jeudi 2 août 2018

ஒற்றுப்பெயர்த்தல் - 2


ஒற்றுப்பெயர்த்தல் - 2
  
ஓரடியுள் பத்து மரமுடன்ஒற் றுப்பெயர்த்துத்
தேர்மருவி ஊடல் திறம்புனைந்து - நீர்மை
மருதம் புணர்ந்ததுவும் வெண்பாவாய் வையம்
கருதப் பகர்வன் கவி!
  
[தண்டியலங்காரம்]
  
ஓரடியில் பத்து மரங்கள் வருதலோடு, பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுடைய தேர் வருவதாகவும், அதனால் தலைவி பிணங்குவதாகவும் கூறும் மருதத்திணை ஒழுக்கம் சார்ந்துவர, வெண்பாவில் ஒற்றுப் பெயர்த்துவர உலகத்தார் ஏற்கும் உரைப்பான் கவி.
  
ஒற்றுப் பெயர்த்தல் என்பது, ஒருமொழியும், தொடர்மொழியுமாய்ப் பொருள்படும் அவற்றை, அப்பொருள் ஒழிய வேறு பொருள்பட வைப்பது.
  
புதுவைப் புலவனின் பொற்புடைய தேரும்
பொதுமை மனைநாடிப் போகும்! - மதுத்தமிழ்
மாபுளியார் வாகைபுனை வேல்மகிழால் தென்பா..சேர்
பார்புகழ் நெஞ்சைப் பழி!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
இந்த வெண்பாவில் தேரும், மனைவியின் ஊடலும் வந்தன. தேமா புளிமா யாப்பினைக் கற்றுப் புகழ் அடைத்தவன், வேலவனைப் பாடி மகிழ்ந்தவன், தென்மொழியுள் பாக்கள் செய்பவன், இன்று பொதுமனை சென்றான். அவனை நெஞ்சே பழி.
  
ஓரடியுள் பத்து மரங்கள்
  
[1] மா - மாமரம். [2] புளி - புளியமரம் [3] ஆர் - ஆத்திமரம் [4] வாகை - வாகைமரம் [5] புனை - புன்னைமரம் [6]வேல் - வேலமரம் [7] மகிழ் - மகிழமரம் [8] ஆல் - ஆலமரம் [9] தென் - தென்னைமரம் [10] சேர் - சேங்கொட்டைமரம்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
02.08.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire