lundi 26 février 2018

விருத்த மேடை - 32   



விருத்த மேடை - 32
  
அறுசீர் விருத்தம் - 32
[மா + காய் + காய் அரையடிக்கு]
  
நுாலினைப் பகுத்துணர்! [பாரதியின் புதிய ஆத்திசூடி]
  
நுாலைப் பகுத்துணர்வாய்! நன்காய்ந்து
   நுட்பம் தொகுத்துணர்வாய்! தவமாற்றக்
காலை விழித்தெழுவாய்! கவியன்னை
   காலைப் பணிந்துயர்வாய்! மனமோங்க
மாலை நடைந்திடுவாய்! நற்புகழாம்
   மாலை புனைந்திடுவாய்! கற்றோர்தம்
சாலை அடைந்திடுவாய்! குறள்கூறும்
   சால்பை அணிந்திடுவாய்! அருள்பெறுவாய்!
  
       [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
மா + காய் + காய் என்ற வாய்பாட்டில் அனைத்து அரையடிகளும் அமைய வேண்டும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகை பெற்று வரவேண்டும். ஒன்று, நான்காம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
      
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
    
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
26.02.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire