mercredi 9 avril 2014

கனிவிருத்தம் - பகுதி 8




கலிவிருத்தம் () கனிவிருத்தம்

36.
பெண்மனத்துள் உள்ளபொருள் பேரிறைவன் அறிவானோ?
பண்மணத்துள் திளைக்கின்ற பாவலன்யான் என்செய்வேன்?
கண்கணத்துள் காட்டுகின்ற காரிகையின் கைப்பற்றித்
தண்மணத்துள் தழைத்தோங்கத் தவமிருக்கும் என்னெஞ்சே!

37.
கற்பனையாம் கடல்குளித்துக் கண்ணமுதக் கவிபடைத்து
நற்பனையாம் தோப்புக்குள் நானிருந்து வாடுகிறேன்!
நற்றுணையாம் குயிலிருக்கு! நடனமிடும் மயிலிருக்கு!
சொற்சுவையாள் இல்லாமல் சுருங்குதடி என்னெஞ்சே!

38.
கோவைநிற உதட்டழகும்! கோர்த்தமணிப் பல்லழகும்!
பாவைவரும் நடையழகும்! பார்வைதரும் வில்லழகும்!
சேவைமனச் செயலழகும்! தேன்பொழியும் சொல்லழகும்!
தேவையெனத் தினங்கெஞ்சித் திண்டாடும் என்னெஞ்சே!

39.
பசுங்கொடியே! பௌர்ணமியே! பளபளக்கும் பொற்பட்டே!
பசும்பாலே! பலாச்சுளையே! பனிப்பூவே! படர்கின்ற
பசும்புல்லே! பண்பமுதே! பழக்குலையே! தேன்பாகே!
பசுங்கிளியே! உனையெண்ணிப் பாடுதடி என்னெஞ்சே!

40.
மையழகு விழிகண்டு! மலரழகு முகங்கண்டு!
கையழகு அணிகண்டு! கருத்தழகு கவிகண்டு!
தையழகு வளங்கண்டு! தமிழழகு உளங்கண்டு!
பையழகு தோட்கண்டு பரவுதடி என்னெஞ்சே!

தொடரும்

8 commentaires:

  1. நெஞ்சம் மயக்கும் வரிகள் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நெஞ்சை மயக்கும் நெடுந்தமிழ் வாசத்தை
      விஞ்சும் விாிமண மேது?

      Supprimer
  2. வணக்கம் !
    ஒவ்வொரு வரிகளிலும் காதல் ரசம் சொட்டுகின்றது !
    வாழ்த்துக்கள் ஐயா .

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      காதல் கனிதரும் கன்னல் கவிதைகளை
      ஓதல் இனிமை உடைத்து!

      Supprimer
  3. அருமையான படைப்பு! சந்த நயம் சிறப்பு!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      முன்னோா் கவிதைகளை முற்றுணா்ந்தால் மின்னிடுமே
      தன்னே ரிலாத தமிழ்!

      Supprimer

  4. கட்டுக. குலையாத கன்னியின் பேரழகைக்
    கட்டு மலராய்க் கவிவடித்தீா்! - கொட்டுகின்ற
    வான்மழையோ? இன்பூட்டும் தேன்மழையோ? நெஞ்சீா்க்கும்
    கான்மழையோ உன்றன் கவி

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பொன்னணி மின்னிடும்! பூஞ்சோலை மின்னிடும்!
      இன்னணி யாகஎழில் மின்னிடும்! - என்தோழா!
      வெண்பணி மின்னிடும்! வெற்றி மலா்சூடி
      பண்ணணி மின்னுதே பார்!

      Supprimer