mardi 28 avril 2015

அருண்மிகு சீனிவாசப் பதிகம்



முதலியார்பேட்டைச் 
சீனிவாசப் பெருமாள் பதிகம்

1.
சீர்மேவும் வன்னியரின் செல்வத் திருமாலே!
கார்மேனி வண்ணனே! கண்ணனே! - பார்மேவும்
திங்கள் திகழொளியே! செம்பொருளே! வாழ்வினில்
தங்கும் நலங்களைத் தா!

2.
தாமோ தரனே! தனிப்புகழ் பெற்றிலங்கும்
மாமோ கனனே! மலர்முகனே! - காமோதும்
தென்றல் தருஞ்சுகமே! தென்னவனே! என்றெனுக்கு
உன்றன் உறவே உறவு!

3.
உறவானாய்! கொண்ட உயிரானாய்! என்றும்
அறமானாய்! அன்பானாய்! ஆக்கும் - திறமானாய்!
தீட்டும் தமிழானாய்! தேடிவரும் நீரானாய்!
சூட்டுமணி யானாய்ச் சுடர்ந்து!

4.
சுடராழி கண்டேன்! திருச்சங்கம் கண்டேன்!
இடராழி நீக்குமெழில் கண்டேன்! - தொடராழி
என்னும் பிறப்பகலக் கண்டேன்! இன்மையெலாம்
ஒன்னும் நிலைகண்டேன் ஓர்ந்து!

5.
ஓது மறையே! உலகளந்த பெம்மானே!
மாதுறை மார்பனே! மாயவனே! - சூதுமனம்
ஏன்எனக்குச் சொல்லரசே! எந்நாளும் துாயமனத்
தேன்எனக்கு ஈவாய்த் தெளிந்து!

6.
தெளிந்த இசையோடு தேன்தமிழில் பாட!
விளைந்த பசுமைவளம் மேவ! - வளைந்தாடும்
வேய்க்குழல் மாமணியே! வெல்லும் திறனுடைய
தாய்த்தமிழ் ஊட்டும் தழைத்து!

7.
ஊட்டும் குவிமுலைபோல் ஊறும் அருளாளா!
வாட்டும் துயர்போக்கும் மாண்பாளா! - காட்டு
மலர்மணமாய் வீசும் மணவாளா! என்றன்
உளம்நிறைந்த சொல்லாய் ஒளிர்!

8.
சொற்சிறக்க என்றும் சுடர்பனுவல் சீர்நுாலைக்
கற்றுக் களித்திடக் கண்காட்டு! - நற்றவனே!
நாரா யணனே! நறுஞ்சீனி வாசனே!
தீராய் வினைகளைத் தீய்த்து!

9.
வினைகளைத் தீய்த்து விழைந்தெனைக் காத்து
நினைவினை மேலுயர்த்தி நிற்பாய்! - பினைந்துள்ள
பொல்லாப் பிணிநீங்கப் பொன்னொளிர் தாள்காட்டும்!
எல்லாமும் ஆனாய் எனக்கு!

10.
எல்லா உயிர்க்கும் இனிமை தருகின்ற
வெல்லும் திருமாலே வேண்டுகிறேன்! - நல்லுயா்
அப்பனும் அம்மையும் ஆனவனே! உன்புகழைச்
செப்பச் சிறக்குமாம் சீர்!

30.01.2015

lundi 27 avril 2015

samedi 25 avril 2015

அவள் ஒரு கவிதை




அவள் ஒரு கவிதை!

அவள்
ஒரு கவிதை!
என்னை வாழ்விக்க வந்த
தமிழ்த்...தை!

மெய்யெழுத்தாய் நான்!
உயிரெழுத்தாய் அவள்!
புணர்ந்து படைக்கின்றோம்
புதுப்புதுக் கவிதை!

அசையும் விழிகள்
ஆயிரம் கவிகளைச் சொல்லும்!

ஊடல் பார்வை
நேரசை என்பேன்!
கூடல் பார்வை
நிரையசை என்பேன்!

மாச்சீர்
அவளின் வண்ணங்கள்!
விளச்சீர்
அவளின் எண்ணங்கள்!

காய்ச்சீர்
அவளிடம் உண்டு!
கனிச்சீர்
அவள்தரும் தொண்டு!
பூச்சீர்
அவளின் பொன்முகம்!
நிழற்சீர்
அவளின் மென்னகம்!

கவிதை எழுதக்
கற்றுத் தருவதில்
அவள் ஆசிரியத்தளை!

எனக்குமட்டும்
சொந்தம் என்பதால்
அவள் வெண்டளை!

காய்மனம் கொண்ட
என்னோடு
கனிமனம் கொண்ட
அவள் இணைவதால்
கலித்தளை!

வஞ்சி என்பதால்
அவளுக்கே உரியது
வஞ்சித்தளை!

சீறடிச் செம்மலர்
சிந்தையை அள்ளும்!
சீர் அடி நல்கிச்
செந்தமிழ் துள்ளும்!

மோனை போன்று
மோகம் கொடுப்பவள்!
எதுகை போன்று
என்னோடு இருப்பவள்!

வாழைத் தொடையும்
வண்ண நடையும்
அவளிடம் உள்ளன!

விழியோ வல்லினம்!
மொழியோ மெல்லினம்!
உண்டோ இலையோ
இடையினம்?

ஆசிரியப்பா
அவளின் இல்லம்!
வெண்பா
அவளின் உள்ளம்!
கலிப்பா
அவளின் உருவம்!
வஞ்சிப்பா
அவளின் பருவம்!

கற்றோர் இடத்தில்
நூற்படை யுண்டு!
கன்னி அவளிடத்தில்
நூலிடை யுண்டு!

அணிகளால்
அருந்தமிழுக்கு அழகு!
அவளால்
அணிகளுக்கு அழகு!

கவிதையும்
போதை தரும்!
அவள் கண்களும்
போதை தரும்!

கவிதை எழுத
ஊற்றுவது மை!
அவள்
கண்களில்
தீட்டுவது மை!

கார்மேகம்
கவிதைக்குக் கரு கொடுக்கும்!
கார்க்குழல்
காதலுக்கு உரு கொடுக்கும்!

முத்தமிழின்
மொத்தச் சுவையினைப்
பெற்ற பாவை!
நெஞ்சே!
அவளைப் போற்றி
அமுதப்பா வை!

தமிழ்போல் என்றும்
இனிப்பவள்!
ஆம்...
அவள் ஒரு கவிதை! 

24.04.2015
 

mercredi 22 avril 2015

கண்ணீர் அஞ்சலி



தமிழ்த்தொண்டர் சு. மதிவாணன் அவர்களுக்கு

கண்ணீர் அஞ்சலி

தேங்கு துயரில் எமையாழ்த்தித்
     தேவன் அடியைச் சேர்ந்ததுமேன்?
ஈங்குன் தொண்டை யார்செய்வார்?
     என்றன் தோழா! மதிவாணா!
தாங்கும் நெஞ்சம் இல்லாமல்
     தவிக்கும் கம்பன் உறவுகளே!
ஏங்கும் பிரான்சு தமிழுலகம்
     என்று மீண்டும் வருவாயோ?

மீளா உலகம் கண்டிடவே
     விரைந்து நீயும் சென்றாயோ?
தோளாய் இருந்து செயற்பட்டாய்!
     தோழா! தூய மதிவாணா!
கேளா திருப்போம் என்றெண்ணிக்
     கிளம்பிப் போனாய்ச் சொல்லாமல்!
தாளாத் துயரில் தவிக்கின்றோம்
     தமிழைச் சுவைக்க வருவாயோ?

பிரான்சுக் கம்பன் கழகத்தின் தொண்டர் சு. மதிவாணன் அவர்கள் 20/04/2015 அன்று இந்தியாவில் இயற்கை எய்தினார்
என்ற செய்தியை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவிக்கின்றோம்
22/04/015  இன்று புதுவையில் இறுதி அஞ்சலி நடைபெறுகிறது
அவரின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற வேண்டுகிறோம்

mardi 21 avril 2015

உன்னுள் கலந்த உயிர்!




