Affichage des articles dont le libellé est யமக வெண்பா. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est யமக வெண்பா. Afficher tous les articles

samedi 26 janvier 2019

யமக வெண்பா


வெண்பா மேடை - 134
  
யமக வெண்பா
  
தமிழ் நுாலார் மடக்கு என்பதனை வடநுாலார் யமகம் என்றனர். ஓரெழுத்தொருமொழியோ, பல எழுத்தொருமொழியோ செய்யுளில் தொடர்ந்தும் இடையிட்டும், முதலிலோ நடுவிலோ இறுதியிலோ மடங்கி வந்து வேறொரு பொருள் தருமாயின் அவ்வனப்பு மடக்கு என்னும் சொல்லாணியாகும். [மடக்கு - வந்த சொல்லே வருதல்]
  
முதலெழுத்தொன்று மாத்திரம் மாற, ஏனைய எழுத்துக்கள் ஒன்றி மேற்கூறியவாறு மடக்கி வருவது திரிபு மடக்கு எனப்படும்.
  
ஓரடியே, நான்கடியும் மடக்கி வருவது ஏகபாதம் ஆகும். யமக அந்தாதி, திரிபு அந்தாதி, ஏகபாத அந்தாதி எனச் சிற்றிலக்கியங்கள் பிற்காலத்தே பலவாகத் தோன்றின.
  
வெண்பாவின் நான்கடிகளிலும் எதுகையில் ஒரே சொல் மடக்காக வந்து வெவ்வேறு பொருள் பயக்கும் வண்ணம் பாடப்படுவது யமக வெண்பாவாகும். கீழுள்ள வெண்பாவில் 'மெய்' என்ற சொல் 'உண்மை, உடல், உணர்ச்சி, உயிர்' என நான்கு பொருள்களில் வந்துள்ளது.
  
மெய்யை விளக்கிடுவாய்! மேன்மை புகும்வண்ணம்
மெய்யை விளக்கிடுவாய் வேங்கடனே! - பொய்யாடும்
மெய்யை விளக்கிடுவாய்! மேவும் வினையொழிய
மெய்யை விளக்கிடுவாய் வென்று!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
வேங்கடத்தில் வாழும் திருமாலே!
  
எனக்கு உண்மையைத் தெளிவிப்பாய்!
என் உடலைத் துாய்மையாக்கிடுவாய்!
பொய்யுணர்ச்சியைத் துடைப்பத்தால் பெருக்கிடுவாய்!
முன்வினை நீங்க என்னுயிரை விளக்காக இடுவாய்!
  
இவ்வாறு அமைந்த 'யமக வெண்பா' ஒன்றை விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து யமக வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
25.01.2019