mercredi 21 février 2018

நான் பிறந்த ஊர்!


நான் பிறந்த ஊர்!
[இன்னிசைக் கலிவெண்பா!]
  
நுால்நெய்யும் ஆலையும், நுட்பமுடன் கற்றவர்கள்
நுால்நெய்யும் சாலையும் கால்கொண்ட கன்னலுார்!
நுாலிடை பின்னும் நுவல்எழில் ஆடையூர்!
நுாலிடை மின்னும் நுதல்விழி மாதரூர்!
நாட்டின் விடுதலையை நாடிய வன்மறவர்
காட்டிய நல்வழியைப் போற்றித் தொழுதவூர்!
பாட்டின் பெருமையைப் பாருக்[கு] உணா்த்திடவே
மீட்டும் தமிழேந்தித் தீட்டும் கவிதையூர்!
வன்னியர் பேர்விளங்க வல்ல திருமாலைக்
கன்னியர் வேண்டிக் களிப்புறும் காதலுார்!
ஆலையின் சங்கொலி காலையின் கண்திறந்து
வேலையின் சீருரைத்து விந்தையுறும் நல்லுார்!
தொடர்வண்டிப் பாதை! தொழிலாளர் ஆலை!
படர்வண்டு சோலை! படையரண் சூழ்ஊர்!
வயல்வெளி யாவும் மனையென மாறி
அயலவர் தம்மை அணைக்கும் அருள்ஊர்!
பொதுவுடைமைக் கட்சி பொலிவுடன் பூத்துப்
புதுவுடைமை கண்டு பொலிந்த புகழூர்!
தொழிலாளர் கொண்ட..வன் தோள்களின் ஆற்றல்
பொழிலாக நாட்டைப் புதுக்கி நடந்தவூர்!
மாங்காளி அம்மனை மக்கள் தொழுதேத்தித்
தேங்காணிப் பேற்றில் திளைத்திடும் செம்மையூர்!
ஊற்றுறும் அம்மனை உற்ற தெருவினர்
போற்றியே நல்விழாப் போந்திடும் நல்லவூர்!
வட்டிக் கணக்கெழுதும் செட்டிக் குலத்தவர்கள்
கட்டித் தொழுகின்ற கார்வண்ணன் ஆலயம்!
எட்டுத் திசைக்கும் எழிலாக நல்லாசி
கொட்டிக் கொடுத்துக் குலவுமெழில் கொஞ்சுமூர்!
மக்கள் தலைவர் மதியொளிர் சுப்பையா
செக்கிழுத்த தீரர்போல் சீர்கொடுத்துத் காத்தவூர்!
சுப்பையா சொல்லினைத் தப்பாமல் நன்கேற்றுச்
செப்பரிய என்தாத்தா சிந்தை மணந்தவூர்!
மாணவர் காலத்தில் மண்ணின் விடுதலைக்குக்
காணும் இடமெல்லாம் கன்னல் தமிழேந்திப்
பாடித் திரிந்தவர்! நாடி உழைத்தவர்!
கோடிக் கவிகளைக் கூட்டும் புலமையை
என்னுள் விளைத்தவர் எந்தை சனார்த்தனர்
பின்னிய பாக்களில் பீடுறும் வல்லவூர்!
ஆழ்வார் அமுதத்தை அள்ளி எனக்களித்து
வாழ்ந்த சடகோபர் சூழ்நலம் சேர்ந்தவூர்!
கடலுார் செலும்வழியைக் கட்டும் உடையாய்
உடல்மேல் தரித்தே உயர்புகழ் பெற்றவூர்!
தந்நலம் இல்லாத் தலைவர்தம் தொண்டினால்
செந்நலம் ஏந்திச் சிறந்து திகழுமூர்!
புண்ணியர் கண்ணியர் எண்ணிலா வண்ணமுடன்
திண்ணிய சீரினைச் சேர்த்து மகிழுமூர்!
பாட்டின் அரசன்யான் பாங்குடன் வந்துதித்துத்
தீட்டும் கவியைச் செவியேந்திக் கேட்டவூர்!
செந்தமிழ் இல்லம்! செழித்த கவிஇல்லம்!
நந்தமிழ் மேன்மையை நல்கிடும் இல்லம்!
கருமார நற்றெருவில் காணும்எம் இல்லம்
அருண்மாறன் என்னுள் அமர்ந்தாண்ட இல்லம்!
முதலியார் பேட்டையெனும் முத்தமிழ் ஊரே
இதமாக என்னுயிரை ஈந்த புகழில்லம்!
சாதியை ஏந்தித் தரித்த தெருப்பெயரை
மோதி யழித்திடவே முன்னே நினைவெழும்!
எல்லாத் தெருக்களிலும் என்றன் சிறுவடிகள்
மெல்ல நடந்து தமிழ்விளைத்த நாள்யாவும்
கண்முன்னே வந்து கதைபேசும்! காதலால்
பெண்முன்னே சொன்ன பெயர்கூறும்! நாள்தோறும்
வானொலி கேட்க வடித்த திடல்வழியே
தேனொலி தன்மைத் தினமும் கொடுக்குமூர்!
வல்ல தலைவர் வருகையால் அத்திடலில்
நல்ல உரையை நலமுடன் தந்தவூர்!
அன்று விளையாடி ஆழ்ந்த திடலினை
இன்று குலைத்தார்! எதிர்ப்பார் இலையென்றே!
பொல்லா அரசியலார் கொள்ளை அடித்திடவே
எல்லாப் பொதுவிடத்தை மெல்லக் குடிலமைத்தார்!
ஊரே தலைகீழ் உருமாறி உள்ளதை
நேரே மனங்கண்டு போரின் கொதிப்புறுமே!
ஏய்க்கும் மனிதரே எங்கும் திரிகின்றார்!
காய்க்கும் கவிதை கனன்று!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
21.02.2018

1 commentaire:

  1. புதுவையின் புகழ் மணக்கச்செய்தீர் புலவர் நின் தமிழ் சிறக்க வாழ்த்துதுமே

    RépondreSupprimer