mardi 20 février 2018

விருத்த மேடை - 25



விருத்த மேடை - 25

அறுசீர் விருத்தம்  - 25
[தேமா + கருவிளம்  + கூவிளம் + தேமா + கருவிளம்  + கூவிளம் ]
[வெண்டளை விருத்தம்]

தையலை உயர்வு செய் [பாரதியின் புதிய ஆத்திசூடி]

பெண்ணின் உரிமையைப் பேணிட
   மண்ணில் மலர்ந்திடும் இன்பமே!
கண்ணின் இமையெனக் காத்திடக்
   கன்னல் சுரந்திடும் வாழ்விலே!
எண்ணில் பெருமையை ஏற்றிட
   இல்லாள் இணையென என்கவே!
விண்ணின் இறையொளி சூழுமே!
   விந்தைப் புகழினைச் சூடுமே!!
   
       [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
 
தேமா + கருவிளம்  + கூவிளம் என்ற வாய்பாட்டில் அனைத்து அரையடிகளும் அமைய வேண்டும். இவ்வாய்பாட்டில் வெண்டளை இயற்கையாய் அமையும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகை பெற்று வரவேண்டும். ஒன்று, நான்காம் சீர்களில் மோனை அமையும்.

ஓரடியில் ஒற்று நீக்கிக் கணக்கிட 18 எழுத்துகளை இவ்விருத்தம் பெற்றிருக்கும்.

ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
    
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
19.02.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire