Affichage des articles dont le libellé est வெள்ளொத்தாழிசை. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est வெள்ளொத்தாழிசை. Afficher tous les articles

samedi 9 août 2025

வெள்ளொத்தாழிசை

 


நேரிசை வெள்ளொத்தாழிசை

.

புரட்சியாளர் பெரியார்

.

நாடு திருத்தி நலம்பெற வேண்டுமென

ஓடு தளர்ந்தும் உழைத்திட்டார்! - சூடுவர
ஏடு படைத்தார் எமக்கு!

.

மண்ணே திருத்தி மகிழ்ச்சிபெற வேண்டுமென

கண்ணே தளர்ந்தும் தினங்கற்றார்! - வெண்மனத்தால்

பண்ணே படைத்தேன் பணிந்து!

.

மக்கள் திருத்தி உயிர்மானம் வேண்டுமெனப்

பக்கம் தளர்ந்தும் படித்திட்டார்! - எக்காலும்

நக்கும் நரியை நசித்து!

.

தந்தை பெரியார்!

.

தந்தை பெரியாரைச் சாற்றும் திசைநான்கும்

சிந்தை யுலகத்தைச் சீர்திருத்தும்! - எந்நாளும்

விந்தை புரிந்தார் விழித்து!

.

எங்கள் பெரியாரை ஏத்தும் திசைநான்கும்!

மங்கும் உலகத்தை மாற்றியவர்! - செங்கதிராய்

அங்கம் உடையார் அவர்!

.

வல்ல பெரியாரை வாழ்த்தும் திசைநான்கும்!

நல்ல வுலகத்தை நன்குரைத்தார்! - சொல்யாவும்

வெல்லும் பகையை விரைந்து!

.                            

தன்மானப் பாசறை

.

ஈரோட்டுப் பாசறையின் போரீட்டிச் சிந்தனையால்

சீராட்டும் நல்வாழ்வைப் பார்காணும்! - பாராட்டி

ஏரோட்டும் என்றன் எழுத்து!

.

காராடைப் பாசறையின் போரீட்டிச் சிந்தனையால்

பேரோடை போல்மேடை சீரளிக்கும்! - கேரளத்தில்

வேரோடு சாய்த்தார் விதி!

.

தன்மானப் பாசறையின் பொன்னான சிந்தனையால்

நன்மானங் காத்து நலம்பெற்றோம்! - இன்புற்றோம்!

தென்ஞான முற்றோம் தெளிந்து!

.

பகுத்தறிவு வேந்தர்!

.

பகுத்தறிவு வேந்தர்! படைத்தபுகழ்ப் பாதை

வகுத்தறிவு ஊட்டும்! வளர்க்கும்! - தொகுத்து

மிகுத்தறிவு சூட்டும் விரைந்து

.

வெல்லறிவு வேந்தர் விடுதலை ஏடளித்தார்!

வல்லறிவு சூட்டும்! வழிகாட்டும்! - நல்லவரைச்

சொல்!..அறிவு பூக்கும் சுடர்ந்து!

.

சீர்திருத்த வேந்தர்! செயல்யாவும் தன்மான

வேர்நிறுத்தி மேன்மை விளைத்தனவே! - பார்..திருத்தி

கூர்நிறுத்தித் தீர்த்தார் குறை!

.

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு.

07.08.2025

வெள்ளொத்தாழிசை

 



இன்னிசை வெள்ளொத்தாழிசை

[மூன்று சிந்தியல் வெண்பாக்கள் ஒரு பொருள் மேல் வந்தால் அதனை வெள்ளொத்தாழிசை என்பர்]

 

பேரறிஞர் அண்ணா

 

ஒன்றே குலமாம்! ஒருவனே தேவனாம்!

நன்றே நவின்று நலமளித்த பேரறிஞர்!

மன்றே மகிழும் மலர்ந்து!

 

ஏழை சிரிப்பில் இறைவன் இருக்கின்றான்

ஊழை நினைந்தே உருகாதே! பேரறிஞர்

வாழை மனத்தார் வணங்கு!

 

மாற்றான் மலரும் மணம்வீசும் என்றுரைத்தார்!

போற்றார் வியக்கப் புகழ்பெற்றார்! பேரறிஞர்

ஊற்றாய் அளித்தார் உவப்பு!

                          

அண்ணா பிறந்தார் அறி!

 

எண்ணா யிரங்கோடி எம்மண் தவமிருந்து

பண்ணார் தமிழின் படைநடத்தப் பேரறிஞர்

அண்ணா பிறந்தார் அறி!

 

மண்ணார் மடமையெலாம் மாய்ந்தொழிய, ஈடில்லாத்

தண்ணார் தமிழின் தகையொளிரப் பேரறிஞா்

அண்ணா பிறந்தார் அறி!

 

கண்ணீர் துடைத்திடவும் கன்னல் அளித்திடவும்

விண்ணீர் நலமாய் விளைந்திடவும் பேரறிஞா்

அண்ணா பிறந்தார் அறி!

                          

தமிழ் மணக்கும் பேரறிஞர்

 

சீர்மணக்க நம்நிலத்தைச் செந்தமிழ் நாடென்று

பேர்மணக்கச் செய்த பெருமகனார்! பேரறிஞர்

பார்மணக்கத் தந்தார் பயன்!

 

பண்மணக்கும் பைந்தமிழை மண்மணக்கப் பேசியவர்

பெண்மணக்குங் சட்டங்கள் பேணியவர்! பேரறிஞர்

விண்மணக்குங் செங்கதிர் வேந்து!

 

தேர்மணக்கும் தென்னவரின் வேர்மணக்கும் நல்லாட்சி!

ஊர்மணக்கும் நற்றொண்டு! தார்மணக்கும் பேரறிஞர்!

நேர்மணக்கும் என்றன் நினைவு!

 

எங்கள் அண்ணா!

 

வானறிவு! சொற்கள் மதுவூற்று! பூங்காற்று!

நானறிவு பெற்ற நறுஞ்சாலை! மின்னெருப்பு!

தேனறிவு அண்ணா சிறப்பு!

 

சொல்லேந்தும் தீ!தேன் சுவையேந்தும் சிந்தனை!

மல்லேந்தும் போர்நிலம்! வான்மழை! மென்காற்று!

வல்லேந்தும் அண்ணா மனம்!

 

கவிவூற்று! கன்னல் கலைமன்றம்! வான்சீர்

குவியாற்றுத் தென்றல்! கொடும்பகைக்குத் தீ!இப்

புவிபோற்றும் அண்ணா புகழ்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு.

07.08.2025


mercredi 11 juillet 2018

வெண்பா மேடை - 77


வெண்பா மேடை - 77
  
வெவ்வேறு பொருள் பற்றி அடுக்கி வந்த வெண்டாழிசை
  
1.
இயற்கையைப் போற்றல், இவ்வுலகைக் காக்கும்
வயல்களை வாழ்த்தல், வளமுடன் வாழ
அயல்மொழி அகற்றல் அழகு!
  
2.
மரங்களைச் சேர்ப்போம் மாமழை வேண்டியே!
உரங்களைச் சேர்ப்போம் உழுமண் செழிக்கவே!
கரங்களைச் சேர்ப்போம் கணித்து!
  
3.
தொண்டு புரிந்திடுவோம்! தோழமை காத்திடுவோம்!
நண்டு செயலொழிப்போம்! நற்றமிழை நாளும்
மொண்டு குடிப்போம் முந்து!
  
4.
காவிரித் தாயே! கண்ணீர் துடைத்திடவே
தாவி..நீ வந்திடுவாய்! தண்டமிழ்ப் பாவலன்
கூவி அழைத்தேன் கொதித்து!
  
5.
கற்ற கல்வியைக் காதல் புரிந்திடவும்
உற்ற கலையை உயிராய் உவந்திடவும்
நற்றவ நாதனை நாடு!
  
6.
சாதி வளர்ப்பாரைச் சமயம் வெறியாரை
நீதி குலைப்பாரை நிலமெங்கும் பொய்ம்மையை
ஓதித் திரிவாரை ஓட்டு!
  
7.
கையூட்டு ஒன்றைக் கடமையென எண்ணிடுவார்!
மையூட்டும் வன்கருமை மனமுடையார் காண்பாரோ
தையூட்டும் இனிமையைத் தான்?
  
8.
நீட்டென்னும் தேர்வுள் நிலங்கொள்ளாச் சதியினைக்
கூட்டிக் குளிர்காயும் குள்ள நரிகளை
ஓட்டி ஒழிப்போம் உடன்!
  
9.
போலித் துறவிகள் பூச்சூடித் திரிக்கிறார்!
பாலின் நிறமாகப் பளபளப்பார்! அன்னவர்தம்
காலில் விழுவதோ காப்பு?
  
10.
வாக்கு வரங்கேட்டு வாசல் வந்தவர்கள்
துாக்குக் கயிறைச் சுழற்றுகிறார்! தீயவர்கள்
ஆக்கும் அரசை அகற்று!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
வெவ்வேறு பொருட்களுடன் பலவடிக்கி வெண்டளையுடன் வேற்றுத்தளை அருகி வந்த வெண்டாழிசை. இவ்வாறு மற்றத் தளைகளிலும் வெண்டாழிசை அமையும்.
    
விரும்பிய வெவ்வேறு பொருட்களுடன் பலவடிக்கி வெண்டளையுடன் வேற்றுத்தளை அருகி வந்த வெண்டாழிசை ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
    
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்டாழிசைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
குறிப்பு
  
தளை தட்டாமல் சிந்தியல் வெண்பா ஒரு பொருண்மீது மூன்று அடிக்கு வருதல் வெள்ளொத்தாழியை ஆகும்.
  
தளை தட்டாமல் சிந்தியல் வெண்பா ஒரு பொருண்மீது மூன்றுக்கு மேல் வந்தால் அவைகளைச் சிந்தியல் வெண்பா என்று உரைத்தல் வேண்டும்.
  
தளை தட்டி, வேற்றுறளை அருகி வருவது வெண்டாழிசை யாகும்.
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
10.07.2018

lundi 9 juillet 2018

வெண்டாழிசை - 5


வெண்பா மேடை - 76
  
ஒரு பொருண்மேல் மூன்றுக்கு மேல் அடிக்கி வந்த வெண்டாழிசை
  
மலர்விழியே!
  
1.
ஏங்கும் நினைவுகளை ஏவும் மலர்விழியே!
ஓங்கும் கனவுகளை ஊட்டுகிறாய்! வாடுகிறேன்
வீங்கும் ஆசை விளைந்து!
  
2.
வண்ணத் தமிழமுதை வழங்கும் மலர்விழியே!
எண்ணம் இனிக்க எழுதுகிறாய்! வாடுகிறேன்
விண்ணிகர் ஆசை விளைந்து!
  
3.
என்மேல் அம்புகளை ஏவும் மலர்விழியே!
பொன்மேல் பதித்த புதுமணியே! வாடுகிறேன்
உன்மேல் ஆசை விளைந்து!
  
4.
வேல்கொண்டு தாக்கும் விந்தை மலர்விழியே!
சூல்கொண்டு பாக்கள் சுரக்குதடி! வாடுகிறேன்
மேல்கொண்டு ஆசை விளைந்து!
  
5.
கூர்கொண்டு தாக்கும் கோல மலர்விழியே!
ஏர்கொண்டு என்னை உழுகின்றாய்! வாடுகிறேன்
வேர்கொண்டு ஆசை விளைந்து!
  
6.
வாள்கொண்டு தாக்கும் வல்ல மலர்விழியே!
நீள்கொண்டு தாக்கும் நிறையழகே! வாடுகிறேன்
வேள்கொண்ட ஆசை விளைந்து!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
ஒரு பொருண்மேல் மூன்றுக்கு மேல் அடிக்கி வெண்டளையுடன் வேற்றுத்தளை அருகி வந்த வெண்டாழிசை. இவ்வாறு மற்றத் தளைகளிலும் மூன்றுக்கு மேல் வெண்டாழிசை அமையும்.
  
விரும்பிய பொருளில் ஒரு பொருண்மேல் மூன்றுக்கு மேல் அடிக்கி வெண்டளையுடன் வேற்றுத்தளை அருகி வந்த வெண்டாழிசை ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெள்ளொத்தாழிசையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
08.07.2018

samedi 12 mai 2018

வெண்டாழிசை - 4


வெண்பா மேடை - 69
  
நிரையொன்றாசிரியத் தளையால் வந்த வெண்டாழிசை
  
நேரிசை வெண்டாழிசை
  
விழியென மொழியினை விரிவுரை எழுதுவாய்!
பொழிலென மொழியினைப் புகழுவாய்! - அழிவிலா
அழகெனத் தமிழினை அணி!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
இன்னிசை வெண்டாழிசை
  
தமிழ்மொழி இனிதெனத் தரையெலாம் மொழிவதை
இமியுமே நினைத்திடா திருப்பவர் முகமதில்
உமிழ்வதும் உயர்வென உணர்!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
ஆசிரிய உரிச்சீரான கருவிளம் மட்டும் பயின்று வரும் மூன்றடிப் பாடல். [நிரையொன்றிய ஆசிரியத் தளை மட்டுமே அமையும்]
  
முதல் இரண்டடிகள் நாற்சீர் அடிகள். ஈற்றடி முச்சீர் பெறும். வெண்பாவின் ஈறுபோல் மலர் அல்லது பிறப்பு என்ற வாய்பாட்டில் முடியும்..
  
மூன்றடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். 1, 3 ஆம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.
  
பண்பின் உயர்வை வலியுறுத்தி நிரையொன்று ஆசிரியத் தளையால் வந்த வெண்டாழிசையை நேரிசையுள் ஒன்றும் இன்னிசையுள் ஒன்றும் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெள்ளொத்தாழிசையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
11.05.2018

jeudi 10 mai 2018

வெண்டாழிசை - 3



வெண்பா
மேடை - 68
  
நேரொன்றாசிரியத் தளையால் வந்த வெண்டாழிசை
  
நேரிசை வெண்டாழிசை
  
குன்றின் வேலன் கோல யாப்பை
ஒன்றிக் கற்க ஊட்டி - நின்றான்
நன்றி சொன்னேன் நான்!
  
இன்னிசை வெண்டாழிசை
  
உள்ளம் தன்னில் உண்மை ஓங்க
வெள்ளம் போன்று மேவும் நன்மை!
பள்ளம் நீங்கும் பார்!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
ஆசிரிய உரிச்சீரான தேமா மட்டும் பயின்று வரும் மூன்றடிப் பாடல். [நேரொன்றிய ஆசிரியத் தளை மட்டுமே அமையும்]
  
முதல் இரண்டடிகள் நாற்சீர் அடிகள். ஈற்றடி முச்சீர் அடியாகும். வெண்பாவின் ஈறுபோல் நாள் அல்லது காசு என்ற வாய்பாட்டில் முடிய வேண்டும்.
  
முன்றடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். 1, 3 ஆம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.
  
அன்பின் அமுதை வலியுறுத்தி நேரொன்றாசிரியத் தளையால் வந்த வெண்டாழிசையை, நேரிசையுள் ஒன்றும் இன்னிசையுள் ஒன்றும் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெள்ளொத்தாழிசையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
    
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
09.05.2018

வெண்டாழிசை - 2



வெண்பா
மேடை - 67
  
ஆசிரியத் தளையான் வந்த வெண்டாழிசை
  
நேரிசை வெண்டாழிசை
  
எங்கும் இன்றமிழ் இசைப்பீர்! இன்பம்
பொங்கும் பாக்களைப் புனைவீர்! - தங்கும்
மங்கலம் மணக்குமே மலர்ந்து!
  
முன்னைத் தோன்றிய முத்தமிழ் மொழியை!
உன்னைக் காத்திடும் ஒளியை! - என்றும்
அன்னை அன்பென அருந்து!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
இன்னிசை வெண்டாழிசை
  
பொங்கும் இனிமை பூத்துக் குலுங்கும்
எங்கள் தமிழாம் இணையிலா மொழியைச்
செங்கோல் செலுத்திடச் செய்
  
எண்ணும் எழுத்தும் இருவிழி என்றே
மண்ணில் எண்ணி மாண்பாய்க் கற்றோர்
உண்ணும் உணவே உணவு.
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
ஆசிரிய உரிச்சீர்கள் [தேமா, புளிமா, கூவிளம் கருவிளம்] வந்து பயிலும் மூன்றடிப் பாடல். [ஆசிரியப்பாவில் வந்துறும் நேரொன்று ஆசிரியத் தளையும், நிரையொன்று ஆசிரியத் தளையும், இயற்சீர் வெண்டளையும் கலந்து இப்பாடல் அமையும்]
  
முதல் இரண்டடிகள் நாற்சீர் அடிகள். ஈற்றடி முச்சீர் ஆகும். வெண்பாவின் ஈறுபோல் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாட்டில் முடிய வேண்டும்.
  
முன்றடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். 1, 3 ஆம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.
  
ஒற்றுமையை வலியுறுத்தி ஆசிரியத் தளையான் வந்த வெண்டாழிசையை நேரிசையுள் ஒன்றும் இன்னிசையுள் ஒன்றும் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெள்ளொத்தாழிசையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
    
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
08.05.2018