உன்னுள் கலந்த உயிர்!

1.
கா..கா.. என..நீ கதைத்துக் சிணுங்குவதும்
வா..வா.. எனும்நல் வரவேற்பாம்! - போ..போ..போ
என்று வெறுப்பதுவும் இன்றுநம் ஊடலினை
வென்று அளிக்கும் விருந்து!

2.
வவ்வவே என்று வடிவெடுத்துக் காட்டுவது
எவ்வளவு இன்பம்! இளையவளே! - செவ்வானம்
மெல்ல இருட்டுதடி! மேனிக்குள் ஏதேதோ
செல்லத் துடிக்குதடி சேர்ந்து!

3.
ஏனடி பார்த்தாயோ? என்னடி செய்தாயோ?
தேனடிப் பாக்கள் திரளுதடி! - வானமுதே!
பொன்னுள் கலந்த பொருளாக மின்னுதடி
உன்னுள் கலந்த உயிர்!

4.
என்னப்பா என்றென்னை ஏங்கி அழைத்தவுடன்
இன்தெப்பம் தன்னில் இறங்குகிறேன்! - பொன்னப்பா
என்றிறையைப் போற்றி இறைஞ்சுகிறேன்! நீயன்றோ
என்குறையைப் போக்கும் எழில்!

5.
வண்ண மயிலென்று வார்த்த கவியிசை
எண்ணம் முழுதும் இனித்ததடி! - உண்ணப்
பிடிக்காமல் உள்ளம் துடிக்குதடி! அன்பே
நடிக்காமல் வா..வா நடந்து!

6.
மங்கை சிவகாமி மாமல்லன் காதலினை
எங்கை எழுத இசைத்தவளே! - செங்கரும்பே!
திங்கள் முகத்தழகே! தென்னங் குருத்தழகே!
பொங்கல் சமைப்போம் புணர்ந்து!

7.
என்னை உனக்கே எழுதிக் கொடுத்தபின்
உன்னைத் தடுத்திட உள்ளார்யார்? - அன்னையென
அன்பைப் பொழிபவளே! ஆற்றல் அளிப்பவளே!
துன்பைத் துடைப்பவளே சொல்?

8.
வண்டுவந்து நெஞ்சுள் வருடுவதேன்? ஆசைகளைக்
கொண்டுவந்து நெஞ்சுள் குவிப்பதுமேன்? - விண்டுவந்து
வீசியெனைக் கொல்லுவதேன்? விந்தை விளையாட்டில்
ஆசையெனைத் தள்ளுவதேன் ஆழ்ந்து?

9.
இங்கோர் உயிருறும் இன்னல் அறியாமல்
அங்கே அழகாய் அமர்ந்துள்ளாய்! - அங்கத்துள்
புல்லரிக்கும் இன்பம் புகுந்தாட வேண்டுமடி!
சொல்லினிக்கும் பாக்கள் தொகுத்து!

10.
மஞ்சள் மணக்கும் மதிமுகமே! நீயனுப்பும்
அஞ்சல் அளிக்குமடி ஆரமுதை! - வஞ்சியே!
பன்முறை உன்னரும் பாக்களைப் பார்த்துவப்பேன்
இன்மறை என்றே இசைத்து!

lundi 20 avril 2015

பாட்டரங்கம்



பாட்டரங்கம்

தலைமை
கவிஞர் கி. பாரதிதாசன்

தலைப்பு
கவிஞரேறு வாணிதாசனார் பாடல்களில்
புரட்சி - எழுச்சி - மலர்ச்சி - மகிழ்ச்சி

புரட்சி - கவிஞர் தணிகா சமரசம்
எழுச்சி - கவிஞர் சரோசா தேவராசு
மலர்ச்சி - கவிஞர் கோபால கிருட்டினன்
மகிழ்ச்சி - கவிஞர் தேவராசு






dimanche 19 avril 2015

பட்டிமண்டபம்

 பட்டிமண்டபம்

தலைமை
கவிஞர் கி. பாரதிதாசன்

தலைப்பு
இன்றைய தமிழ்த்திரைப்படங்கள் நம் பண்பாட்டை
மெருகேற்றுகின்றவா? உரு குலைக்கின்றனவா?

மெருகேற்றுகின்றன
மருத்துவர் த. சிவப்பிரகாசம்
திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால்

உருக்குலைக்கின்றன
கவிஞர் வே. தேவராசு
திருமதி சுகுணா சமரசம்

lundi 13 avril 2015

பாரீசு பார்த்தசாரதி




பாரீசு பார்த்தசாரதி மணிவிழா வாழ்த்துமலர்!

நன்பார்த்த சாரதியும் நற்றவ வத்சலாவும்
இன்பார்த்த வாழ்வின் எழில்பெறுக! - பொன்னார்த்த
நல்லிணையர் நண்ணும் மணிவிழா ஓங்கிடுக!
நல்லணையான் நாமம் நவின்று!

ஓங்குதமிழ் உயர்புதுவைக் குடிபிறந்த அன்பர்
     ஒப்பில்லாக் குருசாமி பேர்விளங்கச் செய்தார்!
வீங்குதமிழ் படைத்திட்ட வியனாழ்வார் உருவை
     விழியேந்திக் களித்திங்குப் பெருவாழ்வைப் பெற்றார்!
தாங்குதமிழ் தலைக்கொண்டு நற்பணிகள் ஆற்றித்
     தாயடியைத் தாம்தொழுதார்! தருமநெறி காத்தார்!
தேங்குதமிழ்ச் சீரேந்தி மணிவிழாக் கண்டார்
     செழும்பார்த்த சாரதியும் வத்சலாவும் வாழ்க!

வில்லாதி வீரன்தன் சரணங்கள் சொல்வார்!
     விருதங்கள் மேற்கொண்டு வேங்கடனைத் தொழுவார்!
நல்லாதிப் பண்புகளை நாடிமனம் மகிழ்வார்!
     நல்லதமிழ்ப் பேரவையை நன்கேங்கச் செய்வார்!
சொல்லோதி உவக்கின்ற தூயதமிழ் மேடை
     சுவை..கோடி வழங்கிடவே புத்தாண்டு வைப்பார்!
வல்லோதி வரமுற்று மணிவிழாக் கண்டார்
     வளர்பார்த்த சாரதியும் வத்சலாவும் வாழ்க!

மதுக்கவிதை வடிக்கின்ற மணி.சித்தன் தாளை
     மனத்துக்குள் பதித்தவர்கள்! இதழுலகம் ஏத்த
புதுக்கவிதை வடிக்கின்ற பொங்குதிறன் பூத்துப்
     புகழ்நூல்கள் புனைந்தவர்கள்! புதுமைஅணிந் தவர்கள்!
எது..கவிதை கேட்பவர்க்கே என்னெழுத்தைக் காட்டி
     எழிலுரைக்கும் இனியவர்கள்! நட்பைவளர்த் தவர்கள்!
இதுகவிதை என்றுரைக்க மணிவிழாக் கண்டார்
     இன்பார்த்த சாரதியும் வத்சலாவும் வாழ்க!

வளம்மணக்கும்! நலம்மணக்கும்! வண்டமிழ்ச்சீர் மணக்கும்!
     வாழையடி வாழையெனத் தலைமுறைகள் மணக்கும்!
உளம்மணக்கும்! உரைமணக்கும்! உறவுகள்தாம் மணக்கும்!
     ஒளிர்கின்ற திருப்பாவை ஊறும்தேன் மணக்கும்!
குளம்மணக்கும் தாமரைபோல் கொண்டொளிரும் வாழ்வில்
     குறள்மணக்கும்! குணம்மணக்கும்! இன்பமெலாம் மணக்கும்!
தலம்மணக்கும் திருவருளால் மணிவிழா மணக்கும்
     தண்பார்த்த சாரதியும் வத்சலாவும் வாழ்க!

12.04.2015