vendredi 31 décembre 2021

என் தோள் பையே!

 


என் தோள் பையே!

 

பிறப்பும் இறப்பும் யாரறிவார்?

   பீடாய் அமைந்த தோள்பையே!

சிறக்கும் என்றன் வாழ்வினிலே

   சேர்ந்தே இருந்து பயணித்தாய்!

மறுக்கும் மனமே இல்லாமல்

   வழங்கும் பொருளை ஏற்றிடுவாய்!

உறக்கம் தழுவும் சிலபொழுதில்

   உவந்து தலைக்கே அணையாவாய்!

 

தோளோ[டு] இணைந்த நட்பானாய்!

   தொண்டால் பழுத்த வாழ்வுற்றாய்!

வாலோ[டு] இருக்கும் குரங்கைப்போல்

   வடிவாய் என்மேல் ஆடிடுவாய்!

நுாலோ[டு] என்றும் இருந்திடுவாய்!

   நோக்கி மடிமேல் அமர்ந்திடுவாய்!

காலோ கையோ உனக்கில்லை!

   கடந்த துாரம் அளவில்லை!

 

தாயைப் போல உணவேந்தித்

   தந்த உன்னை மறப்பேனா?

வாயை மூடி அமைதியுடன்

   வானை நோக்கித் தவஞ்செய்வாய்!

நோயை ஏற்ற காலத்தில்

   நொடியும் என்னைப் பிரியலையே!

பாயைப் போட்டுப் படுத்தாலும்

   பக்கம் அமர்ந்தே இருந்தாயே!

 

பிள்ளை யாக உனைச்சுமர்ந்து

   பீடாய் நாளும் வலம்வந்தேன்!

கொள்ளை யழகாம் நீயென்று

   கூறிப் பல்லோர் சென்றிடுவார்!

வெள்ளைக் காரர் நிறத்தழகை

   விஞ்சும் உன்றன் உடல்வண்ணம்!

தொள்ளை ஏற்றும் வாடாமல்

   தொடர்ந்தே உழைத்த தோள்பையே!

 

ஆசை யாக என்மனைவி

   அணைத்தே உன்னை எடுத்திடுவாள்!

பாசை யுனக்குத் தெரியுமெனில்

   பாடி யிருப்பாய் அவளழகை!

காசை நன்றே காத்திடுவாய்!

   கழுதை யாகத் துாக்கிடுவாய்!

மாசை யுடனே நீக்கிடுவாய்!

   மதிப்பை எனக்குச் கூட்டிடுவாய்!

 

மூச்சுப் போகும் பொழுதினிலே

   முட்டி மோதும் நிலையைப்போல்

பேச்சுக் குன்றி நானின்றேன்

   பெரிதும் உழைத்த என்..பையே!

ஆட்சி முடித்தே உன்னங்கம்

   ஆட மறுத்து முடங்கியதே!

மாட்சி வீழ்ச்சி வாழ்வினிலே

   வந்து போகும் உணர்கின்றேன்!

 

வன்மை யாகும் இணைவதுவே,

   வாயை வீணே திறக்காமல்

நன்மை யறிந்து வாழ்வதுவே!

   நண்ணும் சுமையைத் தாங்குவதே!

தொன்மைப் பைகள் பலவுற்றேன்!

   தோழி யாக உனைப்பெற்றேன்!

மென்மை யாக எனைத்தழுவி

   விளைத்தாய் இன்பம் மறப்பேனா?

 

விதியைச் சுமக்க வேண்டுமென

   வெல்லும் வழியை உரைத்தனையே!

ததியை, மதியைச் சுமர்ந்திங்குத்

   தந்த பாடம் நீதிசெலும்!

சதியைச் சுமக்க வேண்டாமே!

   எதியைச் சுமக்க வேண்டாமே!

நொதியைச் சுமர்ந்த தோள்..பையே!

   மதியைச் சுமக்க வைத்தனையே!

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               

உழைத்தே உழைத்தே ஓய்தனையோ?

   உலகைக் கண்டு வெறுத்தனையோ?

அழைத்தே வஞ்சம் புரிகின்ற

   அவலங் கண்டு கொதித்தனையோ?

குழைத்தே பேசும் நரிச்செயலால்

   கோபங் கொண்டு வெடித்தனையோ?

கழைத்தேன் கவிதை யடிகளிலே

   கட்டி வைத்தேன் உன்..நினைவே!

 

எல்லாம் ஒருநாள் முடியுமென

   இயற்கை யுண்மை தெளியுற்றேன்!

பொல்லா வினைகள் புரியாமல்

   புவியில் வாழத் தலைப்பட்டேன்!

கல்லாய் இருக்கும் மனத்தினிலே

   கருணை தோன்ற இடமில்லை!

நல்லார் நடையைப் பின்பற்றி

   நாளும் வாழ்தல் வாழ்வாகும்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

31.12.2021

samedi 25 décembre 2021

விருத்த மேடை - 61

 


விருத்த மேடை - 61

 

எண்சீர் விருத்தம் - 14

 

விளம் +  விளம் + விளம் + மா

விளம் +  விளம் + விளம் + மா

 

கூவின பூங்குயில்! கூவின கோழி!

   குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்!

ஓவின தாரகை ஒளியொளி உதயத்

   தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்

தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்

   திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!

யாவரும் அறிவரி யாய்!எமக் கெளியாய்!

   எம்பெரு மான்!பள்ளி எழுந்தரு ளாயே!

 

[மாணிக்கவாசகர், திருப்பள்ளியெழுச்சி]

 

கதிரவன் குணதிசை சிகரம்வந் தணைந்தான்

   கனவிருள் அகன்றது காலையம் பொழுதாய்

மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம்

   வானவர் அரசர்கள் வந்துவந் தீண்டி

எதிர்திசை நிறைந்தனா் இவரொடும் புகுந்த

   இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்

அதிர்தலில் அலைகடல் போன்றுள தெங்கும்

   அரங்கத்தம் மா!பள்ளி யெழுந்தரு ளாயே!

 

[தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பள்ளியெழுச்சி]

 

புள்ளினம் ஆர்த்தன, ஆர்த்தன முரசம்,

   பொங்கிய தெங்குஞ்சு தந்திர நாதம்?

வெள்ளிய சங்கம்மு ழங்கின கேளாய்!

   வீதியெ லாமணு குற்றனர் மாதர்,

தெள்ளிய அந்தணர் வேதமும் நின்..தன்

   சீர்த்திரு நாமமும் ஒதிநிற் கின்றார்!

அள்ளிய தெள்ளமு தன்னையெம் அன்னை!

   ஆருயி ரே!பள்ளி யெழுந்தரு ளாயே!

 

[மகாகவி பாரதியார், பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி]

 

காலை மலர்ந்தது! கடற்பரப் பெங்கும்

   கதிரவன் பொன்னொளி கலந்தது காணாய்!

சோலையில் புள்ளினம் சொலுந்தமிழ் இசையும்

   துாயவ! நின்திருச் செவிவிழ விலையோ?

சீலமிக் கவர்களுன்  திருவடி தொழவே

   செஞ்சொலால் கவிதொடுத் திங்குவந் துள்ளார்!

கோலநல் விழிதிறந் தருளுக! கம்ப!

   குருமணி யே!பள்ளி எழுந்தரு ளாயே!

 

[பாவலர்மணி சித்தன், கம்பன் திருப்பள்ளியெழுச்சி]

 

தமிழ்த்தாய் திருப்பள்ளியெழுச்சி

 

 பொன்னிறக் கதிரொளி பொலிந்தது வானில்

   புவிமகள் புத்துடை பூண்டிடக் கண்டோம்!

பன்னிற அழகினைப் பண்ணுமே பூக்கள்!

   பண்ணிசை பாடிட எண்ணுமே ஈக்கள்!

இன்னிறச் சேவலும் எழுப்பிசை மீட்டும்!

   இளம்பசு கன்றுற எழின்மடி காட்டும்!

நன்னிற மனத்தினர் நற்றவம் வெல்ல  

   நற்றமிழ் அன்னையே விழிமலர் திறவாய்!

 [பாட்டரசர்]

 

ஓவ்வோர் அரையடியும்  விளம் +  விளம் + விளம் + மா என்ற வாய்பாட்டில் அமையும்.

 நான்கடிகள் ஓரெதுகை பெறும். முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனையுறும்.

திருப்பள்ளியெழுச்சிப் பாடலை இவ்வகையில் எழுதுதல் மரபாக உள்ளது.

மேலுள்ள விருத்தங்களில் சில இடங்களில் விளம் வரும் இடத்தில் காய் வந்துள்ளது. [மான்!பள்ளி, சிகரம்வந், அரசர்கள், அரங்கத்தம், மா!பள்ளி, ரே!பள்ளி] கருவிளம் வரவேண்டுமிடத்தில் புளிமாங்காய் வரும். கூவிளம் வரவேண்டுமிடத்தில் தேமாங்காய் வரும். இவை ஒற்று நீங்க எண்ணப்படும் எழுத்தெண்ணிகையில் ஒத்த சீர்களாதலின் இவ்வமைதியைச் சான்றோர் ஏற்றனர். இதனைத் தொல்காப்பியரும் 'வெண்சீர் ஈற்றசை நிரையசை இயற்றே' [தொல். செய். - 29] என்ற நுாற்பாவால் விளக்கியுள்ளார்.

அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
25.12.2021