mercredi 31 juillet 2019

இரத பந்தம்



தேர் ஓவியக் கவிதை
செய்யுள் 100 எழுத்து ஓவியம் 87
  
என்னாசிரியர்
பாவலர்மணி சித்தனார் தேரமர்ந்து வருகவே!
  
நேரிசை ஆசிரியப்பா
  
தேவே! கோவே! புகழ்திகழ் கவியே!
நாவே வாழ்த்தி வணங்கும்! பாட
லாக்கி யுலகை யாளுமென் குருவே!
பூக்கள் துாவி நான்புனை தேரில்
சித்தரே ஏறி வருக! சீரார்
வித்தின் மேன்மை தருக!வே யொலியே!
இன்பேறே! ஈடி லன்பே!
நன்றே யொன்றி நாளும் வாழ்கவே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
31.07.2019

mardi 30 juillet 2019

இரத பந்தம்


தேர் ஓவியக் கவிதை
  
நாதவே பார்..வான்தேர் போலென்தேர் சீரடைய,
மாதவே பார்..தமிழ் மாண்தொகையின் - வேதவேர்
சேர்..காவே! உன்சேய்நான் பொன்சேர் தகைதர,
வார்..பாவே தண்சீர் வடித்து!
  
தேவனே! தேர்சேர்ந்து சீர்த்தமிழ் மேவுக!
காவலே உள்ள கருணையே! - ஆவ
லுறுங்கவி யோக வளமே..சேர்! தேனே!
வறுமை யழியவே வா!
  
படிக்கும் முறை:

முதல் வெண்பா, தேரின் 1 என்ற குறியிட்ட இடத்தில் நேரே படித்துக் கீழிறங்கி நேராகப் படித்து இவ்வாறு வலது இடதுமாக மாறி மாறிப் படித்து இறுதியில் தேரின் அச்சுக்குச் சென்று 'சே' அங்கிருந்து வலது சக்கரத்தைச் சுற்றிச் சக்கர மையம் அடைந்து, மீண்டும் அச்சுக்கு வந்து, அங்கிருந்து இடது சக்கரத்தைச் சுற்றிச் சக்கர மையம் அடைந்து மீண்டும் அச்சியின் மையம் 'சே' வந்து நேரே மேலேறி வெண்பா தொடங்கிப் பக்கம் சென்று அங்குள்ள துாணேறித் துாணின் உச்சியில் நிறைவடையும்.
  
இரண்டாம் வெண்பா 2 என்ற குறியிட்ட இடத்தில் தொடங்கி நேரே படித்து மேலேறி நேராகப் படித்து இவ்வாறு வலது இடதுமாக மாறி மாறிப் படித்துத் தேரின் உச்சியை அடைந்து நடுவே இறங்கி வெண்பா தொடங்கிப் பக்கம் சென்று துாணில் இறங்கி நிறைவடையும்.
  
பாடல் கருத்துரை:
  
வெண்பா 1
  
வானில் செல்லும் சூரியத் தேர்போன்று என்னுடைய தேரும் சிறப்படைய தலைவனே என்னைப் பாராய். தாயானவனே! என்னைப் பாராய்! தமிழின் தொன்மைான ஆழமான கருத்துக்களை என் பாடலில் சோலையாகச் சேர்த்திடுவாய்! உன் மகன் பொன்போல் உயர்வடைய பாடும் பாடலில் தண்மையுடைய சீர்களை அளித்திடுவாய்.
  
வெண்பா 2
  
இறைவனே! நான் பாடும் தேரில் அமர்ந்து சிறப்புடைய தமிழை விரும்புகவே. என்னைக் காவலுறும் கருணையே! ஆசையுடன் பாடும் செய்யுளில் உயர்ந்த வளங்களை அருளுகவே. இனிக்கின்ற தேனே. என் வறுமையை போக்க வருகவே.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
30.07.2019

dimanche 28 juillet 2019

மலைப் பந்தம்


மலை ஓவியக் கவிதை
  
இலக்கணமலை
முனைவர் இரா. திருமுருகனார் புகழ் ஓங்குகவே!
  
உலகே வியக்கு மொண்டமிழ்க் கோவே!
நலமே யளித்த நற்கலை யமுதே!
மொழியே தழைக்க மூண்ட சுடரே!
கழனிபோல் விளைந்த அருங்கவி வளமே!
முதுமதி போல நின்னுரு முந்தும்!
புதுமை நீயே! பொற்புடைக் கோ..வில்
கூர்மை கொண்ட வல்ல அறிவே!
சீரரும் சிந்தினைக் கனியென வுண்டு
கட்டிய நுாலைக் கற்றோர் நாளும்
கற்றே காத்திங் காழ்வர்! வீரா!
மொழிப்போர்க் களத்து வேழா!
பழிப்பா ருணரப் பாடிய தமிழிசை
வன்மை கோத்து வாரி யிடுமே!
திண்மழை யே!யா ழே!குழ லே!தினம்
மிகுமிகு கன்னல் மேவ வுழத
தகுநலங் காணத் தமிழ்க்குண மிகுகொண்டு
வண்ணத் தமிழை வழாங்க வருகவே!
    
மலையின் அடியில் 'உலகே' என்று பாடல் தொடங்கி இடம்வலம், வலம்இடம் என மாறிமாறிப் படித்துக் கொண்டே மலையின் உச்சிவரை சென்று, அங்கிருந்து நேரே சீழிறங்க முதல் செய்யுள் நிறைவடையும்.
      
நிலவண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்களை, மலையின் கீழிருந்து மேலலேறிக் கீழே யிறங்கினால் ஒரு குறள் வெண்பா வரும். குறளில் பாட்டுடைத் தலைவன் பெயரும் எனது வேண்டுதலும் உள்ளன.
  
குறள் வெண்பா
  
திருமுருக ராகத் திகழத் தமிழே
தருக கவியே தலை!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
27.08.2019

samedi 27 juillet 2019

தேர்ப் பந்தம்


தேர் ஓவியக் கவிதை

பார்வேண்டும் கல்வியே! நல்லுறவே! பைந்தமிழால்
சீர்வேண்டும் சிந்தை சொலிப்புறவே! - ஊர்ப்பச்சைக்
காரோங்கக் கட்டுகவே! தங்கமே! வேரோடு
பாரோங்கச் சொல்லுகவே பா!

பார்..சேர் பலகலையே! உன்னுடைய சேண்மாகண்
சீர்சேர் தமிழே!தண் சேர்பார்..சேர் - தார்..சேர்
புகழே! பொலிவேசேர்! தாயே தருக
பகையே ஒழிதேர்சேர் பா!

விளக்கவுரை:
    
உலகம் கற்றவர்களின் நல்லுறவை வேண்டும். சிந்தை செழிப்படைய பைந்தமிழின் சீரினை வேண்டும். ஊரில் பச்சைவயல்களின் அழகோங்கச் செய்வாய்! தங்கத்தமிழே நிலைத்து நிற்கும் வண்ணம் பாரோங்கச் சொல்லுவாய் பாட்டு.

தமிழே! என்னைப் பார்த்திடுவாய். பல்கலையே சேர்த்திடுவாய்! உன்னுடைய நீள்கயல் கண்களால் எனக்குச் சீரினைச் சேர்த்திடுவாய். குளிர்ச்சியைச் சேர்த்திடுவாய்! உறவாக இப்புவியைச் சேர்த்திடுவாய்! வெற்றி மாலையைச் சேர்த்திடுவாய்! புகழையும் பொலிவையும் சேர்த்திடுவாய்! என் தாயே! பகையை ஒழிக்கின்ற தேரைச் சேர்கின்ற பாடலைத் தந்திடுவாய்.

சித்திரத்தில் 1வது எண்ணிருக்கும் இடத்தில் முதல் வெண்பாவைத் தொடங்கி இடம்வலம், வலம்இடம் என மாறிமாறிப் படித்துக் கொண்டே தேரின் உச்சிவரை சென்று, அங்கிருந்து நேரே சீழிறங்க முதல் வெண்பா நிறைவடையும்.

நிறைவடைந்த 'பா' எழுத்தில் தொடங்கி வலது சக்கரத்திலிறங்கிச் சுற்றிப் படித்து உள்வட்டத்தையும் அவ்வாறே படித்து வந்த வழியே 'பா' வந்து, இடது சக்கரத்திலிறங்கிச் சுற்றிப் படித்து, உள்வட்டத்தையும் அவ்வாறே படித்து வந்த வழியே 'பா' வந்து இரண்டாம் வெண்பா நிறைவடையும்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
26.07.2019

jeudi 25 juillet 2019

சிவலிங்கப் பந்தம்



சிவலிங்க ஓவியக் கவிதை - 3
[பாடல் 143 எழுத்து, ஓவியம் 128 எழுத்து]
  
என்னாசிரியர்
அந்தாதி அரசர் பா.சு. அரியபுத்தரனார்
செழிப்பை யருள்கவே!
  
விந்தைத் தமிழை வேண்டித் தொழுதார்!
சிந்தை யினிக்கத் தேன்கவி வடித்தார்!
நாள்கள் யாவும் நலமே பெருகத்
தாள்கள் துாய வழியை யன்பையே
நாடிப் பொழிலே செல்ல, நெஞ்ச
மோடி மேவு முயர்வை! வாழ்வு
மேன்மை யூட்டும்! நாட்டும் வெற்றியை!
கோன்மை நல்கி மேலாங் கோலிடும்!
பேரார் சற்குரு பாரெலாம் வாழ்த்தவே
சீரெலாம் மேவுஞ் செழிப்பை யருள்கவே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
24.07.2019

mercredi 24 juillet 2019

வேல் பந்தம் 5



வேல் சித்திர கவிதை - 6
  
வேலா..பார் வார்காவே!
வேதா..மார் வார்தாவே!
வேதார்வார் மாதாவே!
வேகார்வார் பாலாவே!
  
வார் - வார்த்தல்
தா - வலிமை
வேதார் - வேத்தை ஓதுபவர்
வேகார் - பொறாமை யற்றவர்
  
விளக்கவுரை - வேலவனே என்னைப் பாராய். பூஞ்சோலையை எனக்கு வார்க்க வேண்டும். வேதத்தை உடையனே வலிமையை என் மார்புக்கு வார்க்க வேண்டும். அன்னையாகக் காப்பவனே வேதத்தை ஓதுபவர்களை எனக்கு அளிக்க வேண்டும். என்றும் அழகிய இளமையை உடையவனே பொறாமை யற்றவர்களை எனக்கு அளிக்க வேண்டும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
20.07.2019

mardi 23 juillet 2019

வேல் பந்தம்



வேல் சித்திர கவிதை - 4
  
இந்திய விடுதலை வீரர்
தோழர் தா. வாசுதேவப் படையாட்சி
நற்பேர் வாழ்கவே!
  
நேரிசை ஆசிரியப்பா
  
வேலேகண் ணாழ்மதி! வாகே வேர்மொழி!
சீரே தேற்றும் நல்லார் பேருளம்!
நீயார் நிலைகாணா நிறையிடு வல்லுநர்!
தாயா ரூர்தான் வாழ வந்தோர்
பேரார் தொண்டர்! போரார் வாசுதேவர்!
வீறார் வியன்றலை வர்!புகழ் தழைத்திடும்
விடுதலை வீரர்! தோழர்!
நடுநிலை யாளர் நற்சீர் வாழ்கவே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன.
20.07.2019

dimanche 21 juillet 2019

வேல் பந்தம் - 3

வேல் சித்திர கவிதை - 3
  
வா..வா..தே னே!வாழ்வே! வாழ்கவி கண்மிக..வா!
நாவோது நற்றேன்..தா! மாதர..வா! - மேவிரத
நா..வாழ் கவிகற்றே மேவி..வா! தாதுமிக
வா..வேழ்வா னே!தேவா! வா!
  
