dimanche 25 février 2018

விருத்த மேடை - 31

விருத்த மேடை - 31
  
அறுசீர் விருத்தம் - 31
[காய் 5 + மா]
  
நீதி நுால் பயில் [பாரதியின் புதிய ஆத்திசூடி]
  
நீதியொளிர் இலக்கியத்தைப் பயின்றிடுவாய்!
   நெஞ்சமொளிர் ஆற்றிலினை ஏற்பாய்!
சோதியொளிர் இலக்கியத்தைப் பயின்றிடுவாய்!
   துாய்மையொளிர் வாழ்வுதனை நுாற்பாய்!
ஓதியொளிர் இலக்கியத்தைப் பயின்றிடுவாய்!
   ஒழுக்கமொளிர் பண்புதனைச் சேர்ப்பாய்!
மோதியொளிர் இலக்கியத்தைப் பயின்றிடுவாய்!
   முத்தொளிரும் முத்தமிழைக் காப்பாய்!
  
மோதியொளிர் இலக்கியம் - மறமொளிர் இலக்கியம்
  
       [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
காய் 5 + மா என்ற வாய்பாட்டில் ஓரடி அமைய வேண்டும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகை பெற்று வரவேண்டும். ஒன்று, நான்காம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
      
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
    
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
25.02.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire