mardi 20 février 2018

விருத்த மேடை - 26



விருத்த மேடை - 26

அறுசீர் விருத்தம்  - 26
[கூவிளம் + கூவிளம்  + தேமா அரையடி வெண்டளை]

தேசத்தைக் காத்தல் செய் [பாரதியின் புதிய ஆத்திசூடி]

நாட்டினைக் காத்திட வேண்டும்
   நம்முயிர் நம்முடல் என்றே!
காட்டினைப் போல்அரண் வேண்டும்
   கண்டவர் அஞ்சிடும் வண்ணம்!
ஏட்டினைக் கற்றிட வேண்டும்
   எத்திசை மின்புகழ் மேவும்!
பாட்டினை யாத்திட வேண்டும்
   பாங்குடன் பைந்தமிழ் ஓங்கும்!

       [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
 
கூவிளம் + கூவிளம்  + தேமா என்ற வாய்பாட்டில் அனைத்து அரையடிகளும் அமைய வேண்டும். இவ்வாய்பாட்டில் அரையடிக்கு வெண்டளை இயற்கையாய் அமையும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகை பெற்று வரவேண்டும். ஒன்று, நான்காம் சீர்களில் மோனை அமையும்.

ஒற்று நீக்கிக் கணக்கிட 16 எழுத்துகளை ஓரடி பெற்றிருக்கும்.

ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
    
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
20.02.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire