dimanche 11 février 2018

கேட்டலும் கிளத்தலும்

கேட்டலும் கிளத்தலும்
  
தைம்மகளே! - இங்குத் தைமகளே என்பதுதான் சிறப்பல்லவா? எந்தப் பொருளில் இங்கு இடையினம் வந்தது.
  
நெல்லைத் தமிழன்
23.01.2018
  
----------------------------------------------------------------------------------------------
  
வணக்கம்!
  
உயிரீற்றின் முன் மெல்லினமாகிய ஞ, ந, ம - க்களும், இடையினமாகிய ய, வ, - க்களும் பெரும்பாலும் இயல்பாம். ஆயினும் தனி ஐகாரத்தின் முன்னும், தனிக்குறில் அணைந்த யகரத்தின் முன்னும் ஞ, ந, ம - க்கள் இரட்டிக்கும்.
  
ஐந்நுாறு, கைந்நொடி, கைம்மாற்று, தைம்மகள்
மெய்ஞ்ஞானம், செய்ந்நன்றி, மெய்ம்மொழி,
  
இலக்கண விளக்கம்
எண்மூ வெழுத்துஈற்று எவ்வகை மொழிக்கும்
முன்வரும் ஞ,ந,ம,ய, வக்கள் இயல்பும்
குறில்வழி யத், தனி ஐந்நொ,து முன்மெலி
மிகலுமாம்! ண,ள, ன,ல வழி நத் திரியும். [நன்னுால் - 158]
  
தனித்தும், மெய்யோடு வரும் உயிரெழுத்துப் பன்னிரண்டும், ஞ, ண, ந, ம, ன, ய, ர. ல, வ, ழ, ள, என்னும் பதினொரு மெய்யெழுத்துகளும், குற்றிலுகரமும் ஆகிய இந்த இருபத்து நான்கு எழுத்துகளையும் இறுதியிலுடைய பெயர், வினை, இடை, உரி என்ற எல்லாச் சொற்களுக்கும் முன்வரும் ஞ, ந, ம, ய, வ என்பவை இயல்பாய் முடியும்.
  
தனிக் குற்றெழுத்தின் பின் நின்ற ய் என்ற மெய்க்கும், ஓர் எழுத்து ஒருமொழியான ஐ என்பதற்கும், ஓர் எழுத்து ஒரு மொழியான நொ, து, என்பனவற்றிற்கும் முன் வருகின்ற ஞ, ந, ம என்பவை இயல்பாவதே அல்லாமல் மிகுந்தும் முடியும்.
  
ண,ள,ன,ல என்பனவற்றின் முன் வரும் ந என்னும் மெல்லினம் இயல்பாக ஆதலன்றித் திரிந்தும் முடியும்.
  
அல்வழி
  
கலை+ஞானம் = கலைஞானம்
கலை+நன்று = கலைநன்று
பலா+மரம் = பலாமரம்
நிலம் +வலிது = நிலம்வலிது
கண்+யாது = கண்யாது
வேற்றுமை
  
கலை+நலம் = கலைநலம்
எண்+மாட்சி = எண்மாட்சி
கண் +வீச்சு = கண்வீச்சு
விள+யாப்பு = விளயாப்பு
விள+வன்மை = விளவன்மை
  
இவ்வாறே பிற ஈறுகளுக்கும் ஞ, ந, ம, ய, வ என்பனவற்றைப் புணர்ந்தால் இயல்பாகும்.
  
அல்வழி
  
மெய்+ஞானம் = மெய்ஞ்ஞானம்
மெய்+நீண்டது = மெய்ந்நீண்டது
மெய்+மாண்டது = மெய்ம்மாண்டது
கை+ஞான்றது = கைஞ்ஞான்றது
கை+நீண்டது = கைந்நீண்டது
கை+மாண்டது = கைம்மாண்டது
  
வேற்றுமை
  
மெய்+ஞாற்சி = மெய்ஞ்ஞாற்சி
செய்+நீட்சி = மெய்ந்நீட்சி
மெய்+மாட்சி = மெய்ம்மாட்சி
கை+ஞாற்சி = கைஞ்ஞாற்சி
கை+நீட்சி = கைந்நீட்சி
கை+மாட்சி = கைம்மாட்சி
  
இவை, தனிக்குறிலின் முன்னின்ற ய் என்ற மெய்யின் முன்னும், தனி ஐ முன்னும் மெல்லின மெய்கள் மிக்கு வந்தன.
  
நொ, து, முன் மொழி மிகலுமாம் என இச்சூத்திரத்தில் உம் தந்து கூறப்பட்டதால் அவ்விரண்டின் முன் இடையின மெய் மிகும்.
  
நொ+நாகா = நொந்நாகா
து+நாகா = துந்நாகா
நொ+யவனா = நொய்யவனா
து+யவனா = துய்யவனா
  
செல்லிறுதியில் ண,ன, ள,ல வந்தால் எதிரில் வரும் ந திரியும்.
  
கண்+நீர் = கண்ணீர்
பொன்+நீலன் = பொன்னீலன்
கள் +நாற்றம் = கண்ணாற்றம்
கல் +நெஞ்சம் = கன்னெஞ்சம்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
07.02.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire