dimanche 24 juillet 2022

ஒன்றில் ஒன்று [ மிறைப்பா]

 

ஒன்றில் ஒன்று [ஏக பங்கி]

[கட்டளைத் கலித்துறை - நேரிசை வெண்பா]

 

ஒன்றுடன் ஒன்று கலந்திருப்பதுபோல் ஒரு செய்யுளுக்குள் மற்றுமொரு செய்யுள் இருப்பது ஒன்றில் ஒன்று என்னும் சொற்சித்திரமாம். இவ்வகையை மிறைப்பாவென முன்னோர் வழங்கினர்.

 

ஒரு பாடலில் இருந்து பகுத்து வந்த மற்றப் பாடலும் எதுகை, மோனை, தளை, புணர்ச்சி, பொருள், யாப்புநெறி யாவும் சிறப்புடன் இருக்க வேண்டும். கட்டளைக் கலித்துறையில் நேரிசை வெண்பா வந்துள்ளதைக் காண்க.

 

கட்டளைத் கலித்துறை

 

சின்ன முயலோ? சிரிக்கும் சிலையோ?பொற் கன்னமதில்

என்ன கலையோ?சீர் மின்னி மயக்கும் இறையழகோ?

மன்னர் மரபோ? இயக்குமென் பேரன் எழில்வளமோ?

கன்னல் தமிழோ? கவிதை யமுதோ? களித்தனனே!

 

நேரிசை வெண்பா

 

சின்ன முயலோ? சிரிக்கும் சிலையோ?பொற்
கன்னமதில் என்ன கலையோ?சீர் - மின்னி

மயக்கும் இறையழகோ? மன்னர் மரபோ!  

இயக்குமென் பேரன் எழில்!

 

கட்டளைத் துலித்துறை இலக்கணம்

 

ஐந்து சீர்களுடைய நான்கடிகள் ஓரெதுகையில் அமைய வேண்டும்.

முதல் நான்கு சீர்கள் வெண்டளை கொண்டிருக்க வேண்டும்.

ஐந்தாம் சீர் விளங்காயாக இருக்க வேண்டும். [கருவிளங்காய், கூவிளங்காய்]

பாடல் ஏகாரத்தில் முடிய வேண்டு.

ஒன்று ஐந்தாம் சீர்களில் மோனை அமையவேண்டும்.

நேரசையால் தொடங்கும் பாடல் அடிதோறும் ஒற்று நீக்கி 16 எழுத்தும், நிரையசையால் தொடங்கும் பாடல் 17 எழுத்தும் கொண்டிருக்கும்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்,
15.07.2022

ஒன்றில் ஒன்று [ மிறைப்பா]


 

ஒன்றில் ஒன்று [ஏக பங்கி]

[வஞ்சி விருத்தம் - வஞ்சித் துறை]

 

வஞ்சி விருத்தம்

மா+ மா +காய்

 

தண்மை தழைக்கும் தகையெழுமே!

வெண்மை விளைக்கும் விதியெழுமே!

திண்மை திளைக்கும் திறனெழுமே!

உண்மை யுளத்தில் ஒளியெழுமே!

 

வஞ்சித்துறை

 

தண்மை தழைக்கும்

வெண்மை விளைக்கும்

திண்மை திளைக்கும்

உண்மை யுளத்தில்

 

வஞ்சி விருத்தின் அடிதோறும் ஈற்றுச்சீரை நீக்கினால் வஞ்சித்துறைக் கிடைக்கும். வஞ்சி விருத்தம் 1, 3 மோனை பெறும். வஞ்சித் துறையை நோக்கி அடிதோறும் முச்சீரும் மோனை பெறுதல் சிறப்பு.

 

எளிதாக இந்தப் பாடலை எழுதும் முறை

 

முதலில் அடிதோறும் பொருள் நிறைவுறும் வஞ்சித்துறை எழுத வேண்டும் [மா + புளிமா]  பின்னே காய்ச்சீரை ஒவ்வோர் அடியின் ஈற்றில் சேர்த்து வஞ்சி விருத்தமாக்க வேண்டும்.

 

மேலுள்ள இரண்டு பாடலும் அளைமறி பாப்புப் பொருள்கோளள் பெற்றுள்ளதைப் படித்து மகிழவும்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

23.07.2022

ஒன்றில் ஒன்று [மிறைப்பா]


ஒன்றில் ஒன்று

[கலிவிருத்தம் - வஞ்சி விருத்தம்]

 

கலிவிருத்தம்

[குறிலீற்று மா + கூவிளம் + கூவிளம் + கூவிளம்]

 

நல்ல பேரினை நாட்டுவோம் பண்புடனே!

இல்லச் சீரினை ஈட்டுவோம் அன்புடனே!

மெல்ல யாழினை மீட்டுவோம் பண்ணுடனே!

வெல்ல வானினைவேட்டுவோம் இன்புடனே!

 

வஞ்சி விருத்தம்

[மா + கூவிளம் + கூவிளம்]

 

நல்ல பேரினை நாட்டுவோம்!

இல்லச் சீரினை ஈட்டுவோம்!

மெல்ல யாழினை மீட்டுவோம்!

வெல்ல வானினை வேட்டுவோம்!

 

கலிவிருத்தத்தின் அடிதோறும் ஈற்றுச்சீரை நீக்கினால் வஞ்சி விருத்தம் கிடைக்கும். கலிவிருத்தம் 1, 3  ஆம் சீர்கள் மோனை பெறும்.

 

எளிதாக இந்தப் பாடலை எழுதும் முறை

 

முதலில் அடிதோறும் பொருள் நிறைவுறும் வஞ்சி விருத்தம் எழுத வேண்டும் [மா + கூவிளம் + கூவிளம்]  பின்னே காய்ச்சீரை ஒவ்வோர் அடியின் ஈற்றில் சேர்த்து கலிவிருத்தமாக்க வேண்டும்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

24.07.2022

vendredi 22 juillet 2022

தாப்பிசைப் பொருள்கோள்

 


தாப்பிசைப் பொருள்கோள்

 

இடைநிலை மொழியே ஏனை ஈரிடத்தும்

நடந்து பொருளை நண்ணுதல் தாப்பிசை

 

[நன்னுால் - 415] [ இலக்கண விளக்கம் - 366]

 

தாப்பிசை முதல்கடைத் தன்பொருள் தருமொழி

யாப்பிசை இடையே இயம்புதல் என்ப.

 

[தொன்னுால் விளக்கம் - 310]

 

இடைமொழி முதலினும் ஈற்றினும் எய்தித்

தருவது பொருளைத் தாப்பிசை யாகும்.

 

[முத்துவீரியம் செய்யுளணி - 28]

 

... நடுச்சொல் முதல் கடைபோய் தெளிதல்....

 

[சுவாமி நாதம் - 69.2.3]

 

தாம்பு + இசை =  தாப்பிசை [வலித்தல் திரிபு

தாம்பு -  ஊஞ்சல் கயிறு

இசை - சொல்

 

செய்யுளின் இடையில் நிற்கும் சொல் ஊஞ்சல் கயிறு போல் முன்னும் பின்னும் சென்று பொருள் கொள்ளுமாறு அமைவது தாப்பிசைப் பொருள்கோள் எனப்படும்.

 

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு

 

இக்குறளில் ஊன் என்பது இடைநிலை மொழி.

 

ஊன் உண்ணாமை உள்ளது உயிர்நிலை

ஊன் உண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு

 

இடையிலே நின்ற ஊன் என்ற ஒருசொல் முன்னும் பின்னும் வந்து 'ஊன் ஊண்ணாமை', 'ஊன் உண்ண' என்று பொருள்கொள்வது தாப்பிசைப் பொருள்கோள் ஆகும்.

 

துன்பம் நிறைந்திடுமோ? தொல்லை தொடர்ந்திடுமோ?

இன்னல் வெறுப்பும் இருந்திடுமோ?  - அன்பிருந்தால்

முற்றி உறவோங்கும்! சுற்றி மகிழ்வோங்கும்!

பற்றிப் படர்ந்தோங்கும் பண்பு!

 

மேலுள்ள வெண்பாவில் இடையில் நின்ற சொல் அன்பிருந்தால் துன்பம், தொல்லை, இன்னல் இல்லையென முன்னுள்ள அடிகளுக்கு, அன்பிருந்தால் உறவு, மகிழ்வு? பண்பு  ஓங்கும் என பின்னுள்ள அடிகளுக்கும் பொருள்கொள்ளச் செய்தது.

 

இதனை இடைநிலைத்தீவகம் என்ற பொருளணி வகையாக்குவர் அணி நுாலார்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

03.10.2021

விருத்த மேடை - 70

 விருத்த மேடை - 70

 

கலிவிருத்தம்  - 6

[காய் + காய் + காய் + காய்]


[பெரும்பாலுங் காய் முன் நிரையாகிய கலித்தளை வரும். அருகியே வெண்டளை வரும்]

 

கங்கையிரு கரையுடையான்! கணக்கிறந்த நாவாயான்!

உங்கள்குலத் தனிநாதற் குயிர்த்துணைவன்! உயர்தோளான்!

வெங்கரியின் ஏறனையான் விற்பிடித்த வேலையினான்!

கொங்கலரும் நறுந்தண்டார்க் குகனென்னும் குறியுடையான்!

 

[கம்பர், அயோத்தியா. கங்கைகாண் - 25]

 

வில்லுடையான்! விழியிரண்டில் விரிந்தமலர் அழகுடையான்!

மல்லுடையான்! மணக்கின்ற மனமுடையான்! அமுதுடைய

சொல்லுடையான்! அடியார்தம் தொண்டுடையான்! ஒருத்தியெனும்

இல்லுடையான்! இனிப்புடையான்! இராமனெனும் திருமகனாம்!

 

[பாட்டரசர்]

 

கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப் பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.

 

காய் + காய் + காய் + காய் என்ற வாய்பாட்டில் அமைந்த கலிவிருத்தம் ஒன்று விரும்பிய பொருளில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
22.07.2022