samedi 2 décembre 2023

கலித்துறை - 1


 கலித்துறை

 

ஐஞ்சீர் அடிகள் நான்கு அளவு ஒத்து ஓர் எதுகையில் வருவது கலித்துறையாம். அது கட்டளைக் கலித்துறை என்றும் கலிநிலைத் துறை என்றும் இருவகையாம். [கலிநிலைத்துறை, காப்பியக் கலித்துறை என்றும் அழைக்கப்படும்.]

 1.

கட்டளைக் கலித்துறை நேரசையில் தொடங்கினால் ஓரடிக்கு எழுத்துப் பதினாறும், நிரையசையில் தொடங்கினால் ஓரடிக்கு எழுத்துப் பதினேழும் பெற்றுவரும்.

 2.

அறிமறியாகாமல், எழுத்து வரையறையப்படாமல் வருவது கலிநிலைத்துறையாம்.

பலவகையாகக் கலிநிலைத்துறை அமையும். ஒவ்வொன்றிலும் இன்ன இடத்தில் இன்ன சீர் வரவேண்டும்  என்ற விதிமுறைகள் உண்டு.

 கட்டளைக் கலித்துறை, கோவைக் கலித்துறை யெனவும், திலதக் கலித்துறை யெனவும் இருவகைத்து என்பர்.

3.

கோவைக் கலித்துறை, ஈற்றடி மூன்றாம் சீர்ச்சொல்  பக்குவிட்டு முதற்சீரோடு ஒன்றி ஒழுகிய ஓசையுடன் வரும். இரண்டாம் நான்காம் சீர்களும் அவ்வாறு ஓசை பிரிந்தொழுகின் மிக்க சிறப்புடையதாம்.

4.

ஈற்றடி ஐந்து சீரும் வகையுளி இன்றி நிகழ்வது திலதக் கலித்துறையாம்

 5.

அடிமறியாய் ஐஞ்சீர் நான்கடியாய் வருவது அறிமறி மண்டிலக் கலித்துறையாம். இப்பாடலில் யாதோர் அடியை எடுத்து முதல் நடு கடையாக உச்சரிப்பினும் ஓசையும் பொருளும் மாறுபடாது அமையும்.

இலக்கணக் குறிப்பு

நெடிலடி நான்காய் நெறிப்பட நிகழ்வது

கலித்துறை

[இலக்கண விளக்கம் - 739]

ஐஞ்சீர் முடிவின் அடித்தொகை நான்மையொடு

எஞ்சா மொழிந்தன எல்லாம் கலித்துறை

[காக்கை]

ஐஞ்சீர் நான்கடி கலித்துறை யாகும்

[அவிநயம்]

கலித்துறையே நெடிலடி நான்காய் நிகழ்வது

[யாப்பருங்கலக் காரிகை - 34]

நெடிலென் றுரைத்த

பேரடிநான்கு கலித்துறை யாமென்பர்

[வீர சோழியம்- 123]

கலித்துறை நெடிலடி நான்கொத்து அவற்றுள்

இடைநேர் வெண்சீர் இயற்சீர் முதல்நான்கு

இடைநிரை வெண்சீர் இறுதிச்சீர் மோனையாய்க்

கடையே கொண்டுஇறும் கட்டளைக் கலித்துறை

[தொன்னுால் - 241]

ஐஞ்சீ ரடிநான் காய்அள வொத்து

வருவது கலித்துறை யாம்

[முத்து வீரியம் - 50]

 

----------------------------------------------------------------------------------------------------------

 

கலித்துறை மேடை - 1

 

கட்டளைக் கலித்துறை

 

ஓரடியில் ஐந்து சீர்கள் இருக்கும். நான்கு அடிகளைப் பெற்று வரும். நான்கடிகளும் ஓரெதுகை பெறும். 1.5 ஆம் சீர்களில் மோனை.

 

முதல் நான்கு சீர்களில் வெண்டளை அமைந்திருக்கும். அடியின் ஈற்றிலிருந்து அடியின் தொடக்கத்திற்கு வெண்டாளை அமைய வேண்டியதில்லை

 

ஐந்தாம் சீர் விளங்காயாக அமைய வேண்டும்.

 

முதல் நான்கு சீர்களில் ஈரசை சீர்களும், மாங்காய்ச் சீர்களும் வரும். முதல் நான்கு சீர்களில் விளங்காய்ச் சீர் வராது.

 

பாடல் ஏகாரத்தில் முடிய வேண்டும்.

 

நேரசையில் தொடங்கினால் ஓரடியில் 16 எழுத்துகளும் நிரையசையில் தொடங்கினால் 17 எழுத்துகளும் பெறும்.

 

எடுத்துக்காட்டுப் பாடல்

 

அள்ளிக் கொடுக்கின்ற செம்பொனும் ஆடையும் ஆதரவாக்

கொள்ளிக்கும் பட்ட கடனுக்கும் என்னைக் குறித்ததல்லால்

துள்ளித் திரிகின்ற காலத்தி லேயென் துடுக்கடக்கிப்

பள்ளிக்கு வைத்தில னேதந்தை யாகிய பாதகனே!

[தனிப்பாடல்]

 

விழிக்குத் துணைதிரு மெய்ம்மலர் பாதங்கள்! மெய்ம்மைகுன்றா

மொழிக்குத் துணைமுரு காவெனும் நாமங்கள்! முன்புசெய்த

பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும்! பயந்ததனி

வழிக்குத் துணைவடி வேலும்செங் கோடன் மயூரமுமே!

 [கந்தரலங்காரம்]

 

தனந்தரும் கல்வி தரும்ஒரு நாளும் தளர்வறியா

மனந்தரும் தெய்வ வடிவும் தரும்நெஞ்சில் வஞ்சமில்லா

இனந்தரும் நல்லன எல்லாம் தரும்அன்பர் என்பவர்க்கே

கனந்தரும் பூங்குழ லாளபி ராமி கடைக்கண்களே!

[அபிராமியந்தாதி]

 

முன்னமுன் அன்னை முலையூட்டி மையிட்டு மூக்குச்சிந்திக்

கன்னமும் கிள்ளிய நாளல்ல வேயென்னைக் காப்பதற்கே

அன்னமும் மஞ்ஞையும் போல்இரு பெண்கொண்ட ஆண்பிள்ளைநீ

இன்னமும் சின்னவன் தானோசெந் துாரில் இருப்பவனே!

[பொற்களந்தைப் படிக்காசுத் தம்பிரான்]

 

கட்டளைக் கலித்துறையில் ஐந்தாம் சீராக வரும் விளங்காய் வரும் இடங்களில்  மாங்கனிச் சீரும்,  இறுதியில் மூன்று நேரசைகளை உடைய மாந்தண்பூச் சீரும் அருகி வருவதுண்டு. மேலுள்ள அபிராமி அந்தாதியில் 'கடைக்கண்களே' என்று மாங்கனியும், படிக்காசுத் தம்பிரான் பாடலில் 'மூக்குச்சிந்தி' நாலசைச் சீரும் வந்தன. விளங்காயாக வருவதே சிறப்பாகும்.

 

அன்னைத் தமிழே! அமிழ்தின் சுவையே! அருள்வடிவே!

முன்னை முகிழ்த்த முனிவன் வளர்த்த முதுமொழியே!

என்னை மயக்கும் எழிலாய் மிளிரும் இளையவளே!

உன்னை எனதார் உயிரெனக் காப்பேன் உவந்தினியே!

[பாட்டரசர்]

 

இந்தக் கட்டளைக் கலித்துறை, நேரசையில் தொடங்கியதால் அடிக்கு ஒற்றுகள் நீக்கி 16 எழுத்துக்கள் பெற்றது.

 

அறமே விளையும்! அருளே பொழியும்! அறிவொளிரும்!

மறமே முழங்கும்! மதுவே வழங்கும்! மனமினிக்கும்!

திறமே யளிக்கும்! செயலே சிறக்கும்! திருக்கொடுக்கும்!

புறமே அகமே புவியே வியக்கும் புகழ்த்தமிழே!

[பாட்டரசர்]

 

இந்தக் கட்டளைக் கலித்துறை நிரையசையில் தொடங்கியதால் அடிக்கு ஒற்றுகள் நீக்கி 17 எழுத்துக்கள் பெற்றது.

 

மேற்கண்ட கட்டளைக் கலித்துறை ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம், பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

02.12.2023

mercredi 29 novembre 2023

விருத்த மேடை - 98

 


விருத்த மேடை - 98

 

சந்தக் கலிவிருத்தம் - 15

 

தந்த+தந்ததன+தந்தன +தானா

[3+5+4+4 சந்த மாத்திரை]

 

நஞ்சு மஞ்சு[ம்]விழி நாகியர் நாண

வஞ்சி யஞ்சுமிடை மங்கைய[ர்] வானத்[து]

அஞ்சொ லின்சுவைய ரம்பைய ராடிப்

பஞ்ச மஞ்சிவணு மின்னிசை பாட

 

[கம்பன், யுத்த. இராவணன் வானரத்தானை - 4]

 

தந்த+தந்ததன+தந்தன +தானா என்ற அமைப்புடைய பாடல் இது. முதற்சீர் 3 மாத்திரை. இரண்டாம் சீர் 5 மாத்திரை. முன்றாம் சீரும் நான்காம் சீரும் 4 மத்திரை.

 

முதல் சீராகத் தான, தாந்த, தனன என்பனவும் வரும். இரண்டாம் சீராகத் தானதன  என்பதுவும் வரும். மூன்றாம் சீராகத் தானன என்பதும் வரும். இறுதிச் சீராகத் தான, தந்த, தந்தா என்பனவும் இவை இறுதியில் ஒற்றுப்பெற்றனவும் வரும். மோனை 1, 3 ஆம் சீர்களில் அமையும்.

 

சின்ன கண்களடி சிந்தனை கூடும்!  

என்ன இன்பமடி என்மன மாடும்!

சொன்ன சொற்களடி தொன்மொழி சூடும்!

கன்ன லிட்டதடி கற்பனை யூறும்!  

 

மேற்கண்ட சந்தக் கலிவிருத்தம் ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

29.11.2023

 

lundi 27 novembre 2023

ஆசைக் கடலில்

 


ஆசைக் கடலில்....

 

ஆசைக் கடலில் நீந்துகிற

       ஆட்டம் போதும்! செந்தமிழாம்

ஓசைக் கடலில் மனமுழுகி

       ஒளிரச் செய்வாய் திருமாலே!

மீசை முறுக்கி வீண்சண்டை

       வினைகள் போதும்! உள்ளொன்றிப்

பூசை அறையில் தவநெறியைப்

       புரியச் செய்வாய் திருமாலே!

 

அகத்தை யுடைத்தே எண்ணங்கள்

       அலைதல் போதும்! பற்றற்றுச்

சுகத்தைக் காணும் நல்லமைதி

       சூழச் செய்வாய் திருமாலே!

முகத்தைப் பார்த்தே உயிர்சொக்கி

       முணங்கல் போதும்! கவிபாடிச்

செகத்தை வெல்லும் உயர்புலமை

       செழிக்கச் செய்வாய் திருமாலே!

 

அதையும் இதையும் அடைந்திடவே

       ஆடல் போதும்! பழியான

எதையும் புரியா நெஞ்சத்தை

       எனக்குக் தருவாய் திருமாலே!

சதையும் எலும்பும் அழகென்று

       சாற்றல் போதும்! மண்ணுக்குள்

புதையும் முன்னே ஞானவொளி

       பொலியச் செய்வாய் திருமாலே!

 

மண்ணும் பொன்னும் பெரிதென்ற

       மயக்கம் போதும்! வண்டமிழின்

பண்ணும் பாட்டும் வாழ்வென்று

       பணியச் செய்வாய் திருமாலே!

பெண்ணும் கண்ணும் போதையெனப்

       பிதற்றல் போதும்! மேலுள்ள

விண்ணும் என்னுள் ஆட்பட்டு

       மின்னச் செய்வாய் திருமாலே!

 

நான்றான் நான்றான் என்றெண்ணி

       நவிலல் போதும்! தற்பெருமை

ஏன்றான் ஏன்றான் தெளிவுற்றே

       இயங்கச் செய்வாய் திருமாலே!

வான்றான் வான்றான் காதலென

       வாழ்தல் போதும்! இறையொளிதான்

தேன்றான் தேன்றான் சுவையூறித்

       திளைக்கச் செய்வாய் திருமாலே!

 

பொய்யே புழுத்துப் புரளுகிற

       புன்மை போதும்! எந்நாளும்

மெய்யே பூத்து மணக்கின்ற

       மேன்மை செய்வாய் திருமாலே!

அய்யே யென்று பிறர்சொல்லும்

       அல்லல் போதும்! விளைந்தோங்கும்

செய்யே போன்று நலமீயச்

       செம்மை செய்வாய் திருமாலே!

 

அறிவே யின்றி வினையாற்றி

       அழிதல் போதும்! நல்லோரின்

நெறியே உணர்ந்து கைப்பற்றி

       நிறைவைத் தருவாய் திருமாலே!

வெறியே கொண்டு தள்ளாடும்

       வேட்கை போதும்! உடலுற்ற

பொறியே யடங்கி தவமோங்கும்

       புத்தி தருவாய் திருமாலே!

 

கள்ளம் நிறைந்து வாழ்ந்திட்ட

       காலம் போதும்! மெய்ந்நெறியே

உள்ளம் நிறைந்து மிளிர்கின்ற

       உயர்வைத் தருவாய் திருமாலே!

துள்ளும் இளமைப் பருவத்தின்

       துன்பம் போதும்! சிந்தைனையுள்

பள்ளம் குள்ளம் இல்லாமல்

       பசுமை தருவாய் திருமாலே!

 

நம்பி வந்தோர்க் கின்னலிடும்

       நாசம் போதும்! எம்மக்கள்

தம்பி நீயே என்றோதும்

       தன்மை தருவாய் திருமாலே!

தும்பி வாலில் நுாலிட்ட

       துன்பம் போதும்! இனிவாழ்வில்

இம்மி பாவம் இல்லாமல்

       இயங்கச் செய்வாய் திருமாலே!

 

புறமே பேசித் திரிகின்ற

       போக்குப் போதும்! தமிழ்தந்த

அறமே பேசி யொளிர்கின்ற

       அழகே தருவாய் திருமாலே!

திறமே பேசி உழல்கின்ற

       செய்கை போதும்! வரிப்புலியின்

மறமே பேசி வெல்கின்ற

       வன்மை தருவாய் திருமாலே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

27.11.2023