Affichage des articles dont le libellé est கூட சதுர்த்தம். Afficher tous les articles
Affichage des articles dont le libellé est கூட சதுர்த்தம். Afficher tous les articles

samedi 29 juin 2019

மிறைப்பா மேடை - 1


மிறைப்பா மேடை - 1

கூட சதுர்த்தம்

நான்காம் அடியிலுள்ள எழுத்துக்கள் மற்றைய மூன்றடிகளுள்ளும் மறைந்து நிற்குமாறு இயற்றப்படும் செய்யுள் கூட சதுர்த்தம்.

கூடம் - மறைந்திருப்பது, சதுர்த்தம் - நான்காம் அடி. மறைவாக நான்காம் அடியை உடையதென்பது பொருள்.

பல நுால்கள் கூட சதுர்த்தத்தை, கூட சதுக்கம் என்று குறிப்பிட்டுள்ளன.

பாரதியே போற்றுகிறேன்!

நாட்டுக் குழைத்தாய்! பற்றுடனே
          நம்மின் நற்றேன் நெறிக்குழைத்தாய்!
ஏட்டுக் குழைத்தாய்! பாவையர்தம்
          இழிவைக் கிள்ளிப் போர்தொடுத்தாய்!
வீட்டுக் குழைத்தாய்! பாத்தாயே
          வியக்கப் பார்த்த சாரதியின்
பாட்டுக் குழைத்தாய்! பாரதியே
          பாதம் பற்றிப் போற்றுகிறேன்!

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

கருத்துரை: செந்தமிழ் நாட்டுக்கும் பாரத நாட்டுக்கும் உழைத்தாய். தமிழ்த்தாயின் நெறிகள் பரவ உழைத்தாய். நல்ல நுால்களை படைத்திட உழைத்தாய். பெண்ணின் விடுதலைக்கு உழைத்தாய். பரம்பொருள் நல்கும் விண்வீட்டுக்கு உழைத்தாய். பாட்டின் தாயாகிய பைந்தமிழ் வியந்திடவே கண்ணன் புகழ் வீசும் பாட்டுக்குழைத்தாய். மகாகவி பாரதியே உன்றன் பாதங்களைப் பற்றிப் போற்றுகிறேன். 

இவ்விருத்தத்தின் நான்காமடியிலுள்ள எழுத்துக்களெல்லாம் ஏனைய மூன்றடிகளுள்ளும் ஆங்காங்கே மறைந்துள்ளன.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
24.06.2019