கண் - அறிவு, பெருமை
மா - செல்வம், வலிமை, அழகு
மே - மேன்மை
மேவுதல் - விரும்புதல்
தாது - மலர்
  
விளக்கவுரை
  
இனிமையான தேனே வாராய்! என் வாழ்வே வாராய்! வாழும் கவிஞனாகிய எனக்குப் பெருமை மிகுந்தோங்க வாராய்! நாவோதும் தமிழ்த்தேனைத் தாராய்! நல்லழகைத் தந்திட வாராய்! மேன்மையைத் தரும் தவத்துக்குரிய பாடல்களை நான் கற்றுக்களிக்க விரும்பியே வாராய்! வாழ்வு மலராக மலர்ந்து மணம்வீச வாராய்! ஏழுலகுக்கும் வானாக இருக்கும் தேவனே வாராய்!
  
வேலின் அடியில் பாடலைத் தொடங்கி, வேல் பகுதில் படுக்கைக் கோட்டில் ஏறிச் உச்சியை அடைந்து, வேலைச் சுற்றி, மீண்டும் உச்சியை அடைந்து, உச்சியிலிருந்து கீழ் இறங்கிப் பாடல் தொடங்கி இடத்தில் நிறைவடையும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
21.07.2019

vendredi 19 juillet 2019

வேல் பந்தம் 2


வேல் சித்திர கவிதை
    
சித்திர கவி நுால்களில் ஐந்து வகையான வேல் சித்திரங்கள் உள்ளன. மயிலிட்டி க. மயில்வாகப் புலவர் எழுதிய நகுலேச்சர வினோத விசித்திர கவிப்பூங்கொத்து நுாலில் வஞ்சி விருத்தத்தில் அமைந்த வேல் சித்திரம் உள்ளது. இவ்வேல் முதல் அடியும் ஈற்றடியும் மாலை மாற்றாகவும், இடை இரண்டடிகள் மாலை மாற்றகவும் அமைந்துள்ளது. [பாடல் 32 எழுத்துக்கள், சித்திரம் 16 எழுத்துக்கள்]
    
பி.வி. அப்துல் கபூர் சாகீப் அவர்கள் எழுதிய சித்திர கவிமாலை நுாலில் இணைக்குறள் ஆசிரியப்பாவால் வேல் சித்திரம் அமைந்துள்ளது. [பாடல் 115 எழுத்துக்கள், சித்திரம் 90 எழுத்துக்கள்]
    
பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் வேல் சித்திரம் நேரிசை வெண்பாவால் அமைந்துள்ளது. மிக்க கடினமாக எழுதும் முறையில் அமைந்துள்ளது. [பாடல் 55 எழுத்துக்கள் சித்திரம் 30 எழுத்துக்கள்]
    
செட்டிபாளையத்தைச் சேர்ந்த கல்யாண சுந்தரக் கவுண்டர் பாடிய கந்தன் சித்திர பந்தன மாலை நுாலில் வஞ்சித்துறையால் வேல் சித்திரம் அமைந்துள்ளது. [பாடல் 33 எழுத்துக்கள் சித்திரம் 29 எழுத்துக்கள்]
    
சென்னையைச் சேர்ந்த உவமைப்பித்தர் அவர்களின் செந்தமிழ்த்தாய் திருவாயிரம் நுாலில் வெண்பாவால் வேல் சித்திரம் உள்ளது. வெண்பாவின் ஈற்றடி மாலை மாற்றாக அமைந்துள்ளது. [பாடல் 52 எழுத்துக்கள், சித்திரம் 40 எழுத்துக்கள்]
    
சித்திர கவிதை எழுத முயற்சி செய்வோர் எளிமையாக எழுதும் வண்ணம் குறட்பாவில் வேல் சித்திரத்தை நான் உருவாக்கி உள்ளேன். நம் பயிலரங்கப் பாவலர்கள் இவ்வகையை எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
    
வேற்கண் விடுகணை மேவி மதுவேறும்!
பாற்கண் படருமே பாட்டு!
    
இக்குறட்பா 26 எழுத்துக்களைப் பெற்றிருக்க வேண்டும். ஒன்றிவரும் எழுத்துக்கள் [1-13] [7-18]
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
18.07.2019

mercredi 17 juillet 2019

சேவல் பந்தம்



சேவல் ஓவியக் கவிதை
  
கட்டழகே கண்!மின்பொன் மிக்கு வியனழகே!
மொட்டழகே! காதல் மொழிமிகு - பட்டழகே!
சொத்தென ஆடும் கொடிவாழும் பின்னழகே!
மத்தென வாடும் மனம்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
17.07.2019

mardi 16 juillet 2019

மயில் பந்தம்


மயில் ஓவியக் கவிதை
  
இன்பநல் லாட்ட மிடுமே! மனமே! இசைமயிலே!
உன்..தலை கண்வெகு பொன்னார் கலையொளி சீதனமே!
மின்னும் வடிவே! வினைதீர்!சேண் சேர்வேன்!சீர் வெல்லழகே!
கன்சுவை யாழ்..கவி மேவி..நீ! வான்யாப்பில் வாழ்கநீடே!
  
சேண் - இறையுலகம்.
கன் - கற்கண்டு
  
கருத்துரை:
  
இசைந்தாடும் மயிலே! நீ தோகை விரித்தாடும் நடனம் கண்டு என்மனம் மயங்கி ஆடும். உன்னுடைய தலையும் கண்ணும் நிறைபொற்கலையின் சொத்தாகும். மின்னும் அழகே! என்னுடைய வினையைத் தீர்ப்பாய். நானும் உன்போல் இறையுலகில் வாழ்வேன். சீரழகே! வெல்லழகே! கற்கண்டு சுவையுடை என்றன் கவிதையில் மேவித் தமிழ் யாப்பில் நிலைத்து வாழ்க!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
16.07.2019

lundi 15 juillet 2019

வேல் பந்தம் 1


 சித்திர கவி மேடை - 4
  
வேல் சித்திர கவிதை
  
கண்கள் வேலோ? காவோ?
பண்கள் தேனோ? பாலோ?
புண்கொள் கோலோ? போரோ?
பெண்கள் மேவு பேறே!
  
இந்தக் கட்டளை வஞ்சி விருத்தத்தில் ஒவ்வோர் அடியும் எட்டு எழுத்துக்களைப் பெற்று வரும். அடிதோறும் மூன்றாம் சீரில் மோனை அமைய வேண்டும்.
  
பாடலில் ஒன்றி வரும் எழுத்துக்கள்.
[1-11] [6-22] [12-20] [16-21]
  
விரும்பிய பொருளில் "வேல் சித்திரக் கவிதை" ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் 'வேல் சித்திரக் கவிதையைப்' பதிவிட வேண்டுகிறேன்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
15.07.2019

dimanche 14 juillet 2019

உடுச்சித்திர கவிதை


உடுச்சித்திர கவிதை
  
கண்ணா வாராய்!
  
கவிவளர் கோல்போல் வாராய்!
   கனிவளர் கோல்போல் வாராய்!
சுவைவளர் தேன்போல் வாராய்!
   சுனைவளர் நீர்போல் வாராய்!
சுனைவளர் மண்போல் வாராய்!
   சுளைவளர் மண்போல் வாராய்!
கவின்வள மரைபோல் வாராய்!
   கவிவளர் தமிழ்போல் காக்க!
  
கோல் - எழுதுகோல், மரம்
சுனை - மலைவூற்று, நீரும் நிழலும் உள்ள இடம்
கவி - கவிதை, புலவன்
கவின் - அழகு
  
கண்ணா எனக்கு நீ கவிதையைத் தருகின்ற எழுதுகோலாக வரவேண்டும். செழித்த கனிமரமாக வரவேண்டும். சுவைவளர் தேனாக வரவேண்டும். மலைவூற்றாக வரவேண்டும். நீரும் நிழலும் உள்ள நிலமாக வரவேண்டும். அழகாக மலர்ந்துள்ள தாமரைக் காடாக வரவேண்டும். புலவனாகிய என்னை வளர்க்கின்ற தமிழாக வரவேண்டும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
14.07.2019

vendredi 12 juillet 2019

குத்துவிளக்குச் சித்திர கவிதை



குத்துவிளக்குச் சித்திர கவிதை
  
வண்ணமே மின்னும் வண்குண மாதே!
தண்ணங் கொழித்த பழமே! தமிழே!
வடிவே! ஒளியே! வள்ள வயலே!
விடிவே! மனத்தின் விளக்கே! பொங்குமருள்
தன்னைறுற வேண்டியுரு கிடுமெனையே இன்ப
அன்னையுன் பொன்னடி யள்ளி வழங்குமே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
12.07.2019

jeudi 11 juillet 2019

தேர் ஓவியக் கவிதை


தேர் ஓவியக் கவிதை
  
அன்பா லெனக்கு மரனே! அறிவோங்க
இன்பால் கொடு!பே ரெழிலே இடு..நீ!நற்
காவிய மாக்கவே! காவே! அருமுறவே!
நாவிருந் துாருறவே நல்கு!
  
வானவா! கவியானவா!
வானயா னுறஞானவா!
வானஞா யிறுதானவா!
வானதா திருவானவா!
  
வான்வெளியாக இருப்பவனே. என்றன் கவியாக ஆனவனே! வானத்தை யான் உணரவே ஞானமாய் இருப்பவனே. கதிரவனாய் ஒளிர்பவனே. வனத்தைப் போன்று விரிந்த பேரழகை உடையவனே.
  
தாயே!வா! நிறை தா!வேதா!
தாவே..தா! தண் பாலே..தா!
தாலே..பா! மின் வானே..தா!
தானே..வா பண் வாயே..தா!
  
தாயே வருக. நிறைவான வாழ்வைத் தருக. வன்மையைத் தருக. ஞானந்தரும் குளிர்ந்த பாலைத் தருக. உன் திருநாக்கே எனக்குப் பாட்டாகும். வைகுந்த வாழ்வைத் தருக. தானாகவே வரவேண்டும். உன்னைப் பாடுகின்ற வாயைத் தரவேண்டும்.
  
தேரின் அடித்தட்டிலிருந்து ஒவ்வொரு தட்டாகப் படித்து, தேரின் மேல் கும்பத்திருந்து கீழிறங்க வெண்பா நிறைவுறும். இரண்டு சக்கரங்களும் நான்காரச் சக்கர ஓவியமாக உள்ளன.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
10.07.2019

mardi 9 juillet 2019

அறுமீன் சித்திர கவிதை   



அறுமீன் சித்திர கவிதை
  
மகரவொளியன் சபரி அன்பனைப்
பாடத் தமிழே வாராய்!
  
சந்தத் தமிழே! சபரியன் சீரை
வந்து பற்றுக! பேரை வாழ்த்துக!
வண்ண மணிதரி! வண்ணெண் ணமிங்களி!
மண்மணம் தோய வழங்கு மதியை!
தாயே! பாடும் நாவிலே உன்தாள்
நீயே நாட்டு நெஞ்சம் திகழ
நற்பா நல்கு! புகழே
பொற்பா ஓது! தா..மின் பூவே!
  
நடுவில் உள்ள விண்மீனில் 'சபரியன்பா' என்று வருவதைக் காண்க.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
09.07.2019

lundi 8 juillet 2019

மும்மீன் சித்திர கவிதை


மும்மீன் சித்திர கவிதை
  
காழ்வேன் பெருமுறுதி! கானந்..தா! செந்திருவே!
கார்மேனி மன்னனே! வாழ்வே..நீ! - சீரேநீ!
வான்மேகா! மீனேநான் தேறிட வாமனா!
கான்தேகா! வா!தேனே கா!
  
காழ் - மரவயிரம்
கா - காத்தல்
கான் - மணம், மலர்
  
கருத்துரை - உன்னிடத்தில் வன்மையாக உறுதிவைத்துள்ளேன்! செந்திருவே இசையை எனக்குத் த் தாராய்! கருமை நிறத்தைக் கொண்ட என் மன்னனே என் வாழ்வே நீ. நானுற்ற சீரே.. நீ. மழை தருகின்ற வான்மேகனே! வாமனனே! மலர்மணம் வீசுகின்ற மேனியனே! தேனே! இந்த மும்மீன் கவிதையை நான் எழுதிட, என்னைக் காக்க வாராய்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
07.07.2019

samedi 6 juillet 2019

சித்திர கவிமேடை - 4


சித்திர கவிமேடை - 4
  
சங்குச் சித்திர கவிதை
  
குன்றுறுங் கோகுலத்துச் சீர்த்தேனே! விண்ணரசே!
என்றுறும் பொன்னருளே! வா..திருவே! - அன்புறுந்பே
ரிங்கேந்தும் கன்னல்மிகும் வந்தொளிர் வாழ்வேந்தச்
சங்கேந்தும் கண்ணனே தாங்கு!
  
78 எழுத்துக்களைக் கொண்டிருக்கும் இவ்வெண்பா சித்திரத்தில் 73 எழுத்துக்களைப் பெற்றிருக்கும். ஒன்றாக வரும் எழுத்துக்கள் [1-78] [5-77] [16-75] [30-34] [56-69]
  
விரும்பிய பொருளில் சங்குச் சித்திர கவிதை ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் சங்குச் சித்திர கவிதையைப் பதிவிட வேண்டுகிறேன்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
06.07.2019

ஓம் சித்திர கவிதை




ஓம் சித்திர கவிதை

வள்ளலே! என்றன் மனக்குளத்திள் பூத்திடுவாய்!
எள்ளலே இன்றி இசைத்திடுவாய்! - முள்வாய்
கழித்தே எழில்தருவாய்! காத்துநலம் செய்வாய்!
பழிபடா வாழும்..பாப் பாடு

பாட்டரசர் கி. பாரதிதாசன்
06.07.2019

வெண்பா மேடை - 138


வெண்பா மேடை - 138
  
சீர்முதல் ஒற்றைக் கொம்புறு வெண்பா
  
கொக்கெனக் கொத்துவதேன்? செல்லமே! கெண்டைவிழி
சொக்கித் தொடுப்பதுமேன் கொக்கியை? - செக்கெனயென்
நெஞ்சமேன்? கொல்லுதடி பெண்ணேவுன் பொன்னழகு!
கொஞ்சவே சொற்கள் கொடு!
  
பாட்டரசர் கி.பாரதிதாசன்
  
சீர்முதல் இரட்டைக் கொம்புறு வெண்பா
  
சோலையெழில் சேயிழையே! தோகையெழில் தேவதையே!
கோலவெழில் போதைதரும் கோதையே! - சேலையெழில்
தேக்குதடி தேனுாற்றை! தேவியுன் சேலழகு
சேர்க்குதடி வேதனையைத் தேர்ந்து!
  
பாட்டரசர் கி.பாரதிதாசன்
  
கொம்பு முட்டும் வெண்பா
  
தொன்மொழியே! தேவே! தொழுமொழியே! தொண்டொளியே!
தென்மொழியே! தேனே! செழிப்பழகே! - பொன்மொழியே!
தேரழகே! செந்தமிழே! செம்மொழியே! சேர்ந்தெனக்கே
பேரழகே! பேறே பெருக்கு!
  
வெண்பாவின் தளை காணுமிடத்தில் நிலைமொழி ஈற்றெழுத்தும், வருமொழி முதலெழுத்தும் கொம்புடைய எழுத்தே வரவேண்டும்.
  
விரும்பிய பொருளில் இவ்வகை வெண்பக்களைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாக்களைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
06.07.2019

jeudi 4 juillet 2019

கோபுர ஓவியக் கவிதை


கோபுர ஓவியக் கவிதை
  
சிந்தை வேண்டும் சீர்மிக! நாடி
விந்தை பொழிய விரிவிழி! மாபொன்
மாதே! கழையே! தாயே! பூமனத்து
மீதே மனமாழ் காவே மின்னிடக்
காண்பண்! காண்திண்! கமழ்தவத் தேனே!
காண்செம்மை தந்தமை பெருகுமே தண்தகை
வகைதரும் வண்டமிழ் மதுமழை பொழிகவே!
  
கோபுரத்தின் அடியிலிருந்து ஒவ்வொரு கட்டமாக எழுத்துக்களைக் கூட்டிப் படிக்க,பாடலின் ஈற்றடி கோபுரத்தின் தலையிலிருந்து இறங்கி வருவதைக் காணலாம்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
04.06.2019