dimanche 15 décembre 2024

கலித்தாழிசை - 8


 

கலிப்மேடை – 64

 

கலித்தாழிசை – 8

[இயற்சீர் வெண்டளையால் வந்த கலித்தாழிசை]

 

கலித்தாழிசை இரண்டு அடிகளிலும் வரும். பல அடிகளிலும் வரும். ஈற்றடியில் மற்ற அடிகளை விடச் சீர்கள் மிகுந்து வரும். மற்ற அடிகளின் சீர்கள் அளவொத்தும் வரும். அளவொவ்வாமலும் வரும். மடக்குப் பெற்றும் வரும்

 

இறைவா!  

 

கோடித் துயரெனைக் கொட்டி வதைப்பதோ?

தேடி வினையெனைத் தீண்டிச் சிதைப்பதோ?

கூடி உறவெனைக் குற்றிக் கிழிப்பதோ?

நாடிப் பழியெனை மூடி மறைப்பதோ?

……நலிவுறச் செய்தெனை மூடி மறைப்பதோ?

 

[பாட்டரசர்]

 

ஈற்றடி நீண்டு வருவது கலித்தாழிசையின் பொதுவிலக்கணமாகும். மேலுள்ள பாடல் இயற்சீர் வெண்டளையால் அமைந்தது.  [மா முன் நிரையும், விளம் முன் நேரும் வருதல் இயற்சீர் வெண்டளை] அடியின் ஈற்றிலிருந்து அடுத்த அடியின் தொடக்கத்திற்குத் தளை கோடல் இல்லை. நான்காமடி மற்ற அடிகளைவிட நீண்டிருப்பதால் நடுவில் துணித்து ஐந்தாம் அடிபோல் அமைக்கப்பட்டுள்ளது.  

 

முதல் மூன்றடிகளும் நான்கு சீர்களைப் பெற்றன. நான்காம் அடி எட்டுச் சீர்களைக் கொண்டது. நான்கடியும் ஓரெதுகை பெற்றுவரும். நாலாமடியின் முதற்சீருக்கு ஏற்ற மோனை அதன் செம்பாதியில் அமையும். முன்னுள்ள மூன்றடிகளில் ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.

 

இறுதியடியின் முற்பாதியின் இறுதிச்சீர்க்கும் பிற்பாதியின் முதற்சீர்க்கும் இயற்சீர் வெண்டளை கட்டாயமில்லை. இறுதியடியின் முற்பாதியும் பிற்பாதியும் இறுதிப் பகுதியில் மடக்குப் பெறும். இப்பாடலில் “மூடி மறைப்பதோ“ என்ற சொற்கள் மடக்காய் வந்தன.

 

விரும்பிய பொருளில் இவ்வகைக் கலித்தாழிசை ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

பாவலர் பயிலங்கம்

15.12.2024

samedi 30 novembre 2024

அம்மானை


 

கலிப்பா மேடை – 62

 

கலித்தாழிசை – 5

 

அம்மானை

 

அம்மானை என்பது மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்ற எண்ணிகையில் அமைந்த எலுமிச்சம்பழம் போன்ற காய்களை எறிந்து அவை கீழே விழாமல் பிடித்து விளையாடும் பெண்கள் விளையாட்டு.

 

அம்மானை ஆடும் போது ஒருத்தி  ஒரு கருத்தைக் கூறுவாள், அடுத்தவள் அதில் ஒரு வினாவை எழுப்புவாள், மூன்றாமவள் விடை கூறுவாள். மூவர் பாடுவதும், இருவர் பாடுவதும், ஒருவரே பாடுவதும் உண்டு.

 

அம்மானைப் பாடல் கலித்தாழிசையில் அமைதலும் உண்டு. வெண்டளை பயின்று வரும்.  முதல் மூன்றடிகள் அளவடியாய், ஈற்றடி எண்சீர் அடியாய் வரும். இரண்டாம் அடி ஈற்றிலும், நான்காம் அடி ஈற்றிலும், அதன் அரையடி ஈற்றிலும் அம்மானை என்ற சொல் அமையும். இரண்டாமடி மூன்றாமடியிலும் அந்தாதித்து வரும். நான்கடியும் ஓரெதுகை பெற்றுவரும். நாலாமடியின் முதற்சீருக்கு ஏற்ற மோனை அதன் செம்பாதியில் அமையும். முன்னுள்ள மூன்றடிகளில் ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.

 

இப்பாடல் அடிகள் வெண்டளை பொருந்தியே வரும் எனினும் முதலடி இறுதிச்சீருக்கும் அடுத்த அடி முதற்சீருக்கும் தளைகோடல் கூடாது [வெண்டளை கட்டாயமில்லை], ஆனால் அவ்விடத்தில் நேரொன்றிய ஆசிரியத்தளை அமையாது.

 

அம்மானைப்பாட்டு இசைப்பாட்டு ஆதலின் அம்மானை வரி எனவும்படும். இஃது ஒரு பொருள்மேல் மூன்றற்குக் குறையாமல் அடுக்கிவரும்.

 

சோழன் புகழ் அம்மானை

 

1.

வீங்குநீர் வேலி உலகாண்டு விண்ணவர்கோன்

ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானை?

ஓங்கரணம் காத்த உரவோன் உயர்விசும்பில்

துாங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை!

…… சோழன் புகார்நகரம் பாடலோர் அம்மானை!

 2.

புறவுநிறை புக்குப் பொன்னுலகம் ஏத்தக்

குறைவில் உடம்பெரிந்த கொற்றவன்யார் அம்மானை?

குறைவில் உடம்பெரிந்த கொற்றவன்முன் வந்த

கறவை முறைசெய்த காவலன்காண் அம்மானை!

…… காவலன் பூம்புகார் பாடலோர் அம்மானை!

3.

கடவரைகள் ஓரெட்டும் கண்ணிமையா காண

வடவரைமேல் வாள்வேங்கை ஒற்றினன்யார் அம்மானை?

வடவரைமேல் வாள்வேங்கை ஒற்றினன்திக்கு எட்டும்

குடைநிழலில் கொண்டளித்த கொற்றவன்காண் அம்மானை!

……கொற்றவன்தன் பூம்புகார் பாடலோர் அம்மானை!

 

[சிலப்பதிகாரம், வாழ்த்துக் காதை – 16, 17, 18]

.

பாட்டரரசர் அம்மானை!


1.

சீர்மணக்கப் பாட்டெழுதிச் சிந்தை கவர்கின்ற
பேர்மணக்கம் பாட்டரசர் பீடொளிரும் அம்மானை!
பேர்மணக்கம் பாட்டரசர் பீடொளிரும் நாடுண்டோ?
தார்மணக்கம் கோலுண்டோ? சாற்றுகவே அம்மானை!
……தமிழ்தந்த கோல்கொண்டு தாமாள்வார் அம்மானை!

2.

வெள்ளாடைப் பாட்டரசர் மேடை மணம்வீசம்!

முள்ளோடை மண்கூட முத்தாகும் அம்மானை!
முள்ளோடை மண்கூட முத்தாகும்  நற்றொழில்

ஒள்ளாடை வீணாகி ஓய்வுறுமே அம்மானை?
……ஒண்டமிழர் நுாலாடை ஒளிவீசும் அம்மானை!

3.

வல்ல புகழ்மேவி வாழ்கின்ற பாட்டரசர்

சொல்லச் செவியுருகிச் சொக்கிடுவார் அம்மானை!
சொல்லச் செவியுருகிச் சொக்குவது மாமாயம்

நல்ல செயலாமோ நல்கிடுவாய் அம்மானை?

……நல்லார் நடையழகு சீருரைக்கும் அம்மானை!

 

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
02.07.2022


அம்மானைப் பாடலில் ஈற்றில் வரும் விடைமொழியுள்  இருபொருள்படச் சிலேடை அமைதல் சிறப்பாகும். முப்பொருள் நாற்பொருள்படச் சிலேடை அமைதல் மிகச் சிறப்பாகும். மேலுள்ள பாட்டரசர் அம்மானையில் முதல் பாடலில் [கோல் – பிரம்பு, எழுதுகோல்] இரண்டாம் பாடலில்  [நுாலாடை – ஆடை, நுால்கள்]  மூன்றாம் பாடலில் [நடையழகு – பாட்டின் தொடையழகு, வாழ்வின் ஒழுக்கம்] என  இருபொருள் சிலேடை வந்தன.

 

விரும்பிய பொருளில் இவ்வகைக் கலித்தாழிசை அம்மானை ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

30.11.2024

samedi 23 novembre 2024

இடைமடக்காய் வந்த கலித்தாழிசை

 


கலிப்பா மேடை – 61

 

கலித்தாழிசை – 4

[இடைமடக்காய் வந்த கலித்தாழிசை]

 

வாள்வரி வேங்கை வழங்கும் சிறுநெறியெம்

கேள்வரும் போழ்தில் எழால்,வாழி வெண்திங்கள்!

கேள்வரும் போழ்தில் எழாதாய்க் குறாலியரோ

நீள்வரி நாகத்து எயிறே, வாழி வெண்திங்கள்!

 

[யாப்பருங்கலக் காரிகை - 34 மேற்கோள் பாடல்]

 

எண்ணங்கள் கூத்தாடும்! இன்பத்தைப் பூத்தாடும்!

வண்ணங்கள் பல்கோடி வார்த்தாடும்! என்செய்வேன்?    

வண்ணங்கள் பல்கோடி வார்த்தாடும் நள்ளிரவில்

உண்ணுங்..கள் போதையினை

….......................உள்ளாவி உற்றாடும் என்செய்வேன்?

 

[பாட்டரசர்]

 

இவை வெண்டளையால் அமைந்த நான்கடிப் பாடல். ஒரே பொருள்மேல் ஒன்றாய், ஈற்றடி மிக்கு, ஏனையடிகள் தம்முள் ஒத்து இடைமடக்காய் வந்த கலித்தாழிசையாகும். முதல் மூன்றடிகளில் நான்கு சீர்கள். ஈற்றடியில் ஐந்து சீர்கள். நான்கடியும் ஓரெதுகை. சீர்கள் ஒன்றில் மூன்றில் மோனை.

 

இடையில் உள்ள இரண்டடிகள் அடியின் தொடக்கத்தில் மடக்குப் பெற்றன. மேலுள்ள முதல் பாடலில் இடையில் உள்ள இரண்டு அடிகளில்  ‘கேள்வரும் போழ்தில்’ என்ற இருசீர்கள் அடியின் தொடக்கத்தில் மடக்காக வந்தன. இரண்டாம் பாடலில் ‘வண்ணங்கள் பல்கோடி வார்த்தாடும்’ என்ற சீர்கள் மடக்காக வந்தன.

 

இரண்டாம் அடியின் ஈற்றுச்சீரும் நான்காம் அடியின் ஈற்றுச்சீரும் மடக்காக அமைந்தன. முதல் பாடலில் ‘வெண்திங்கள்’ என்ற சீர் மடக்காக வந்தது. இரண்டாம் பாடலில் ‘என்செய்வேன்’ என்ற சீர் மடக்காக வந்தது. 

 

விரும்பிய பொருளில் இவ்வகைக் கலித்தாழிசை ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

பாவலர் பயிலங்கம்

22.11.2024

vendredi 15 novembre 2024

கலியொத்தாழிசை - 2

 


கலிப்மேடை - 60

கலித்தாழிசை – 3

 

கலித்தாழிசை இரண்டு அடிகளிலும் வரும். பல அடிகளிலும் வரும். ஈற்றடியில் மற்ற அடிகளை விடச் சீர்கள் மிகுந்து வரும். மற்ற அடிகளின் சீர்கள் அளவொத்தும் வரும். அளவொவ்வாமலும் வரும். மடக்குப் பெற்றும் வரும்.

 

கலித்தாழிசை தனிப்பாட்டாகவும் வரும். ஒரு பொருளில் மூன்று பாடல்கள் அடுக்கப்பட்டும் வரும். ஒரு பொருண்மேல் மூன்றாய் வருவனவற்றைக் கலியொத்தாழிசை என்பர்.

கலியொத்தாழிசை - 2

வெண்டளையால் வந்த கலியொத்தாழிசை


1.

செல்லார் பொழிற்றில்லைச் சிற்றம் பலத்தெங்கள்

பொல்லா மணியைப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள்!

2.

முத்தேவர் தேவை முகிலுார்தி முன்னான

புத்தேளிர் போலப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள்!

3.

அங்கற் பசுங்கன் றளித்தருளும் தில்லைவனப்

பூங்கற் பகத்தைப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள்!

 

[சிதம்பரச் செய்யுட் கோவை]

 

1.

கொய்தினை காத்தும், குளவி அடுக்கத்தெம்

பொய்தல் சிறுகுடி வாரல்,நீ ஐய, நலம்வேண்டின்!

2.

ஆய்வினை காத்தும் அருவி அடுக்கத்தெம்

மாசில் சிறுகுடி வாரல்,நீ ஐய, நலம்வேண்டின்!

3.

மென்தினை காத்தும் மிகுபூங் கமழ்சோலைக்

குன்றச் சிறுகுடி வாரல்,நீ ஐய, நலம்வேண்டின்!

 

[யாப்பருங்கலக் காரிகை - 34 மேற்கோள் பாடல்]

 

1.

சாதிவெறிப் பித்தேந்திச் சண்டையிடும் இவ்வுலகம்

நீதிநெறி நெஞ்சேந்தி நிம்மதியாய் வாழ்வுபெறல் எந்நாளோ?

2.

பொல்லாச் சமயவெறிப் போர்நடத்தும் இவ்வுலகம்

எல்லாம் ஒருநிலையே என்றெண்ணி வாழ்வுபெறல் எந்நாளோ?

3.

மண்பறித்துக் கூத்தாடும்! புண்ணரித்த இவ்வுலகம்

கண்பறித்துக் கூத்தாடும்! காப்புரிமை வாழ்வுபெறல் எந்நாளோ?

