ற பார்வை என்னைக்
     குழப்பத்தில் தள்ளுதடி! வாழ்வை முற்றும்
இழந்ததைப்போல் உனைப்பார்க்கா நாள்கள் யாவும்
     இயங்கிடவே மறுக்குதடி! இறைவன் தாளில்
விழுந்ததைப்போல் உன்னழகில் என்றன் ஆன்மா
     விளையாடி ஒன்றுதடி! குறளார் நன்றே
மொழிந்ததைப்போல் ஐம்பொறியைச் சுகத்தில் தள்ளி
     முழுகடிக்கச் செய்தவளே! முல்லைக் காடே! 64

முடிபார்த்த பொழுதினிலே முடியே பார்த்தேன்!
     முகம்பார்த்த பொழுதினிலே முகமே பார்த்தேன்!
மடிபார்த்த பொழுதினிலே மடியே பார்த்தேன்!
     மனம்பார்த்த பொழுதினிலே மனமே பார்த்தேன்!
கொடிபார்த்த பொழுதினிலே கொடியே பார்த்தேன்!
     குணம்பார்த்த பொழுதினிலே குணமே பார்த்தேன்!
அடிபார்த்த பொழுதினிலே அடியே பார்த்தேன்!
     அவளழகை முற்றுமாகப் பார்த்தல் என்றோ? 65
                                         தொடரும்
 

10 commentaires:

  1. என்னே ரசனை... வர்ணனை...!

    நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      என்னே சுவைஞா் தனபாலன்! என்கவியை
      முன்னே படித்து மொழிகின்றார்! - இன்னே
      அவா்செயைலைப் ஏத்துகிறேன்! அன்புடன் நன்றி!
      எவா்செயலைச் சொல்வேன் இணைத்து!

      Supprimer
  2. ஏக்கத்தின் உணர்வுகளை கவிதை ஆக்கி-அதை
    இணையத்தில் எழுதிவிட நானும் நோக்கி
    தூக்கத்தை புறந்தள்ளி ஐயா கண்டேன்-நெஞ்சில்
    தோன்றியதை பதிலாக இங்கே விண்டேன்
    ஆக்கமிது! அருமையிது!மகிழ்வே கொண்டேன்-நம்
    அன்னைமொழி இனிமைதனை சுவைத்து உண்டேன்
    தேக்கமின்றி ஓடுகின்ற நீரைப் போல-சொறகள்
    தேடிவரும் கவிபாட உமக்கே சால

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      என்னெழுத்தைப் போற்றுகின்ற புலவா் பாட்டு! - அது
      இனியதமிழ்த் தேன்கலந்து வைத்த கூட்டு!
      பொன்னெழுத்தைக் காட்டுகின்ற புலமை ஊச்சம்! - அவா்
      பூந்தமிழை நாம்படித்தால் நீங்கும் அச்சம்!
      இன்னெழுத்தை இங்கிட்டால் சிறக்கும் என்று! - நாளும்
      எழுதுகவி வாழ்ந்திடுமே காலம் வென்று!
      வன்னெழுத்தைப் போல்கொள்கை பெற்றார் தோழி! - தமிழ்
      வளா்இராமா நுசப்புலவா் நீடு வாழி!

      Supprimer
  3. உங்களை போல் தமிழ் கற்று பாடல் எழுத முடியாமல் ஏங்கும் இதயம்.
    உள்ளது உணர்வுகளை பாடலில் வடிக்க முடியாமல் தவிக்கும் இதயம்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஏங்கும் இதய உணா்வுகளை
      என்னால் உணர முடிகிறது!
      துாங்கும் பொழுதும் மனஏட்டில்
      தொடரும் கவிதை! இவ்வுலகை
      வாங்கும் திறனை வண்டமிழாள்
      வரமாய்த் தந்தாள்! தமிழ்ச்சீரைத்
      தாங்கும் தலையை நாம்பெற்றால்
      தழைக்கும் கவிதைப் பூக்காடே!

      Supprimer
  4. ''..நீள்வடிவ முக்கோண மூக்கில் சிக்கி
    நெஞ்சலைந்து தடுமாறும்! வலிமை மிக்க
    ஆல்வடிவ விழுதுகளாய் ஆசை தொங்கி
    ஆள்வடிவை அரையாக்கும்!...'''

    அருமை!...அருமை!....ஆண்டவனருள் நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மூக்கழகுப் பாட்டை மொழிந்திட்டால், நம்முடைய
      நாக்கழகு காணுமே நன்கு!

      Supprimer

  5. கட்டுக் கரும்பாகக் காதல் கவிபடைத்தீா்!
    தொட்டு மனத்தைத் துளைக்கிறது! - பட்டுப்
    பறக்கும்! பறவை பறக்கும்!உன் பாட்டு
    பறக்கும் பசுமை படைத்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      படர்கின்ற புல்லெனப் பாக்கள் படைத்தேன்!
      தொடர்கின்ற தொண்டைத் தொழுதேன்! - சுடர்கின்ற
      அன்னைத் தமிழே! அமுதக் கடலே!நீ
      என்னை இயக்கும் இறை!

      Supprimer