dimanche 5 août 2018

வெண்பா மேடை - 94


வெண்பா மேடை - 94
  
விடுகதை வெண்பா!
  
படபடக்கும்! மின்னிப் பளபளக்கும்! நெஞ்சுள்
இடம்பிடிக்கும்! நன்னாளை ஏற்கும்! - தொடர்ந்திங்கே
ஏழைக்கும் கிட்டாதாம்! எப்போதும் விற்காதாம்!
கோழைக்கும் கிட்டாதாம் கூறு?
    
விடை : பட்டாசு
  
வங்கக் அலைதவழும்! வண்ணக் கவிவிளையும்!
எங்கும் வழிநேர் எழில்காட்டும்! - சிங்கமெனப்
பாமன்னர் வாழ்ந்தநகர்! நாமகனும் சேர்ந்தநகர்!
காமின்னும் அவ்வூரைக் காட்டு!
    
விடை: புதுவை
    
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
தமிழில் விடுகதைகள் உள்ளன. அவ்விடுகதையை வெண்பாவில் பாடவேண்டும். விரும்பிய பொருளில் 'விடுகதை வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து விடுகதை வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
பயிலரங்கப் பாவலர்கள் விடுகதை வெண்பாவை மட்டும் எழுதுக. விடையைக் கருத்திடுவோர் கண்டுணர்ந்து எழுதட்டும்
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
04.08.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire