Affichage des articles dont le libellé est படமும் பாட்டும். Afficher tous les articles
Affichage des articles dont le libellé est படமும் பாட்டும். Afficher tous les articles

dimanche 19 avril 2020

படமும் பாட்டும்


படமும் பாட்டும்
  
காதல் குளம்
  
இயற்கை எழுதிய
காதல் காவியம்!
  
இறைவன் வடித்த
இன்ப ஓவியம்!
  
காதல் கோட்டையின்
திருவாயில்!
  
மண்மகளின்
இதயம்!
  
காமன் கட்டிய
காதல் குளம்!
  
காதல் தேவதை
நீராடும்
மரகதப் பொய்கை!
  
காதலால்
மலை உருகியதோ?
  
காதல்
உயிர் இயற்கை!
  
காதலால்
கல்லுக்குள் - பார்
ஈரம்!
சொல்லுக்குள் - பா
வாரம்!
  
புவிமகள்
இதயக் காதலைக்
காட்டுகிறள்!
  
இக்குளம்
அன்பின் ஊற்று!
அமுதத்சுனை!
  
மண்ணின் போர்
சிகப்பு நிறம்!
கண்ணின் போர்
பச்சை நிறம்!
அதனால்
பசலை படர்ந்ததோ?
  
இயற்கையே தெய்வம்!
பச்சை மாமலைபோல்
மேனி!
அன்பின் சுரப்பே - இக்
கேணி!
  
மையோ? மரகதமோ?
கம்பன் பாட்டு!
இக்கருத்து
இந்தக் குளத்திற்கும்
பொருந்தும்!
  
காதல் குளம்!
கண்டு பெருகியது - என்
கவிதை வளம்!
  
இந்தக் குளத்தைப்போல்
கண்ணே - என்
காதல் நிலையானது! - உன்
கட்டழகைக் கண்டு
நெஞ்சம் சிலையானது!
  
காதல் குளத்தில்
குளிப்போம் வாடி!
களிப்போம் கூடி! - கவி
படைப்போம் கோடி!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
19.04.2020

dimanche 2 juin 2019

படமும் பாட்டும்


படமும் பாட்டும்
  
நெடியவனை நீள்விழியால் அளந்தாள்!
  
வன்னுரலில்
கட்டுண்டான் அன்று!
மென்விரலில்
கட்டுண்டான் இன்று!
  
தலைமை உற்றவன்!
மயக்கும்
தலை.. மை.. உற்றவன்!
  
மாலை மடக்க
மாலை தொடுத்தாள்!
  
கண்ணனின் கைகளைக்
கட்டினாள்!
கண்களை????
  
ஓங்கிய உத்தமனை
ஏங்கிய நேரிழையாள்
வீங்கிய நீள்விழியால்
அளக்கின்றாள்!
  
விழிகள் முட்டின!
நன்றே ஒட்டின!
கவிகள் கட்டின!
  
சீதையின் பார்வை
போதையை ஊட்டும்!
இராமனின் பார்வை
இளமையை வாட்டும்!
  
கண்கள் புரிந்தன
கமழ்..வாய் வினையை!
வாய்கள் புரிந்தன
கருங்கண் வினையை!
  
வில்லேந்தும் வீரன்
விழியேந்தி நிற்கின்றான்!
சொல்லேந்தும் கோதையிடம்
கொக்குமொழி கற்கின்றான்!
  
மலையழகு தோளழகு!
மலையழகு மார்பழகு!
வென்றது எதுவோ?
  
சிலையழகுச் செல்வன்
சிலையழகுச் செல்வி
கலையழகு கொண்டார்!
கவியழகு கண்டார்!
  
நடையழகை, கொடையழகை
வென்றன
இடையழகும்! தொடையழகும்!
  
யுத்தப் படையழகை
வென்றது
முத்தக் கொடையழகு!
  
காலழகு - ஆம்..ஆம்
உலகம் - இந்தக்
கன்னியின் முன்னே
கால் அழகு!
  
தாளழகு - ஆம்..ஆம்
உலகம் - இந்தக்
கண்ணனின் முன்னே
தாள் அழகு!
  
வில்லை வளைப்பான்
என்றோ - அழகாய்
விரைந்து வளைந்தாள்!
எல்லை கடப்பான்
என்றோ - சரத்தால்
இறுகப் பிணைந்தாள்!
  
அடி முடி அறியா
அண்ணல்! - பூங்
கொடியின் - கைப்
பிடிகள் அறிந்தனவே!
  
கொஞ்சும் தமிழால்
குழைத்த கவிதை!
விஞ்சும் காதலை
விளைக்கும்!
கற்போர் மனத்தை
வளைக்கும்!
  
பாட்டழசர் கி. பாரதிதாசன்
02.06.2019

படமும் பாட்டும்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

குழலழகன் குறட்பா!
  
1.
பூங்குழலே! கண்ணன் இதழ்கண்டாய்! பொங்கிமனம்
ஏங்குகிறேன் தாராய் இடம்!
  
2.
வண்ண மயிலிறகே! வாசன் தலைமணத்தை
உண்ண எனக்கும் உதவு!
  
3.
தேனொழுகும் மாலையே! தேவன் திருக்கழுத்தில்
நானொழுகும் நாளை நவில்!
  
4.
முத்து மணிச்சரமே! மோக நிறத்தவனைப்
பற்றும் வழியைப் பகர்!
  
5.
பொன்மார்பில் மின்னுாலே! என்மார்பில் நீ..தவழ
உன்சார்பில் ஓர்வழி ஓது!
  
6.
தலைப்பாவே போற்றுகிறேன்! சாற்றுகவே ஓர்சொல்!
நிலைப்பாயே என்னுள் நிலைத்து!
  
7.
தோள்தவழும் மென்துண்டே! துாயவனின் தாமரைத்
தாள்தவழும் தண்ணெறி சாற்று!
  
8.
பட்டொளி வீசுடையே! பாவை..நான் மன்னவனைத்
தொட்டொளி காணவழி சொல்!
  
9.
மின்னும் அணிமணியே! விந்தைத் திருமாலைப்
பின்னும் வழியென்ன பேசு!
  
10.
குடைகொண்டு காத்தான் குழலழகன்! இன்று
தொடைகொண்டு காத்தான் சுவைத்து!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
01.06.2019

dimanche 19 février 2017

படமும் பாட்டும்





கண்ணன் என் காதலன்!

குன்றேந்திக்
கன்றினைக் காத்தவன்!
துண்டேந்திக்
கன்னியைக் காக்கிறான்!

ஆநிரையை
அருளேந்திக் காத்தவன்!
ஆயிழையை
அன்பேந்திக் காக்கிறான்!

ஆடையை
எடுப்பதும் - பின்
கொடுப்பதும் - அவனின்
அலகிலா விளையாட்டும்!

கருமேகக் கண்ணன்!
வருமேகம் காணாமல்
உறவாடும் காட்சியினை
உடையால் மறைக்கின்றான்!

திருவாயில்
உலகுடையான்!
அவள் வாயில்
உளமுடையான்!

கண்ணழகில்
மறந்தாள் பாதை!
மயங்கும் கோதை!

பெண்ணழகில்
மறந்தான் கீதை!
மாமலை மேதை!

நீல வண்ணன்
நீந்துகிறான்
காதலால்!
கோல விழிகளின்
மோதலால்!

மொழியின்றி
விழிகள் பேசும்!
முகுந்தன் முகத்தழகு
மோகம் வீசும்!

உடைகொண்டு மறைத்து - தேன்
அடையுண்ண எண்ணுகிறான்!
இடையொன்று இல்லாமல்
இவள் வளைந்து மின்னுகிறாள்!

புல்லாங்குழலாகப்
பொன்மகளை வாசிக்கக்
கண்ணன்
திட்டமிடுகின்றான்!
கள்ளன்
கொட்டமிடுன்றான்!
காதல்
வட்டமிடுகின்றான்!
உடையால்
பட்டம் விடுகின்றான்!

உடை,
குடையானது! - காதல்
கொடையானது!
எடை,
குறைவானது! - இன்பம்
நிறைவானது!
இடை,
கொடியானது! - சொர்க்கப்
படியானது!
நடை,
நடமாடுது! - தேன்
குடம்சூடுது!
தடை,
உடைந்தோடுது! - ஆசை
உறைந்தோங்குது!

தீராத விளையாட்டுப்
பிள்ளை! - அவன்
தீண்டாமல் அகன்றிடுமோ
தொல்லை!
ஆறாத ஆசைக்கேது
எல்லை? - அவன்
அழகுருவம் பூத்தாடும்
கொல்லை!

மாயக் கண்ணன்!
நேயக் கண்ணன்!
கொஞ்சும் காட்சி! - காதல்
விஞ்சும் மாட்சி!

படத்தைக் கண்டு
படைத்த சொற்கள்!
படிப்போர் மனத்தில்
படைக்கும் நற்..கள்

பாட்டரசர் கி. பாரதிதாசன்
18.02.2017

mercredi 6 juillet 2016

படமும் பாட்டும்



தாமரைக் காடு!

1.
பெண்ணின் திருவருளைப் பெற்றிடவே, தாமரை
தண்ணீரில் செய்யும் தவம்!

2.
தண்ணீரில் தத்தளிக்கும் தாமரைக்குக் கை..கொடுத்துப்
பெண்ணே..நீ தீர்ப்பாய் பிணி!

3.
குளங்காதல் கொண்டதுவோ? கோதைக்குப் பூ..தந்[து]
உளங்கூடச் சொல்லும் உவந்து!

4.
தாமரைப் பூக்களைத் தள்ளாடச் செய்யும்!உன்
மாமரைக் கண்ணின் மது!

5.
தாமரைப் பூவெல்லாம் தாவணிச் சீர்கண்டு
பாமரை பாடும் பணிந்து!

6.
செம்மைக் கரம்பற்றச் செந்தா மரையேங்கும்
உம்மை உறவாய் உணர்ந்து!

7.
தாமரைக்குத் தாகமடி! தங்கமே உன்னமுத
நாமரை நீரினை நல்கு!

8.
சின்னவளே நீயழகா? செந்தா மரையழகா?
என்னவளே! நீயே எழில்!

9.
தங்கமே! உன்னழகால் தாமரை நெஞ்சுக்குள்
பொங்குமே ஏக்கும் புரண்டு!

10.
தலைவணங்கும் தாமரைகள்! தாரகையே! உன்றன்
கலைவழங்கும் கண்களைக் கண்டு!

11.
தாமரைக் காடே! தமிழ்தருவாய்! என்னுடைய
நாமரை மீது நடந்து!

12.
உடன்பிறப்பைக் கண்டுவக்க ஓடோடி வந்தாய்!
படரன்பைக் காட்டும் படம்!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
06.07.2016