dimanche 4 décembre 2022

காசி ஆண்டவா

 

காசி ஆண்டவா!

நான்மையின ஏக தாளம்,  மும்மை நடை

 

1

கங்கை யணிந்தவா!

மங்கை புனைந்தவா!

திங்கள் முகத்தவா!

எங்கள் அகத்தவா!

 

தங்கு நலத்தவா!

பொங்கு வளத்தவா!

சங்கு மனத்தவா!

கொங்கு மணத்தவா!

 

ஆண்டவா! காசி ஆண்டவா!o ooo

தாண்டவா! எம்மைத் தாங்க...வாo ooo

 

2.

ஏடும் புனைந்தவா - செவித்

தோடும் அணிந்தவா!

காடும் புகுந்தவா - தமிழ்க்

காதல் மிகுந்தவா!

 

ஆடு கலையவா - ஒளி

சூடு மலையவா!

பாடும் இறையவா - எம்

பாவங் குறைய..வா!

 

ஆண்டவா! காசி ஆண்டவா!o ooo

தாண்டவா! எம்மைத் தாங்க...வாo ooo

 

3

காசி அளித்தவா!  - தமிழ்

பேசிக் களித்தவா!

நாசிக் காற்றவா - உனை

நாளும் போற்ற..வா!

 

பாச குணத்தவா - பூ

வாச இனத்தவா!

தேசு நிறத்தவா - எம்

மாசும் அகற்ற..வா!

 

ஆண்டவா! காசி ஆண்டவா!o ooo

தாண்டவா! எம்மைத் தாங்க...வாo ooo

 

4.

காக்கும் ஈசனே - புகழ்

பூக்கும் நேசனே!

யார்க்கும் தேவனே - வீரம்

சேர்க்கும் தேசனே!

 

ஆக்கும் இனியனே - துயர்

போக்கும் புனிதனே!

நோக்கும் அழகனே - வினை

நீக்கும் அமுதனே!

 

ஆண்டவா! காசி ஆண்டவா!o ooo

தாண்டவா! எம்மைத் தாங்க...வாo ooo

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

04.12.2022

samedi 3 décembre 2022

சிந்துப்பா

                                அன்பே வா...

ஆதி தாளம் - மும்மை நடை

 

காதல் காவியமே - என்

கண்ணைக் கவ்வும் ஓவியமே!

மோதல் பார்வை வாட்டுதடி - மன

மோகத் தீயை மூட்டுதடி!

 

சொக்கும் விழியழகே - தேன்

சுரக்கும் துாய மொழியழகே!

கொக்கி போட்டே இழுக்குதடி  - பல

கோடி ஏக்கம் கொழுக்குதடி!

 

பச்சை வயற்கிளியே! - நற்

பருவஞ் செழித்த பசுங்கொடியே!   

உச்சந் தலைக்கே ஏற்றுதடி! - காம

உணர்வைப் பொங்கி ஊற்றுதடி!

 

மூக்கு நேரழகி - நெஞ்சை

முட்டித் தாக்கும் மாரழகி!

நாக்குச் சிவந்து மின்னுதடி - எனை

நார்போல் கிழித்துப் பின்னுதடி!

 

வைரக் காதழகு - உன்

வடிவுக் கிணையாய் ஏதழகு?

தைல நெடிபோல் ஏறுதடி - ஆசை

தமிழ்போல் நெஞ்சுள் ஊறுதடி!

 

வட்டப் பொட்டழகு - உடல்

மாய மிகுந்த கட்டழகு!

தொட்டுப் பார்க்கத் துடிக்குதடி - உனைத்

துாக்கி யணைக்கக் குதிக்குதடி!

 

சிவந்த வாயழகு - உன்

சிரிப்புக் கொஞ்சும் சேயழகு!

கவர்ந்து மெல்லக் கொல்லுதடி - உளம்

கட்டிக் கொள்ளத் துள்ளுதடி!

 

இஞ்சி இடுப்பழகி - நீர்

ஏற்றப் பாட்டின் தொடுப்பழகி!

மஞ்சள் விளைந்து மயக்குதடி - என்னுள்

மஞ்சம் விளைந்து இயக்குதடி!

 

சின்ன இடையழகு - எனைச்

சிதைக்கும் வாழைத் தொடையழகு!

