விருத்த மேடை - 98
சந்தக் கலிவிருத்தம் - 15
தந்த+தந்ததன+தந்தன +தானா
[3+5+4+4 சந்த மாத்திரை]
நஞ்சு மஞ்சு[ம்]விழி நாகியர் நாண
வஞ்சி யஞ்சுமிடை மங்கைய[ர்] வானத்[து]
அஞ்சொ லின்சுவைய ரம்பைய ராடிப்
பஞ்ச மஞ்சிவணு மின்னிசை பாட
[கம்பன், யுத்த. இராவணன் வானரத்தானை - 4]
தந்த+தந்ததன+தந்தன +தானா என்ற அமைப்புடைய பாடல் இது. முதற்சீர் 3 மாத்திரை. இரண்டாம் சீர் 5 மாத்திரை. முன்றாம் சீரும் நான்காம் சீரும் 4 மத்திரை.
முதல் சீராகத் தான, தாந்த, தனன என்பனவும் வரும். இரண்டாம் சீராகத் தானதன என்பதுவும் வரும். மூன்றாம் சீராகத் தானன என்பதும் வரும். இறுதிச் சீராகத் தான, தந்த, தந்தா என்பனவும் இவை இறுதியில் ஒற்றுப்பெற்றனவும் வரும். மோனை 1, 3 ஆம் சீர்களில் அமையும்.
சின்ன கண்களடி சிந்தனை கூடும்!
என்ன இன்பமடி என்மன மாடும்!
சொன்ன சொற்களடி தொன்மொழி சூடும்!
கன்ன லிட்டதடி கற்பனை யூறும்!
மேற்கண்ட சந்தக் கலிவிருத்தம் ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
29.11.2023

