Affichage des articles dont le libellé est ஓரொலி வெண்டுறை. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est ஓரொலி வெண்டுறை. Afficher tous les articles

jeudi 11 septembre 2025

ஓரொலி வெண்டுறை



ஓரொலி வெண்டுறை
 
அரசியலார்!
 

ஊழல் முதலைகளை உளமாரப் பாடி உவக்கும் புலவர்

சூழல் அனைத்தையும் சுருட்டுகின்ற தலைவ தம்மால்

ஏழை  துயர்நீங்க எள்ளளவும் வழியுண்டோ?

 

பூட்டியுள வீட்டைப் பொறிக்கிகள் தாம்கொண்டு சொந்த மாக்கி

நாட்டியுள சொத்து நாலிரு தலைமுறைக்கு வருமே! இவர்கள்

நாட்டிலுள வஞ்ச நரியெனச் சாற்றுகவே!

 

அடியாள் கொண்டாச்சி நடத்துவதா? அன்பின்றிக் கூர்மைக் கத்தி

தடியால் கொண்டாச்சி தள்ளுவதா? துடிதுடிக்க அழிவே நல்கும்

வெடியால் கொண்டாச்சி  மிரட்டுவதா? என்னாடே!

 

தலைவனின் இருதாள்கள் தழுவி நக்குகின்ற தொண்டன் தானே
கொலையனின் மிகுகொடியன்! கொள்ளை யிடுகின்ற கள்ளன்! பதவி
விலையனின் அடிவேரை வெட்டி வீழ்த்துகவே!


கால்நக்கிப் பதவி பெறுகின்ற கட்சித் தலைவன்! பத்தி

வேல்நக்கிப் பதவி பெறுகின்ற வெற்றுத் தொண்டன்! பணத்தில்

மேல்நக்கிப் பதவி விளைகின்ற என்னாடே!

 

மாடேயிலா நிலைமைக்கும்,  மனையேயிலா வீட்டுக்கும்

கடன்தருவார்! விளையும்

காடேயிலா உழவுக்கும், கடையேயிலாத் தொழிலிக்கும் 

கடன்தருவார்! சின்ன

ஏடேயிலாக் கணக்கெழுதி ஏப்பமிடும் என்னாடே!

 

நாட்டுப்பணம் என்ன? நல்லோர் பணமென்ன? நம்பித் தந்த  

காட்டுப்பணம் என்ன? கண்ணீர்ப் பணமென்ன? ஆட்டை போட்டு

வீட்டுப்பணம் ஆக்கும் விந்தை நாடிதுவே! 

 
முன்னே ஈரடிகள் ஆறு சீர்களையும் பின்னோர் அடி நான்கு சீர்களையும் பெற்றுச் சிறப்பில்லா  ஏழு தளையாலும் வந்த ஓரொலி வெண்டுறை.
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு
உலகத் தமிழ்ச் சிறகம்
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
பாவலர் பயிலரங்கம், பிரான்சு.
11.09.2025

mercredi 10 septembre 2025

ஓரொலி வெண்டுறை

 


ஓரொலி வெண்டுறை

 

அடிமை மனிதன்!

 

அயலார் மொழியைப் போற்றிடுவான்!

……….அல்லும் பகலும் கற்றிடுவான்!

உயிராம் தமிழை மறந்திடுவான்!

……….உலகில் தன்னைப் புகழ்ந்திடுவான்!

புயலார் கடலே பொங்கு!

 

மையூட்டு மங்கையரின்

……….மார்பூட்டு மின்பத்தில் மயங்குந் தலைவன்!

கையூட்டுஞ் செல்வத்துள்

……….கலையூட்டும் பெருமனையிற் களிக்குந் தலைவன்!

பையூட்டும் வாக்குகளைப் பார்!

 

வெள்ளை யாடை கொள்ளைக் கூட்டம் வேண்டித் தொழுது

பல்லைக் காட்டும்! பாடிப் போற்றும்! பாதப் பற்றுக்[கு]

எல்லை இல்லை இவர்க்கு!

 

மதவெறி நிறவெறி மண்ணை மாய்க்கும்! மனிதா உன்றன்

மதிவெறி மனவெறி வாழ்வை மாய்க்கும்! மனிதங் குன்ற

விதிவெறி பிடித்தெழும் மிரண்டு!

 

திரைத்துறையில் இருப்பவரை

……….மனத்திரையில் பதிக்கின்ற அடிமைப் போக்கும்

இறைத்துறையில் இருப்பவரை

……….இறைவனெத் துதிக்கின்ற  மடமைப் போக்கும்

நிறைதுறையில் ஒளிர்ந்திடுமா நிலம்?

 

வாக்கேயிடப் பணமேபெறும்

……….மதியில்லா மனிதர்காள்! வாதும் துாதும்

நாக்கேயிடத் தொழுதேயெழும்

……….நரம்பில்லா மனிதர்காள்! நாட்டில் உம்மைத்

துாக்கேயிட நினைத்தேன்தினம் தொடர்ந்து!

 

சாதியைத்தலை மேல்சுமந்திடும்

……….தந்நலத்து வாதிகளே! ஒன்று சொல்வேன்

நீதியைத்தலை மேல்சுமந்திடும்

……….நிலையுற்றால் வாழ்வோங்கும்! இல்லை சங்கம்

ஊதியேத்தலை மேல்நெருப்பிடும் உணர்!

 

முன்னே ஈரடிகள் ஆறு சீர்களையும் பின்னோர் அடி மூன்று சீர்களையும் பெற்றுச்  சிறப்புடைய ஏழு தளையாலும் வந்த ஓரொலி வெண்டுறை.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

10.09.2025


வேற்றொலி வெண்டுறை

 


வேற்றொலி வெண்டுறை


கீழடி

 

மூத்த குடியாகும் மொழியுலகத் தாயாகும் கீழடி!

காத்த நற்புகழைக் கணக்காக மறைத்திடுவார்!

ஆத்தாடி துாங்காதே அவர்நம்மைப் புதைத்திடுவார்!

 

நேர்கொண்ட சாலைச் சீர்கொண்ட செந்தமிழின் கீழடி!

வேர்கொண்ட தமிழை விரைந்திங்கு மறைத்திடுவார்!

கார்கொண்ட குழலி! போர்கொண்டு வென்றிடுவோம்!

 

தொன்மை மிக்குடைய துாயதமிழ் மாண்பொளிரும் கீழடி!

வன்மைத் தமிழுடைய வரலாற்றை மறைத்திடுவார்!

நன்மை மனத்தவளே! நம்மொழியைக் காத்திடுவோம்!

 

அலைகடல் அழித்தென்ன? அருந்தமிழின் ஆண்டுரைக்கும் கீழடி!

கொலைவெறி கொண்டுள்ள கொடுங்கொடியர் மறைத்திடுவார்!

கலைவிழிக்  காரிகையே! காத்திடவே முன்னிற்போம்!

 

பண்டைமிகு  தமிழினமே மண்ணில் முதலென்னும் கீழடி!

மண்டைக் கொழுப்புடையோர் வரலாற்றை மறைத்திடுவார்!

கெண்டை விழியழகே! நம்அண்டைப் பகையொழிப்போம்!

 

அன்னைத்தமிழ் மொழியின் முன்னைப் புகழ்சாற்றும் கீழடி!

தன்னைப் பெரிதென்னும் தருக்கர் மறைத்திடுவார்!

பொன்னை நிகர்த்தவளே! இன்றே புறப்படுவோம்!


ஓங்குந்தமிழ் காத்த ஒப்பிற்றமிழ் பூத்த கீழடி!

வீங்கு வெறியுடைய வீணர் மறைத்திடுவார்!

தாங்கு புலிக்கொடியைத் தீமை அகன்றிடுமே!

 

முன்னோர் அடி ஐந்து சீர்களையும் பின்னிரண்டு அடிகள் நான்கு சீர்களையும் பெற்றுச் சிறப்பில்லா ஏழு தளையாலும் வந்த  மூன்றடி வேற்றொலி வெண்டுறை.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

10.09.2025

dimanche 31 août 2025

வேற்றொலி வெண்டுறை

 

வேற்றொலி வெண்டுறை

 

        வேற்றொலி வெண்டுறை முன் சில அடிகள் ஓரொசையாகவும், ஏனைய அடிகள் வேறோர் ஓசையாகவும் வரும். [முன்னடிகள் பல ஓசையிலும் பின்னடிகள் பல ஓசையிலும் வருதலும் வேற்றொலி வெண்டுறையாம்]

 

மூன்றடி வேற்றொலி வெண்டுறை

 

கண்ணன் திருவடியைக் கண்டு களித்திடவே நாளும்

எண்ணம் ஒன்றி இதயம் மலர்ந்திடவே

தண்ணம் பாக்கள் தழைத்துச் செழித்திடுமே!

                         [பாட்டரசர் கி. பாரதிதாசன்] 31.08.2025

 

        இது மூன்றடியாய், முன்னடி ஐஞ்சீரும் பின் இரண்டடிகள் நாற்சீரும் முதலடி சிறப்பில் இயற்சீர் வெண்டளையும் பின் இரண்டடிகள் சிறப்புடைய நேரொன்றாசிரியத் தளையும் வந்த வேற்றொலி வெண்டுறை.

 

நான்கடி வேற்றொலி வெண்டுறை

 

சற்குருவாம் அவர்பலரில் தலைமைபெறு பழனிமலை

        தண்ட பாணி

நிற்குநிலை யுணர்ந்தவன்றன் எழுத்தாறுஞ் சந்ததமும்

        நிகழ்த்த வல்லார்

கற்கு..நா வலர்பெருங் கருணை மாதவர்

விற்குனித் தமர்செயும் விறற்கை வீரரே

                         [அறுவகை இலககணம் மேற்கோள் பாடல்]

 

இது நான்கடியாய், முன்னுள்ள இரண்டடிகள் அறுசீராய்ப் பின்னுள்ள இரண்டடிகள் நாற்சீராய் முன்னடிகள் சிறப்புடைய கலித்தளையும் பின்னடிகளில் சிறப்புடைய நிரையொன்றாசிரியத் தளையும் வந்த வேற்றொலி வெண்டுறை.

 

ஐந்தடி வேற்றொலி வெண்டுறை

 

மாலாயுதம் அருள்கொடுக்கும்! முருகன் கொண்ட

வேலாயுதம் பகையுடைக்கும்! வேந்தன் இராமன்

நீலாயுதம் குறியெரிக்கும்! நேயப் புலவர்

கோலாயுதம் புவிபுரட்டும்! கொஞ்சும் பெண்ணுன்

சேலாயுதம் பேசும் சிரித்து!

                         [பாட்டரசர் கி. பாரதிதாசன்] 31.08.2025

 

இது ஐந்தடியாய், முன்னுள்ள நான்கடிகள் நாற்சீராய், ஈற்றடி முச்சீராய், நான்கடிகள் சிறப்பில் ஒன்றிய வஞ்சித்தளையும் ஈற்றடி சிறப்பில் ஒன்றாத வஞ்சித்தளையும் வந்த வேற்றொலி வெண்டுறை.

ஆறடி வேற்றொலி வெண்டுறை

 

மூவேந்தர் முன்வாழ்ந்த முத்தமிழே! மூத்தவளே!

        மூவா தென்றும்

நாவேந்தர் நாவினிலே நடம்புரிந்த நற்றமிழே!

        நாளும் வல்ல

பாவேந்தர் பாடிநின்ற பசுங்குயிலே! பைந்தமிழே!

        பரிவோ டுன்னைப்

பூவேந்திப் புனைகின்றேன்! புகழேந்தி வந்திடுவாய்!

மாவேந்தி மணந்திடுவாய்! மதுவேந்திச் சுரந்திடுவாய்!

காவேந்திக் கமழ்ந்திடுவாய்! கால்தொட்டுத் தொழுகின்றேன்!

                         [பாட்டரசர் கி. பாரதிதாசன்] 31.08.2025

 

இது ஆறடியாய், முன்னுள்ள மூன்றடிகள் அறுசீராய்ப், பின்னுள்ள மூன்றடிகள் நாற்சீராய்  முதலில் சிறப்புடைய வெண்டளையும் ஈற்றில் சிறப்புடைய கலித்தளையும் வந்த வேற்றொலி வெண்டுறை.

ஏழடி வேற்றொலி வெண்டுறை

 

வளர்ந்தோங்கும் தென்னைகளும் வாழைகளும் நிறைந்திருக்கும்!

      வாய்க்கால் பாய்ந்தே

உளந்தேங்கும் இன்பத்தை ஊரார்க்குத் தான்வழங்கும்!

        உண்மை ஒளிரும்!

கழுத்துாரை யாளும் கருணைமிகு தாயால்

எழுத்துாரை யாளும் எழிற்புலமை மேவும்!

இழுத்துாரை யாளும் இவளடிகள் போற்றக்

கொழுத்துரை யாளும் கோலமிகு காட்சி!

பழுத்துாரை யாளும் பைந்தமிழின் மாட்சி!

                         [பாட்டரசர் கி. பாரதிதாசன்] 31.08.2025

 

        இது ஏழடியாய், முன்னுள்ள ஈரடிகள் அறுசீராய்ப், பின்னுள்ள நான்கடிகள் நாற்சீராய், இரண்டடிகள் சிறப்புடைய வெண்டளையும் நான்கடிகள் சிறப்பில் வெண்டளையும் வந்த வேற்றொலி வெண்டுறை. விதிவிளக்காய் இரண்டு விகற்பத்தாலும் இப்பாடல் அமைதலும் உண்டு. [பல விகற்பமும் இரண்டுக்கு மேற்பட்ட ஓசையும் வந்துள்ள வெண்டுறைகள் நுால்களில் காண்கிறோம். அவை சிறப்பில்லை என்றுணர்வோம்]

 

ஒத்த நுாற்பாக்கள்

 

ஐந்தாறு அடியின் நடந்தவும் அந்தடி

ஒன்றும் இரண்டும் ஒழிசீர்ப் படுநவும்

வெண்டுறை நாமம் விதிக்கப் படுமே 

                              [அவிநயனார்]

 

பெற்றவடி ஐந்தினும் பிறவினும் பாட்டாய்

இற்ற அடியும் ஈற்றயல் அடியும்

ஒன்றும் இரண்டும் நின்ற வதன்சீர்

கண்டன குறையின் வெண்டுறை யாகும்

                              [மயேச்சுரர்]

 

அடிஐந் தாகியும் மிக்கும் ஈற்றடி

ஒன்றும் இரண்டும் சீர்தப வரினும்

வெண்டுறை என்னும் விதியின வாகும்

                              [காக்கை பாடினியம்]

 

மூன்றிழிபு இழிபு ஏழுயர்வாய்

ஆன்றடி தாம்சில அந்தம் குறைந்திறும் வெண்டுறையே

                              [யாப்பருங்கல் காரிகை - 28]

 

மூன்றடி முதலா ஏழடி காறும்வந்து

ஈற்றடி சிலசில சீர்குன் றினும்அவை

வேற்றொலி விரவினும் வெண்டுறை ஆதலும்

                              [இலக்கண விளக்கம் - 731]

 

மூன்றிழிவு ஏழடிபொருந்தி

ஆன்றவந் தங்குறையின் வெண்டுறை யென்பர்

                              [வீரசோழியம் - 121]

 

வெண்டுறை யன்னவை விரவினும் மூன்றடி

ஆதி ஏழடி அந்தமாய் ஈற்றிற

சிலவடி தஞ்சீர் சிலகுறைந் திறுமே

                              [தொன்னுால் விளக்கம் - 239]

 

மூன்றடி முதலாய் ஏழடி காறும்வந்து

ஈற்றடி சிற்சில சீர்தப நிற்பினும்

வேற்றொலி விரவினும் வெண்டுறை யாகும்

                      [முத்து வீரியம்  21]

ஈரடி பேதித்து இசையும்நா லடிப்பா

வேற்றொலி யாமென விளம்பினர் சிலரே

                      [அறுவகையிலக்கணம் - 44]

மூன்றடி முதலாய் ஏழடி வரையில்

ஈற்றடி அயலடி சீர்பல குறைந்து

நாற்சீர் அடிமுதல் எல்வகை அடியினும்

வேற்றொலி ஓரொலி வருவன வெண்டுறை

                         [யாப்பு விளக்கம், புலவர் ப. எழில்வாணன்]

 

பெருமை ஏழடி சிறுமை மூவடி

அருமை யாக அளவும் நெடிலும்

மிக்கும் சீர்பெறும் மேலா மடிகள்! 

தொக்கும் ஈற்றடி முச்சீர் குன்றா!

முன்னைத் தம்மில் பின்னைத் தாமே

ஒன்றும் பலவும் குன்றும் சீர்வரும்!

இன்னரும் ஓரொலி எல்லா அடிக்கும்

முன்னிரு சீர்கள் ஒன்றித் தளையுறும்!

மேலே ஓரொலி கீழே ஓரொலி

ஏல வருதல் கோல வேற்றொலி!

எல்லாச் சீரும் ஈரேழ் தளையும்

வல்லமை யேற்று வாழும் வெண்டுறை! 

                              [பாட்டரசர் கி. பாரதிதாசன்] 31.08.2025

பாட்டரசர் கி. பாரதிதாசன்

31.08.2025

வெண்டுறை

 

வெண்டுறை  

 

மூன்றடி முதலா ஏழடி காறும்வந்து

ஈற்றடி சிலசில சீர்தப நிற்பினும்

வேற்றொலி விரவினும் வெண்டுறை யாகும்

                      [யாப்பருங்கலம் - 67]

 

        மூன்றடியாலும், நான்கடியாலும், ஐந்தடியாலும் ஆறடியாலும் ஏழடியாலும் வெண்டுறை வரும். [சிற்றெல்லை மூன்றடி, பேரெல்லை ஏழடி] கடைக்கண் ஓரடியிலும் பல அடிகளிலும் ஒரு சீரும் பல சீரும்  குறைந்து வரும். முன்னடிகளில் நான்கு சீர்களுக்குக் குறையாமல் எத்தனைச் சீர்களும் வரலாம். ஈற்றடிகளில் முச்சீருக்குக் குறையாமல் எத்தனைச் சீர்களும் வரலாம். [முதலில் நான்குச் சீர்களுக்குக் குறையாமல் வருதல், ஈற்றில் மூன்று சீர்களுக்குக் குறையாமல் வருதல் வெண்பா இனத்தின் பொது நெறியாகும்] ஒவ்வோர் அடியிலும் தகுந்த இடங்களில் மோனை அமைய வேண்டும். வெண்பாவினப் பொதுவிலக்கண நெறிப்படி அடிகள் யாவும் ஓரெதுகை பெற வேண்டும்.

 

        எல்லா அடிகளும் ஒரே ஓசையாய் வருவதும் உண்டு. வேறு வேறு ஓசைகளில் வருதலும் உண்டு. முதல் சில அடிகள் ஓரோசையாகவும், ஏனைய அடிகள்  வேறோர் ஓசையாகவும் வருதலுமுண்டு. பாடல் முழுதும் ஓரோசையாக வருவது ஓரொலி வெண்டுறை, வெவ்வேறோசையாக வருவது வேற்றொலி வெண்டுறை.

 

        மூன்றடி வெண்டுறை இன்னிசைச் சிந்தியல் வெண்பாவின் இனம், நான்கடி வெண்டுறை இன்னிசை அளவியல் வெண்பாவின் இனம், ஐந்து, ஆறு, ஏழு அடிகளைக் கொண்ட வெண்டுறை பஃறொடை வெண்பாவின் இனம்.

 

        ஓரொலி வெண்டுறை, வேற்றொலி வெண்டுறைப் பாடல்களில் ஓரொலி எவ்வாறு அமையும் என்ற விளக்கம் யாப்பிலக்கணத்தை உரைக்கும் முன்னை விளக்கவுரைகளிலும், இக்கால யாப்பிலக்கண உரை நுால்களிலும் காணவில்லை.

 

        சிதம்பரப் பாட்டியல் வெண்டுறையைக் கூறவில்லை. பாப்பாவினம் வேற்றொலிப் பாடல்களை மட்டும் காட்டுகிறது. தவத்திரு தண்டபாணி சுவாமிகள் இயற்றிய  அறுவகை இலக்கணம் வேற்றொலி வெண்டுறையை மட்டும் கூறுகிறது அவ்வேற்றொலி நான்கடியால்வர வேண்டும் என்று புதியநெறியை உரைக்கிறது. இனப்பாடல்கள் ஓரெதுகையில் அமையும் பொதுவிதியைக் கடந்து இரண்டு விகற்பத்தால் அமைந்த வேற்றொலி வெண்டுறையைக் நுால்களில் காண்கிறோம். வீரமாமுனிவா் அருளிய தொன்னுால் விளக்கத்திலும் இரு ஒலிக்கான குறிப்பு இல்லை. சில இலக்கண நுால்கள் ஓரொலி வெண்டுறையை வேற்றொலி என மாற்றி உரைக்கின்றன. இலக்கணப் புலவர் த. சரவணத்தமிழின் இயற்றிய யாப்பு நுாலில் வெண்டுறை இல்லை.      ஆர். சீனிவாசராகவாசார்ய சிரோமணி இயற்றிய யாப்பொளி எனும் நுாலில் ஓரொலி வேற்றொலி என்ற நெறியின்றி பாடல்கள் உள்ளன.

 

        புத்தமித்திரனார் இயற்றிய வீரசோழிய உரை நேரிசை வெண்பா தளை தட்டி ஓசை கொடின் வெண்டுறை என்று உரைக்கிறது. [வெண்பா பெற்றிருக்கும் உயர்வைக் கருதி இக்கருத்தை விட்டுவிட வேண்டும் என்பது என் கருத்து]

 

புலவர் குழந்தை எழுதிய தொடையதிகாரம் நுாலில் குறள் வெண்செந்துறையை வெண்டுறை என்று பதிவு செய்துள்ளார்.

 

கூவாய் பூங்குயிலே! குளிர்மாரி தடத்துகந்த

மாவாய் கீண்டமணி வண்ணனைவரக்

கூவாய் பூங்குயிலே

[நாலாயிரப் பனுவல், பெரிய திருமொழி - 1942]

 

        வெண்டுறையின் ஈற்றடி முச்சீருக்குக் குறைந்துவருதல் வெண்பா இனத்தின் பொது விதிக்கு மாறுபட்டதாகும்.

 

        முகநுால் பதிவுகளில் ஓரொலி என்று பெரும்பான்மை வேற்றொலி பாடல்களே பதிவாகி உள்ளன.

 

        ஓரொலி வேற்றொலி ஆகிய ஓசை வேறுபாட்டினையெல்லாம் வல்லார்வாய் கேட்டுணர்க என்னும் கருத்தும் யாப்பியல் நுாலில் பதிவாகி உள்ளது.

 

        இக்காலப் புலவர் பலர் ஓரே வாய்பாட்டில் அனைத்து அடிகளும் அமைதல் ஓரொலி வெண்டுறை என்றும், மேலுள்ள அடிகள் ஒரு வாய்பாட்டிலும் கீழுள்ள அடிகள் வேறு வாய்பாட்டிலும் அமைதல் வேற்றொலி வெண்டுறை என்றும் பாடல் எழுதியுள்ளனர். இவ்வாறு எழுதிய பாடல் முன்னை இலக்கண நுால்களில் உள்ள வெண்டுறைக்குப் பொருந்தவில்லை.

 

        ஓரொலி என்றால் என்ன? வேற்றொலி என்றால் என்ன? என்பதை அறிந்து கொள்ள எந்நுாலிலும் விளக்கம் இல்லை.

 

        ஓரொலி வெண்டுறை வேற்றொலி வெண்டுறை சிறப்புடைய ஏழு தளையாலும் சிறப்பில் ஏழு தளையாலும் கூறுபடுப்பப் பதினான்காம். பிறவாற்றால் விகற்பிக்கப் பலவாம் என யாப்பருங்கல விருத்தி யுரையில் காண்கிறோம்.

 

வெண்டுறை பாடலில் உள்ள அடிகள் அனைத்தும் முதல் இரு சீர்கள் ஒரே தளை பெற்று வருதல் ஓரொலி வெண்டுறை. வேறு வேறு தளை பெற்று வருதலும், முன்னடிகள் ஒரு தளையைப் பின்னடிகள் வேறு தளை பெற்று வருதலும் வேற்றொலி வெண்டுறை. இந்நெறியின்படி இலக்கண நுால் காட்டுகின்ற பாடல்கள் பெரும்பான்மை ஒத்து வருகின்றன. 

      

மூன்றடி வெண்டுறை

 

பரசிருக்கும் தமிழ்மூவர் பாட்டிருக்கும் திருமன்றில்

        பரசொன் றேந்தி

அரசிருக்கும் பெருமானார்க்[கு] ஆட்செய்யர் என்செய்வார்

முரசிருக்கும் படைநமனார் முன்னாகும் அந்நாளே

                                                  [சிதம்பரச் செய்யுட்கோவை மேற்கோள்]

 

பொன்னேந்திப் பொருளேந்திப் புவிபோற்றும்

புகழேந்திப் பூத்த வாழ்வு

துன்பேந்திக் கிடக்கிறது! துணையின்றித் தவிக்கிறது!

அன்பேந்தி அணைத்தவளே! அழவைத்துப் போனதுமேன்?

                         [பாட்டரசர் கி. பாரதிதாசன்] 31.08.2025

     
           இவை முதலடி அறுசீராய் ஏனையடி நாற்சீராய் அடிதோறும் முதல் இருசீர்கள் சிறப்புடைய கலித்தளையை வந்த ஓரொலி வெண்டுறை.

பாட்டரசர் கி. பாரதிதாசன்

31.08.2025