samedi 3 février 2018

விருத்த மேடை - 12   

விருத்த மேடை - 12
  
அறுசீர் விருத்தம் - 12
[காய் + மா + தேமா + விளம் + மா + தேமா]
  
விருத்த மேடை - 1 [விளம் + மா + தேமா + விளம் + மா + தேமா] என்ற வாய்பாட்டில் அமைந்த விருத்தத்தைக் கண்டோம். 'விளம் ஒக்கும் காய்' என்ற இலக்கணத்தின் படி ஒரோவழி மாங்காய்ச்சீர் வருவதுண்டு.
  
முல்லையைக் குறிஞ்சி ஆக்கி
   மருதத்தை முல்லை ஆக்கிப்
புல்லிய நெய்தல் தன்னை
   பெருவரு மருதம் ஆக்கி
எல்லையில் பொருள்கள் எல்லாம்
   இடைதடு மாறும் நீரால்
செல்லுறு கதியின் செல்லும்
   வினைஎனச் சென்ற தன்றே
         [கம்பன் பால. ஆற்று. 17]
  
இவ்விருத்தத்தில் ஓரிடத்தில் மட்டும் 'மருதத்தை' என மாங்காய்ச்சீர் வருவது காண்க. சில பாடல்களில் நான்கடிகளிலும் மாங்காய்ச்சீர் வருவதும் உண்டு.
  
தோள்கண்டார் தோளே கண்டார்!
   தொடுகழற் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்!
   தடக்கைகண் டாரும் அஃதே!
வாள்கொண்ட கண்ணார் யாரே
   வடிவினை முடியக் கண்டார்?
ஊழ்கொண்ட சமயத் தன்னான்
   உருவுகண் டாரை ஒத்தார்!
         [கம்பன் பால. உலாவியல். 17]
  
சொல்ஒக்கும் கடிய வேகச்
   சுடுசரம் கரிய செம்மல்
அல்ஒக்கும் நிறத்தி னாள்மேல்
   விடுதலும் வயிரக் குன்றக்
கல்ஒக்கம் நெஞ்சில் தங்கா[து]
   அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன
   பொருளெனப் போயிற் றன்றே!
         [கம்பன் பால. தாடகை. 50]
  
காய் + மா + தேமா + விளம் + மா + தேமா என இதன் வாய்பாட்டை வரையறுக்கலாம். ஒன்று, நான்காம் சீர்களில் மோனை அமையும்.
  
குன்றென நிமிர்ந்து நில்!
  
கோலஞ்சேர் தமிழைக் காக்கக்
   குன்றென நிமிர்ந்து நிற்பாய்!
காலஞ்சேர் புகழைக் காணக்
   கமழ்கவிக் கலையைக் கற்பாய்!
ஞாலஞ்சேர் நுாலை யாத்து
   நம்மின மேன்மை காப்பாய்!
ஆலஞ்சேர் உறுதி யாக
   அன்புசேர் வாழ்வை ஏற்பாய்!
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
      
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
       
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
02.02.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire