mercredi 26 septembre 2012

ஏக்கம் நுாறு [ பகுதி - 11 ]




ஏக்கம் நுாறு [பகுதி - 11]

கண்ணனிடம் கமழ்கோதை காதல் கொண்டு
     கலந்திட்ட நிலையானேன்! கண்ணே உன்றன்
அண்ணனிடம் இருந்தபகை முற்றும் போச்சி!
     அளவில்லா உன்னழகை அளக்கும் மூச்சி!
திண்ணனிடம் தீராத ஆட்டம் காட்டும்
     திருச்செல்வி மீன்விழிகள்! படைக்கும் மாய
வண்ணனிடம் தாழ்பணிந்தே ஒன்று கேட்பேன்
     மங்கையிவள் நடந்துவரும் மண்ணாய்த் தோன்ற! 51

சீராட்டச் சொல்லின்றி நெஞ்சம் தேடும்!
     சின்னவளின் திருவுருவே கண்முன் ஆடும்!
தேரோட்டம் கண்டதுபோல் இனிமை கூடும்!
     தேன்குடித்து மயங்கிவரும் வண்டாய்ப் பாடும்!
நீரோட்டம் போல்படைத்த கவிகள் பார்த்து
     நினைவெல்லாம் நேரிழையின் இடமே ஓடும்!
போராட்ட வாழ்வினிலும் புனையும் பாட்டுப்
     புதிதெனவே பிறந்ததுபோல் உணா்வைச் சூடும்! 52

படைதவனின் உளம்முழுதும் காதல் மேவப்
     பாவையிவள் பிறந்தாளோ? மோக ஆற்றை
உடைத்தவனின் கருணையினால் ஒளிரும் தங்க
     உடல்பெற்றுச் சிறந்தாயோ? அமுதப் பானை
கிடைத்தவனின் பேரின்பச் சுவையைப் போன்று
     கிளா்ந்தாடும் என்மனமே! இவள்பால் என்னை
அடைத்தவனின் திருவடியை வணங்கு கின்றேன்!
     அழகுலகில் விளையாட வைத்த தாலே! 53

இருவிழிகள் வேலேந்தும், இளமை யாட்சி
     ஈடின்றி நடப்பதனால் காவல் செய்ய!
தரும்மொழிகள் தேனேந்தும், குளிர்ந்த பொய்கை
     தழைத்தொளிரும் தாமரையை முகமாய்க் கொண்டு!
வரும்வழிகள் பொன்னேந்தும், கதிர்கள் தொட்டு
     வஞ்சியிவள் திருவுருவம் வடிவாய் மின்ன!
பெரும்பழிகள் புரிந்தேனோ? பெண்ணே உன்றன்
     முப்படைகள் அணிவகுத்து என்னைத் தாக்கும்! 54

கலைவாணி இசைமீட்டும் வீணை போன்று
     கட்டழகுத் திருமேனி! கவிநான் தேனீ!
மலைஞானி ஈசனுடல் பாதிப் பெண்ணே!
     மாதுளம்போல் என்முழுதும் அவளே உள்ளாள்!
சிலைமேனி பளபளப்பு! சிந்தை அள்ளும்
     சித்திரமாய் மினுமினுப்பு! உலகைக் காக்க
அலைமேனி அரிதுயிலும் அரங்கா! என்றும்
     அவள்மேனி நான்துயில வரங்கள் தாராய்!! 55
                                             தொடரும
 

6 commentaires:

  1. படத்திற்கேற்ற வரிகளா...? அருமை ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      படமும்நற் பாட்டும் படித்தவுடன் கவ்வி
      நடமிடும் செய்யும் நமை!

      Supprimer
  2. வர்ணனையும் வார்த்தை ஜாலமும் பிரமிக்க வைக்கின்றன.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சொல்லழகும் துாய பொருளழகும் கொண்டொளிரும்!
      பல்லழகும் கொண்டஎன் பாட்டு!

      Supprimer

  3. எண்சீா் விருத்தத்தில் ஈந்திட்ட ஏக்கங்கள்
    பண்சீா் படைத்துப் படர்ந்தனவே! - கண்கமழும்
    பெண்சீா் பெருமையைப் பேசினவே! நம்முடைய
    மண்சீா் மணக்கும் மலர்ந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. பொன்சீர் மிளிரப் பொழிந்திட்ட ஏக்கங்கள்
      என்சீா் புலமையில் இங்குசைத்தேன்! - இன்சீா்கள்
      கொஞ்சி விளையாடும்! கூவும் குயிலாக
      நெஞ்சி கவிபாடும் நின்று!

      Supprimer