samedi 29 janvier 2022

பாவலர் சேந்தன் குடியார்

 

பாவலர் சேந்தன்குடியாரின் விருத்தங்கள்
சாற்றுகவி

 

நாட்டுணர்வு பொங்கிவரும் நெஞ்சங் கொண்ட

   நலமேவு நற்சேந்தன் குடியார் நாளும்

பாட்டுணர்வு பொங்கிவரும் ஆக்கந் தந்தார்!

   பாட்டரசன் என்படையின் முன்னே வந்தார்!

கூட்டுணர்வு பொங்கிவரும் கொள்கை பூண்டு

   குவலயத்தை உறவென்று பாக்கள் செய்தார்!

ஏட்டுணர்வு பொங்கிவரும் கற்றோர் போற்ற

   ஈடிற்செந் தமிழாழன் வாழ்க! வாழ்க!

 

இனவுணர்வு பொங்கிவரும் இதயங் கொண்ட

   இனியதமிழ்க் கவி.சேந்தன் குடியார் தம்மின்

மனவுணர்வு பொங்கிவரும் கவிதை யாவும்

   மடமையிருள் கிழிக்கின்ற கதிரே யாகும்!

தினமுணர்வு பொங்கிவரும் மறவர் போன்று

   தீந்தமிழைக் காக்கின்றார்! எத்தர் போக்கால்

சினவுணர்வு பொங்கிவரும்! சான்றோர் வழியிற்  

   சிறக்குஞ்செந் தமிழாழன் வாழ்க! வாழ்க!

 

அன்புநெறி பொங்கிவரும் அகமே கொண்ட

   அருமாற்றல் சேர்சேந்தன் குடியார் என்றும்

இன்புநெறி பொங்கிவரும் தமிழைப் பாடி

   இசைக்கின்ற கவியாவும் தேனே என்பேன்!

வன்புநெறி பொங்கிவரும்! வானம் எட்டும்

   மாட்சிநெறி பொங்கிவரும்! அன்னை தந்த

முன்புநெறி பொங்கிவரும்! முத்தாய்ப் பண்பை

   மொழியுஞ்செந் தமிழாழன் வாழ்க! வாழ்க!

 

சீர்யாவும் பொங்கிவரும் சிந்தை கொண்ட

   திண்மைமிகு கவி.சேந்தன் குடியார் வாழ்விற்

பேர்யாவும் பொங்கிவரும்! பெற்றோர் காத்த

   பேறெல்லாம் பொங்கிவரும்! உரிமைப் பாவில்

ஊர்யாவும் பொங்கிவரும்! பாடப் பாட

   உளம்யாவும் பொங்கிவரும்! யாப்பில் உள்ள

கூர்யாவும் பொங்கிவரும்! புலமை யோங்கிக்  

   கொழிக்குஞ்செந் தமிழாழன் வாழ்க! வாழ்க!

 

கலையமுதம் பொங்கிவரும் மனமே கொண்ட

   கடமையொளிர் கவி.சேந்தன் குடியார் நுாலில்

அலையமுதம் பொங்கிவரும்! மூத்தோர் சொன்ன

   அருளமுதம் பொங்கிவரும்! வாழ்வைக் காக்குந்

தலையமுதம் பொங்கிவரும்! பாடு மன்றில்

   தமிழமுதம் பொங்கிவரும்! பழுத்துத் தொங்குங்

குலையமுதம் பொங்கிவரும் குணமே வாழ்க!

   கூர்மைத்செந் தமிழாழன் வாழ்க! வாழ்க!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம் பிரான்சு

29.01.2022


பாவலர் பத்மினி வாழியவே

 


பாவலர் பட்டம் பெற்ற

பத்மினி கேசவகுமார் பல்லாண்டு வாழ்க!

 

கண்ணன் அழகில் கட்டுண்டு

   கவிதை பாடும் பத்மினியார்

எண்ணம் யாவும் தேனுாறும்!

   இன்னேழ் இசையே ஊனுா’றும்!

வண்ணம் மிளிருஞ் சோலையென

   வானம் ஒளிருங் காலையென

எண்ணும் எழுத்தும் படைகின்றார்!

   எங்கும் புகழை விளைக்கின்றார்!

 

கொஞ்சும் தமிழை எந்நாளும்

   குழைத்துப் பாடும் பத்மினியார்

விஞ்சும் மாட்சி மனமுடையார்!

   வியக்கும் ஆட்சி மதியுடையார்!

பஞ்சும் பட்டும் போல்மென்மை

   படர்ந்து தழைக்குங் குணமுடையார்!

இஞ்சி மருந்தாம்! இவர்தும்பல்

   இசைக்கு விருந்தாம்! வாழ்த்துகிறேன்!

 

பாவாய் மொழியும், பண்ணிசையும்

   பருகி வாழும் பத்மினியார்

பூவாய் முகமும், பொலிகின்ற

   பொன்னாய் அகமும் பெற்றவராம்!

நாவாய் சுமக்கும்! நன்னெறியை

   நா..வாய் சுமக்கும்! சீர்பாடிக்

கூவாய் குயிலே! குலமோங்கிக்

   கொழிக்கத் தமிழால் வாழ்த்துகிறேன்!

 

பால்போல் வெண்மை, பொழிகின்ற

   பனிபோல் தண்மைப் பத்மினியார்

வேல்போல் வன்மைச் சிந்தனையும்

   வில்போல் கூர்மை நல்லுரையும்

ஆல்போல் செம்மை படர்செயலும்
   அணிபோல் ஒண்மை உடைநலமும்

மால்போல் அருளுங் கொடைவளமும்

   வாய்த்தார் வாழ்க பல்லாண்டே!

 

சந்து பொந்துக் களமெங்கும்

   தமிழைப் பாடும் பத்மினியார்

சிந்து சந்தம் வண்ணங்கள்

   சிந்தைக் குள்ளே விளையாடும்!

வந்து வந்து தாளங்கள்

   வார்த்தைக் குள்ளே நடமாடும்!

முந்து முந்து பாட்டுலகில்

   முன்னைத் தமிழால் வாழ்த்துகிறேன்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம் பிரான்சு

29.01.2022

mercredi 19 janvier 2022

வ.க. கன்னியப்பனார்

 


பாவலர்மணி வ.க. கன்னியப்பனார் வாழி!

 

கொடைகொடுக்கும் தங்குலத்தின் புகழே ஓங்கக்

   குணங்கொழிக்கும் கன்னியப்பர் வாழ்வைக் கண்டேன்!

அடைகொடுக்கும் நற்சுவையாய்ச் சொற்கள் ஆண்டார்!

   அணிகொடுக்கும் பேரழகாய்ச் செயல்கள் பூண்டார்!

படைகொடுக்கும் நல்லரணாய்ப் பயிற்சி மன்றில்

   பணிபுரிந்தார்! பாமணியாய்ப் பட்டம் பெற்றார்!

மடைகொடுக்கும் வளமாகப் பாடும் பாட்டில்

   நடைகொடுக்கும் புலமையினைக் கற்றார் வாழி!

 

தாய்மொழியைப் போற்றுகின்ற மரபில் தோன்றித்

   தகையொளிரும் கன்னியப்பர்  தண்மை நெஞ்சர்!

காய்மொழியை அறியாதார்! கன்ன லுாறும்

   கனிமொழியைச் சொத்தாகச் சேர்த்தார்! நல்லோர்

வாய்மொழியை வழியாக ஏற்றார்! மேன்மை

   மதியுலகம் வணங்கிடவே மாட்சி காத்தார்!

சேய்மொழியை நிகர்த்தசுவை தந்தார்! நுாலின்

   ஆய்மொழியை வியப்புறவே யிட்டார் வாழி!

 

நிலமாண்ட வேந்தரெனக் கடமை செய்த

   நிறைமனையின் கன்னியப்பர் நிலைத்தார் என்னுள்!

உலகாண்ட ஆங்கிலத்தில் ஆற்ற லோங்கி

   உயர்வாண்ட தமிழ்க்கவியைப் பெயர்த்தார்! முன்னைக்

கலமாண்ட யாப்பியலைக் கற்றுத் தேர்ந்து

   களமாண்ட மறவரெனக் கவிதை யாத்தார்!

நலமாண்ட அறமேந்தி அன்பே ஏந்திப்

   புலமாண்ட செல்வங்கள் உற்றார் வாழி!

 

சோழவந்தார் நல்லுாரில் மக்கள் போற்றும்

   தொல்குடியின் கன்னியப்பர் பாக்கள் பாடி

ஆழவந்தார் நம்மனத்துள்! அள்ளி யள்ளி

   ஆரமுதைத் தினந்தந்தார்! வெற்றிச் சீர்கள்

சூழவந்தார்! துாயோர்தம் கருணைப் பாதை

   தொடரவந்தார்! காக்கின்ற இறைவன் தாளில்
வீழவந்தார் காண்நலமாய் நன்மை ஈந்தார்!

   வேழவந்தார் என்றுரைக்க வாழ்ந்தார் வாழி!

 

முகநுாலில் முத்தாகக் கவிதை பாடி

   முன்னிற்கும் கன்னியப்பர் மெல்ல என்றன்

அகநுாலில் பதிவாகி நிலைத்தார்! தீட்டும்

   அருநுாலில் குறணெறியை விளைத்தார்! கண்கள்
புகுநுாலில் தெளிவுற்றார்! புதுமை பூக்கும்

   புகழ்நுாலில் விருப்புற்றார்! காலங் கட்டும்

இகநுாலில் பாமணியாய்ப் பதிந்தார்! அருளாம்

   சுகநுாலில் வாழ்க்கையினை நெய்தார் வாழி!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம் பிரான்சு

19.01.2022


mardi 11 janvier 2022

காதணி

 


தொங்கும் காதணி

வண்ணச் சோலையின்

வாயில் கோபுரம்!

 

மூக்கு

சறுக்கு மரமாம்!

காது

ஊஞ்சல் இடுமாம்!

 

கருணைத் தேரில்

கட்டிய சுங்கு!

 

பேரழகி

காலடியில் மகுடம்!

கதையில் கண்டேன்!

இவள்

காதடியில் மகுடம்!
நேரில் கண்டேன்!

 

காதோடும் கழுத்தோடும்

உறவாடும் அணியே!

உண்மை சொல்வாய்!

அவள் அங்கம்

பட்டுத் தன்மையா?
மொட்டு மென்மையா?

 

அமுதே!

உன்னழகால் - என்

மனம் ஆடுமே!

தொங்கும் காதணி

தினம் ஆடுமே!

 

பெண்ணே!

காதில் தொங்குவது

பொன்னணியா?  

என்னுயிரா?

 

நீ அழகா?

காது அழகா?

காதில் ஆடும் அணியழகா?

 

காதணி

ஆடு்ம் எழில்! - இன்பஞ்

சூடும் பொழில்! - எனக்கு
அதைப்

பாடும் தொழில்!

 

கோதையே!  
தொங்கல் சுற்றும்!

எனக்குப்
போதையே முற்றும்!

 

கண்ணே!

உன்னைத் தொட்டுத் தொட்டுக்

காதணிகள் கூத்தாடும்!

என்னைத் தொட்டுத் தொட்டுக்

கவியணிகள் பூத்தாடும்!

 

அன்பே!

உன் சொல்லே

வேதமெனத் தலையாட்டுவோம்!

நானும் காதணியும்!

 

அழகே!

இங்கும் அங்கும்

காதணி

மின்னி அசையும் - என்னைப்

பின்னிப் பிசையும்!

தேவதையே!

அடுத்த பிறப்பில் - யான்

காதணியாய்ப் பிறப்பேன்!

உன் செவியோடு

உறவாடிக் களிப்பேன்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம் பிரான்சு

11.01.2022