lundi 30 août 2021

பாவலர் இராம. மீனாட்சி சுந்தரனார் வாழ்க!

 


பாவலர் இராம. மீனாட்சி சுந்தரனார் வாழ்க!

 

வழக்கறிஞர் உயர்பணியைச் செய்துபுகழ் பெற்றும்

   வண்டமிழில் கவிபாடும் மரபாசை கொண்டார்!

அழகறிஞர், அருமறிஞர் என்றுநலம் போற்ற,

   அன்பறிஞர், அருளறிஞர் என்றுமனம் வாழ்த்த,

உழவறிஞர் ஆய்வெனவே தமிழ்ஓளவை சொன்ன

   உயர்நெறியை நன்குணர்ந்து விருத்தங்கள் கண்டார்!

தொழுமறிஞர் வழியேற்றுத் துாயதமிழ் காக்கும்

   தொல்இராம. மீனாட்சி சுந்தரனார் வாழ்க!

 

முற்றறிவு நுால்படித்து முந்துபுகழ் பெற்றும்

   முத்தமிழில் ஆற்றலுற முப்பொழுதும் வந்தார்!

பற்றறிவும் பணிவறிவும் படர்ந்துயரும் தீரர்!

   பண்பறிவும் பகுத்தறிவும் சுடர்ந்துயரும் வீரர்!

கற்றறிவு வாணர்களைக் கண்ணெனவே யெண்ணிக்

   கவியறிவு செழித்திடவே விருத்தங்கள் தந்தார்!

சிற்றறிவு பேரறிவு நிலையாய்ந்து பாடும்

   சீர்இராம. மீனாட்சி சுந்தரனார் வாழ்க!

 

பல்லரங்க நிலைநாடிப் பாடுபுகழ் பெற்றும்

   பாட்டெழுதும் பயிலரங்கை உறவெனவே உற்றார்!

மல்லரங்கும் மாண்பரங்கும் வண்ணமுறக் கண்டு,

   மதியரங்கும் மனத்தரங்கும் மணங்கமழக் கொண்டு, 

சொல்லரங்கு, சுவையரங்குப் பாட்டரங்கம் என்று,

   சொக்குமது ஊறிடவே விருத்தங்கள் கற்றார்!

வெல்லரங்கு நுட்பங்கள் மேவுதமிழ் வாணர்!

   வியன்இராம. மீனாட்சி சுந்தரனார் வாழ்க!

 

பன்னுால்கள் கற்றாய்ந்து பயன்வாழ்வைப் பெற்றும்

   பண்ணுால்கள் உற்றாய்ந்து நம்னத்தைத் தொட்டார்!

பொன்னுால்கள் இன்னுால்கள் கூறுநெறி சூடிப்

   புதுநுால்கள் புகழ்நுால்கள் புலமையுறப் பாடி,

வன்னுால்கள் இவர்நுால்கள் என்றுலகு சொல்ல

   வடிவாக வளமாக விருத்தங்கள் இட்டார்!

நன்னுால்கள் ஓதுகின்ற பாதையினை நல்கும்

   நறும்இராம. மீனாட்சி சுந்தரனார் வாழ்க!

 

கைந்நுாறு காக்கின்ற நட்புறவைப் பெற்றும்

   கவிநுாறு பூக்கின்ற கலையரங்கைச் சேர்ந்தார்!

தைந்நுாறு தகைநுாறு வந்தனபோல் எண்ணித்

   தமிழூறும் படைப்புகளைத் தலையூறப் பின்னி,

ஐந்நுாறு விருத்தங்கள் அமுதெனவே ஈந்தார்!

   அருங்கவிதைப் பேருலகில் பாவலராய்ச் சார்ந்தார்!

பைந்நுாறு பொன்னிட்டுப் பாட்டரசன் தந்தேன்

   பண்இராம. மீனாட்சி சுந்தரனார் வாழ்க!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

30.08.2021

vendredi 27 août 2021

சாற்றுகவி

பாவலர் செல்வ. மீனாட்சி சுந்தரம் எழுதிய

விருத்தமாயிரம் நுாலின் முதல் பகுதிக்குச் சாற்றுகவி!

 

பார்அரங்கைக் காத்துவரும் மறவர் போன்று

   பயிலரங்கைக் காக்கின்றார்! பொன்னால் செய்த

தேர்அரங்கைக் கண்டுவக்கும் மக்கள் போன்று    

   சீரரங்கை யாம்கண்டு வியப்பே யுற்றோம்!

யார்அரங்கை அடைந்தாலும் அங்கே யுள்ள

   யாப்பரங்கைக் கடைவிரிப்பார்! மரபின் மாட்சி

வேர்அரங்கைத் தாங்குகின்ற விழுதாய்ச் செல்வ.

   மீனாட்சி சுந்தனார் வாழ்க வாழ்க!

 

ஈரோட்டுப் பெரியாரின் போர்வாள் ஏந்தி

   எத்தர்களின் இழிசெயலை எதிர்த்து நின்றார்!

பாராட்டுப் பேரறிஞா் வழியை ஏற்றுப்

   பகுத்தறிவுப் பாசறையைக் காவல் செய்தார்!

தேரோட்டும் சாரதியாய்ப் பயிற்சி மன்றைச்

   சிறப்புடனே செலுத்துகிறார்! மனிதம் காத்தார்!

வேரூட்டும் வன்மையென என்றும் செல்வ.

   மீனாட்சி சுந்தரனார் வாழ்க வாழ்க!

 

பாடிவைத்த விருத்தங்கள் பாரின் சொத்து!

   பசுந்தமிழாள் சூடிமகிழ் வாசக் கொத்து!

மோடிவைத்த மாயத்தைக் குழிக்குள் போட்டு

   மூடிவைத்த எழுத்துக்கள் மொழியின் வித்து!

தாடிவைத்த பாரதியும், வங்கம் பெற்ற

   தாகூரும் இணைந்தெழுதும் கவிதைச் சித்து!

மேடைவைத்துத் தமிழ்பரப்பும் என்போல் செல்வ.

   மீனாட்சி சுந்தரனார் வாழ்க வாழ்க!

 

சொல்புதிது சுவைபுதிது பாடும் பாக்கள்!

   துாயதமிழ்ப் புலமையுளம் சூடும் பூக்கள்!

பல்புதிது முளைக்கின்ற மழலை யாகப்

   பழகுகின்ற அன்புக்கே ஈடும் இல்லை!

இல்புதிது காணுகின்ற இன்ப மாக

   எழுதுகின்ற கவித்தொண்டர்! என்றன் சீடர்!

வில்புதிது கூர்மையென எங்கள் செல்வ.

   மீனாட்சி சுந்தரனார் வாழ்க வாழ்க!

 

இலக்கணமும் இலக்கியமும் கண்கள் என்றே

   ஏத்துகின்றார்! மாண்பொளிரும் கொள்கை கொண்டார்!

கலையினமும் கவியினமும் கற்றே நாளும்

   களிக்கின்றார்! கற்றோர்மேல் காதல் பூண்டார்!

நிலவளமும் நீர்வளமும் ஓங்கும் நாடாய்

   நிறைகின்றார்! என்னணியில் முன்னே நின்றார்!

விலைக்கனமும் தலைக்கனமும் ஓடச் செய்யும்

   மீனாட்சி சுந்தரனார் வாழ்க வாழ்க!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

27.08.2021

வெண்பா மேடை - 211

 


வெண்பா மேடை - 211

 

ஒரு வெண்பா பொருள் ஐந்து

[வேறு வகை]

 1.

பூத்தோங்கும் வாழ்க்கையும், பொன்னோங்கும் சிந்தையும்,

மூத்தோங்கும் கொள்கையும், முத்தமிழும், - காத்தோங்கும்

முன்னைப் பயனும், முதுநெறியும், மூச்சோங்கும்

அன்னை அளித்த அருள்!

 2.

வல்ல குருவருளும் வண்ணத் திருவருளும்

நல்ல உயர்நட்பும் நற்புகழும் - சொல்லரிய

முன்னைப் பயனும், முதுநெறியும், மூச்சோங்கும்

அன்னை அளித்த அருள்!

3.

தென்னவளே! எந்நாளும் தேனாய் இனிப்பவளே!

பொன்னவளே! பூத்துப் பொலிபவளே! - என்னவளே!

முன்னைப் பயனும், முதுநெறியும், மூச்சோங்கும்

அன்னை அளித்த அருள்!

4.

தேரோடும் வண்ணமெனச் சீரோடும் என்பாட்டில்

ஏரோடும் இன்ப எழிலுாறும்! - பேரோதும்

முன்னைப் பயனும், முதுநெறியும், மூச்சோங்கும்

அன்னை அளித்த அருள்!

5.

இல்லறம் பூத்திடுமே! இன்னிலை கூத்திடுமே!

நல்லறம் காத்திடுமே! நற்றொண்டு - பல்கிடுமே!

முன்னைப் பயனும், முதுநெறியும், மூச்சோங்கும்

அன்னை அளித்த அருள்!

 ஐந்து வெண்பாக்களிலும் பின் இரண்டடிகள் ஒன்றாக வரவேண்டும். முன் இரண்டடிகள் மாறிப் பொருள் வேறாக அமையவேண்டும். மேலுள்ள வெண்பாக்கள், சிறந்த வாழ்வு, இறையருள், காதல், பாடல், இல்லறம், எனப் பொருள்பெற்று வந்துள்ளன.

 'ஒரு வெண்பா ஐந்து பொருள்' வரும் இவ்வகை  வெண்பா  எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

27.08.2021

jeudi 26 août 2021

பாவலர் செல்வ. மீனாட்சி சுந்தரனார்

 


பாவலர் செல்வ. மீனாட்சி சுந்தரனார்

பிறந்தநாள் வாழ்த்துப்பா!

 

வானாட்சி கதிரென்பேன்! வாழும் இந்த

   மண்ணாட்சி அறமென்பேன்!  ஈடே யில்லாத்

தேனாட்சி தமிழென்பேன்! ஈழங் கண்ட

   தென்னாட்சி மறமென்பேன்! தழைத்தே ஓங்கும்

கானாட்சி அரியென்பேன்! யாப்பைக் காக்கும்

   கவியாட்சி யானென்பேன்! கடமை நெஞ்சர்

மீனாட்சி சுந்தரனார் கொண்ட ஆட்சி

   வியன்பெரியார் நெறியென்பேன்! வாழ்த்து கின்றேன்!

 

அன்பூறும் அகங்கண்டேன்! அறிவே ஓங்கி

   அழகூறும் முகங்கண்டேன்! கற்றோர் போற்றும்

இன்பூறும் பணிகண்டேன்! பாடும் மன்றில்

   எழிலுாறும் அணிகண்டேன்! இனத்தின் மேன்மை

என்பூறும் நிலைகண்டேன்! சந்தம் வண்ணம்

   இசைந்துாறும் தலைகண்டேன்! ஒளியை நல்க

மின்னுாறும் விசையாக இயங்கும் ஆற்றல்

   மீனாட்சி சுந்தரனார் வாழ்வில் கண்டேன்!

 

பகுத்தறிவுப் பாதையினைப் படைக்க வேண்டிப்

   பகலிரவாய் உழைத்திடுவார்! நுால்கள் ஆய்ந்து

தொகுத்தறிவு மணந்திடவே நுண்மை சொல்வார்!

   தோழரெனத் துணையிருப்பார்! உலகம் வாழ

வகுத்தறிவு நெறியுரைப்பார்! தமிழாம் அன்னை

   வளமோங்க வாழ்வோங்க வழிகள் செய்வார்!

மிகுத்தறிவு மேதைகளை நெஞ்சுள் தாங்கும்

   மீனாட்சி சுந்தரனார் வாழ்க! வாழ்க!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம்  பிரான்சு

26.08.2021