சேவல் ஓவியக்கவிதை
நேரிசை வெண்பா
கோலமிகு சேவலே! கூவியே பாடுவாய்!
காலமுணர் மாமணி யாவாய்..நீ! - காலையின்
தண்சூடு வாய்!உணர்ந்தென் னெஞ்சேவாழ்ந் திங்கெழுவாய்
கண்வாடு பாயே கழித்து!
அருங்சொற்பொருள்
தண் - குளிர்ச்சி
பாய் - படுத்திறங்கும் பாய்
இவ்வொண்பா சேவலின் தலையில் தொடங்கி உடல் வழியாகச் சென்று இறகு தொடங்கு இடத்தில் 'வா' என்ற எழுத்தில் நின்று அங்கிருந்து கீழிறகில் சென்று அதன் மேலிறகின் வழியாக 'வா' எழுத்தை அடைந்து, இவ்வாறே மேலுள்ள இறகுகளில் சென்று இறுதியாக வா எழுத்தை அடைந்து உடல் வழியாகக் காலடைந்து பாடல் நிறைவுறும். செய்யுள் 64 எழுத்துக்களைப் பெறும். ஓவியம் 57 எழுத்துக்களைப் பெறும்.
கருத்துரை
விடியலைக் கூவி வரவேற்கும் சேவலின் செயலைத் தன் நெஞ்சிக்கு எடுத்தோதுகிறது இவ்வெண்பா.
அழகிய சேவலே, மக்கள் விழிப்புறக் காலை விடியலைக் கூவிப் பாடுவாய். நீ காலத்தை உணர்ந்த மாமணியாவாய். காலை தருகின்ற குளிர்ச்சியைச் சூடுவாய்!
என் நெஞ்சமே! சேவலின் செயலை உணர்ந்து வாழ்வாய். காலைப்பொழுதின் கடமை மறந்து கண்சோர்ந்து பாயில் உறங்குகின்ற வினை நீக்கி இங்கெழுவாய்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
09.11.2019