 

[பாட்டரசர்]

 

1.

பண்ணெழிலால் பாட்டரசன் பார்புகழைப் பெற்றாலும்

கண்ணெழிலால் வாட்டுகின்ற காரிகையே! காதல் மழைபெழிவாய்!

2.

சீர்க்குழலால் பாட்டரசன் பேரின்பம் பெற்றாலும்

கார்க்குழலால் வாட்டுகின்ற காரிகையே! காதல் மழைபெழிவாய்!

 3.

வேலழகால் பாட்டரசன் வெற்றிகளைப் பெற்றாலும்

காலழகால் வாட்டுகின்ற காரிகையே! காதல் மழைபெழிவாய்!

 

[பாட்டரசர்]

 

இவை வெண்டளையால் அமைந்த ஈரடிப் பாடல்கள்.  ஒரே பொருள்மேல் மூன்றடிக்கி வந்த கலியொத்தாழிசை. முதல் அடியில் நான்கு சீர்கள். இரண்டாம் அடியில் ஐந்து சீர்கள். இரண்டடியும் ஓரெதுகை. சீர்கள் ஒன்றில் மூன்றில் மோனை. மூன்று பாடல்களிலும் ஈற்றில் மடக்கமையும்.

 

முதல் பாடலில் ‘புகழ்மினோ வம்மின் புலவீர்காள்’ என்றும், இரண்டாம் பாடலில் ‘சிறுகுடி வாரல்,நீ ஐய, நலம்வேண்டின்’ என்றும், மூன்றாம் பாடலில் ‘வாழ்வுபெறல் எந்நாளோ’ என்றும்  நான்காம் பாடலில் ‘வாட்டுகின்ற காரிகையே! காதல் மழைபெழிவாய்!’ என்றும் மடக்கு அமைந்தன.

 

விரும்பிய பொருளில் இவ்வகைக் கலியொத்தாழிசை ஒன்று பாடுபாடு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

பாவலர் பயிலங்கம்

15.11.2024

mardi 12 novembre 2024

முனைவர் பூங்குழலி பெருமாள்

 


முனைவர் பூங்குழலி ஆறுமுகப்பெருமாள்

பிறந்தநாள் வாழ்த்து!

 

கூடைக் கனிகள் மேடை யுரையில்

  கொடுக்கும் முனைவர் பூங்குழலி

கோடை யென்ன குளிர்தான் என்ன

        கொண்ட பணிகள் உயர்வூட்டும்!

ஆடை யழகும் அணியின் அழகும்

        ஆகா வென்றே வியப்பூட்டும்!

வாடைக் காற்றும் தென்றல் காற்றும்

        வாழ்த்துப் பாடும் வாழியவே!

 

புதுவை மண்ணின் பொதுமை காக்கப்

        பூத்த முனைவர் பூங்குழலி

எதுகை யென்ன மோனை யென்ன

        இனிக்க வினிக்க மொழிபூக்கும்!

மதுவைக் குழைத்து வடித்த நுால்கள்

        மணக்க மணக்கச் நலஞ்சேர்க்கும்!   

புதுமைப் பெண்ணாய்ப் புவியே போற்றப்

        புகழே மேவும் வாழியவே!

 

தேடிச் சென்றும் ஓடிச் சென்றும்

        உதவும் முனைவர் பூங்குழலி

பாடிப் படைத்த பாட்டுக் குள்ளே

        பசுமைத் தமிழே கூத்தாடும்!

சூடிக் களிக்குஞ் சோலைப் பூக்கள்

        சொல்லும் பொருளில் மூத்தாடும்!

கோடி மகளிர் கொண்ட அவையுள்

        கோல நிலவாய் வாழியவே!

 

பிறந்த நாளில் சிறந்த வாழ்த்தைச்

        சேர்க்கும் முனைவர் பூங்குழலி

திறந்த மனமும் செம்மைக் குணமும்

        சீர்கள் பெருக வழிகாட்டும்!

கறந்த பால்போல் கன்னல் தேன்போல்

        கால மெல்லாம் சுவையூட்டும்!

நிறைந்த புகழும் நிலைத்த பேரும்

        நிலமே வாழ்த்தும் வாழியவே!

 

அண்ணா வென்றே யென்னை யழைக்கும்

        அருமை முனைவர் பூங்குழலி

கண்,நா, மூக்குச் செவிகள் யாவும்

        கம்பன் தமிழில் வளங்காணும்!

கண்ணா வென்றே கருணை வேண்டிக்

        கமழும் வாழ்வு கலைபூணும்!

பண்,நா கொண்ட பாட்டின் அரசன்

        பல்லாண்[டு] உரைத்தேன் வாழியவே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

12.11.2024