Affichage des articles dont le libellé est குறட்டாழிசை. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est குறட்டாழிசை. Afficher tous les articles

jeudi 1 février 2018

சந்தக் குறட்டாழிசை

வெண்பா மேடை - 62
  
சந்தக் குறட்டாழிசை
  
ஒரு பாடலின் எல்லா அடிகளிலும் ஒரே வகையான சந்தம் அமைந்திருந்தால் அதனைச் சந்தப் பாடல் என்பார்கள்.
  
சந்த மாத்திரை
  
குற்றெழுத்துக்கு ஒரு மாத்திரை. நெட்டெழுத்துக்கும், குறில் ஒற்றுக்கும், நெடில் ஒற்றுக்கும் இரண்டு மாத்திரை [ அ - ஒரு மாத்திரை] [ஆ, அன், ஆண் - இரண்டு மாத்திரை]
  
அருமை யானனடை! அமுத மானதொடை!
அழகி லாடுமுடை ஒளிருதே!
பெருமை யானகவி! உரிமை யானமொழி!
ஒருமை யாகவெனை இணையுதே!
  
தனன தானதன தனன தானதன
தனன தானதன தனதனா
  
என்ற சந்தத்துடன் மேலுள்ள பாடல் அமைதுள்ளமையால் இது சந்தக் குறட்டாழிசை யாகும்.
  
ஓர் எதுகையில் அமைந்த சமமான இரண்டடிகள் வரவேண்டும். ஓரடியில் எத்தனைச் சீா்களும் வரலாம். மேலுள்ள பாடலில் அடிக்கு ஏழு சீர்கள் உள்ளன. முதல் சீரும், மூன்றாம் சீரும், ஐந்தாம் சீரும் மூன்று சந்த மாத்திரைகளைப் பெற்றுள்ளன. இரண்டாம் சீரும், நான்காம் சீரும், ஆறாம் சீரும் ஐந்து சந்த மாத்திரைகளைப் பெற்றுள்ளன. இறுதியில் உள்ள சீர் வேறு வகைத் தாளத்துடன் ஐந்து சந்த மாத்திரைகள் பெற்றுள்ளது. [தனன - முன்று மாத்திரை, தானதன - ஐந்து மாத்திரை, தனதனா - ஐந்து மாத்திரை]
  
ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைய வேண்டும். மேற்கண்ட அமைப்பில் எங்கும் ஒற்றுகள் வாராமை நோக்கத் தக்கது.
  
சந்த மாத்திரைக் கணக்கில் பல்வேறு சந்தங்களில் இப்பாடலை அமைத்துப் பாடலாம்.
  
வருக செம்மையுற! உழுக நன்மையுற!
வரைக மென்மையுற அன்பாலே!
தருக வன்மையுற! தமிழி[ன்] இன்பமுற!
தனிமை தண்மையுற என்தாயே!
  
தனன தந்ததன தனன தந்ததன
தனன தந்ததன தந்தானா
  
என்ற சந்தத்தில் அமைந்துள்ள குறட்டாழிசை. 1, 3, 5 ஆகிய சீர்கள் மூன்று சந்த மாத்திரைகளைப் பெற்று வந்தன. 2, 4, 6, ஆகிய சீர்கள் ஐந்து மாத்திரைகளைப் பெற்று வந்தன. 7 ஆம் சீர் ஆறு சந்த மாத்திரைகளைப் பெற்று வந்தது.
  
மேற்கண்ட அமைப்பில் எழுசீர்ச் சந்தக் குறட்டாழிசை ஒன்றை, விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் குறட்டாழிசையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
31.01.2018

samedi 13 janvier 2018

வெண்பா மேடை - 61

வெண்பா மேடை - 61
  
குறட்டாழிசை - 3
  
1.
செல்லமே என்று சொல்லும் பொழுதெலாம்
வெல்லமே வந்து மேவி இனிக்குதடி!
  
2.
வஞ்சிக் கொடியே! வண்ண மதுமலரே!
கொஞ்சும் உன்மொழி நெஞ்சை உருக்குதடி!
  
3.
வீசும் காற்றே! விந்தை நடத்துடன்
பேசும் அழகு பித்தம் கொடுக்குதடி!
  
4.
செவ்விதழ் அசைந்து செப்பும் சீரெலாம்
அவ்விறை வீட்டின் அமுதை அளிக்குதடி!
  
5.
முல்லைப் பற்களை முட்டி வரும்மொழி
எல்லை இல்லா இன்பம் இசைக்குதடி!
  
6.
தாமரை இதழ்..நா தவழ்ந்து வரும்மொழி
பாநிறை ஏந்திப் பாசம் படைக்குதடி!
  
7.
மீட்டும் யாழென மெல்லொலிச் சொல்லெலாம்
ஊட்டும் தேனினைக் கூட்டிக் கொடுக்குதடி!
  
8.
வல்லொலிச் சொற்கள் வண்ண நடையுடன்
கொல்லெழில் ஏந்திக் கொள்ளை நடத்துதடி!
  
9.
இடையொலிச் சொற்கள் இளமைத் தமிழ்தரும்
படையுடன் வந்து பற்றிக் களிக்குதடி!
  
10.
பச்சைக் கிளியாய்ப் பகரும் சொல்லெலாம்
இச்சை யளித்தே வித்தை காட்டுதடி!
  
11.
கோலக் குயிலாய்க் கூவும் குரலிசை
கால மெல்லாம் காதல் கூட்டுதடி!
  
12.
கோதை நல்கும் குளிர்ந்த உரையெலாம்
போதை நல்கும் புலமை விளைக்குதடி!
    
வெண்செந்துறை போல அடி இரண்டாய் வந்து விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் இன்றி வருவதும் குறட்டாழிசை யாகும்.
    
ஓரடியில் எத்தனைச் சீா்களும் வரலாம். எத்தளையும் வரலாம். இரு அடிகளிலும் சீரின் எண்ணிக்கை ஒன்றுபட்டு வரவேண்டும்.
    
[மேலுள்ள பாடல் சிற்றின்பக் கருத்தை ஏந்தி வந்ததால் குறட்டாழிசை யானது]
  
இரண்டடிகளும் ஓரெதுகை பெற்று வரும். இரண்டடிகளிலும் தகுந்த இடத்தில் மோனை பெற்றொளிரும்.
  
வெண்செந்துறை போல அடி இரண்டாய் வந்து, விழுமிய பொருளின்றி, ஒழுகிய ஓசையின்றி வரும் குறட்டாழிசை ஒன்றை, விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் குறட்டாழிசையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
13.01.2018