என்ன என்ன வித்தையடி - வா..வா

இனிக்கும் பஞ்சு மெத்தையடி!

 

பவளக் காலழகு - எழில்

பாடும் பாக்கள் பாலழகு!

தவளை சத்தம் போடுதடி - உயிர்

தழுவிக் களிக்க ஆடுதடி!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

03.12.2022

எண் செய்யுள்


 

பாவலர்மணி பட்டம் பெற்ற கவிப்பாவை அவர்களுக்கு வாழ்த்து

பெயர்ப் பத்து [எண் செய்யுள்]

 

1.

சொல்ல இனித்திடுமே! துாயமண நல்கிடுமே!

வல்ல திறனை வழங்கிடுமே! - நல்லதமிழ்

தீட்டும் கவிப்பாவை தேன்பெயா் வாழியவே!

ஊட்டும் அமுதை உயிர்க்கு!  

 

2.

ஊட்டும் அமுதை உயிர்க்குத் தமிழழகைக்

காட்டும்! கருணைக் கலைசூட்டும்! - ஈட்டுபுகழ்

நங்கை கவிப்பாவை நற்பெயா் வாழியவே!

கங்கை யருளால் கமழ்ந்து!

 

3.

அருளால் கமழ்ந்திடுமே! ஆற்றல் தருமே!

பொருளால் இதயம் புகுமே! - திருமகளைப்

போற்றுங் கவிப்பாவை பூண்டபெயர் வாழியவே!

சாற்றுந் தமிழ்போல் தழைத்து!

 

4.

தழைக்கின்ற சோலை! தணிக்கின்ற தென்றல்!

உழைக்கின்ற ஆற்றல்! உயர்ந்தே - செழிக்கின்ற

சந்தக் கவிப்பாவை தண்பெயர் வாழியவே!

கந்தத் தமிழ்போல் கமழ்ந்து!

 

5.

கமழ்மணங் கொண்டும் கனிமன முற்றும்

இமைகணங் காக்கும் இயல்பும் - உமையருள்

போற்றும் கவிப்பாவை பூண்டபெயர் வாழியவே!

ஏற்றும் கொடியென ஈங்கு!

 

6.

ஈங்குத் தமிழோங்க ஈடில் இனமோங்கத்

தேங்கு வளமோங்கச் சீரோங்கத் -  தாங்குதிறம்

ஓங்கக் கவிப்பாவை ஒண்பெயர் வாழியவே!

பூங்குவளை போலெழில் பூத்து!

 

7.

பூத்த இதயத்துள் மூத்த குறண்மணக்கும்!

காத்த நெறிமணக்கும்! கற்றவர் - ஏத்திடவே

வாழும் கவிப்பாவை வண்பெயர் வாழியவே!

யாழின் இனிமையை ஈந்து!

 

8.

ஈந்துவக்கும் நெஞ்சம்! இசையுவக்கும் நல்லறிவு!

ஆழ்ந்துவக்கும் ஆற்றல்! அறத்தமுதைத் - சேர்ந்துவக்கும்

வண்ணக் கவிப்பாவை  வல்லபெயர் வாழியவே!

மண்ணின் மரபை வளர்த்து!

 

9.

மண்ணின் மரபை வளர்க்கின்ற நல்வாழ்வு!

பெண்ணின் சிறப்புப் பெருமாண்புத்  - தண்மைசேர்

கன்னல் கவிப்பாவை காத்தபெயர் வாழியவே!

என்றும் இறையருள் ஏற்று!

 

10.

ஏற்ற பணிசிறக்கும்! இன்பத் தமிழ்சிறக்கும்!

சாற்றச் செயல்சிறக்கும்! சால்பளிக்கும்! - ஆற்றழகு

முற்றும் கவிப்பாவை மூத்தபெயர் வாழியவே!

சுற்றும் உலகமே சொல்லு!

 

[பாட்டுடைத் தலைமகனின் பெயரைப்  புகழ்ந்துரைக்கும் பொருண்மையில் பாடப்பெற்றுப் பாடிய எண்ணளவால் பெயரேற்பது எண் செய்யுள் என்பர்] பாட்டரசர் கி. பாரதிதாசன்

பாட்டரசர் கி. பாரதிதாசன்

03.12.2022