dimanche 26 janvier 2014

வாழ்த்துமலா்




திருவாளா்
பாரீசு பார்த்தசாரதி - வத்சலா இணையரின்
முப்பதாம் ஆண்டுத் திருமண வாழ்த்து

மூன்று முடியிட்ட முப்பதாம் ஆண்டொளிரத்
தோன்றும் புறாக்கள்! சுடர்ப்பூக்கள்! - ஈன்ற
குடியோங்கச் செல்வம் குவிந்தோங்கப் பாசக்
கொடியோங்க வாழ்க கொழித்து!

பாரீசு பேர்விளங்கப் பார்த்தன் அருள்விளங்க
வாரிசாய் வந்த வளமனத்தர்! - பேரீச்சம்
போலினிக்கும் பொற்கவிஞர்! வாழ்கவே பைந்தமிழின்
பாலினிக்கும் வாழ்வைப் படைத்து!

நற்புதுவைப் பேர்மணக்க! நல்லோர் நெறிமணக்க!
பொற்புகழைப் போந்த பொதுச்செயலர்! - கற்றோரைப்
போற்றும் மதியர்! புகழ்ப்பார்த்த சாரதியார்
ஆற்றும் பணிகள் அமுது!

அய்யன் திருவடியில் ஆழ்ந்து கிடந்திட்ட
மெய்யர் குடிசெழிக்கும் மேன்மேலும்! - கொய்யாபோல்
வன்பார்த்த சாரதியும் வத்சலா வும்வாழ்க!
பொன்கோர்த்த பூவாய்ப் பொலிந்து!

மாமணி கண்டன் மலரடியை எந்நாளும்
பாமணி சாற்றி பரவுகின்ற - நாமணிகள்!
சீர்பார்த்த சாரதியும் வத்சலா வும்சேர்த்த
பேர்காத்து வாழ்க பிணைந்து!

தாங்கித் தழைக்கின்ற தண்மர வேர்போன்றும்! 
தேங்கி வழிகின்ற தேன்போன்றும்! - ஓங்கி
வளர்பார்த்த சாரதியும் வத்சலா வும்,தம்
உளங்கோர்த்து வாழ்க ஒளிர்ந்து!

கொஞ்சும் தமிழழகும் கோலக் கலையழகும்
விஞ்சும் குறளழகும் மேவிட - நெஞ்சமெலாம்
அன்பாம் அமுதுற இன்பார்த்த சாரதியார்
என்..பாச் சுவைபெறுக இங்கு!

பாவேந்தர் மாணவர் பாவலர் சித்தனார்
நாவேந்தி நல்கும் நறுந்தமிழைப் - பூவேந்திப்
பாடும் திருமகனார் நற்பார்த்த சாரதியார்
பீடும் கமழ்க பெருத்து!

கம்பன் கழகத்தின் கன்னல் விழாச்சிறக்க!
நம்மின் மொழிசிறக்க! நற்பணிகள் - செம்மையுறச்
செய்யும் திறனுடைச் சீர்பார்த்த சாரதியார்
உய்யும் உறவின் ஒளி!

வில்லாண்ட வேந்தன் வியன்ராமன் சீரடியைப்
பல்லாண்டு பாடிப் பரவுகின்ற - நல்லிணையர்!
நற்பார்த்த சாரதியும் வத்சலா வும்,தமிழ்போல்
சொற்கோர்த்து வாழ்க சுடர்ந்து!

25.01.2014

7 commentaires:

  1. சிறப்பான வாழ்த்து மடல் ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  2. பாரீசு பார்த்தசாரதி - வத்சலா இணையருக்கு
    முப்பதாம் ஆண்டுத் திருமண நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  3. இல்வாழ்வில் சேர்ந்தே இனிதாக வாழுகின்ற
    நல்மனத் தம்பதிகள் நாள்தோறும் -வெல்லமாய்
    அன்பைப் பொழிந்தும் அகமகிழ வேண்டுகிறேன்
    இன்பமுடன் வாழ்க இணைந்து !


    திரு .பார்த்தசாரதி வத்சலா தம்பதியினருக்கு
    நெஞ்சார்ந்த இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

    அள்ளிப் பொழிகின்ற அண்ணாவின் வாழ்த்தினிலே
    துள்ளும் இளமை துளிர்த்து !
    4

    RépondreSupprimer
  4. வெண்பா வேந்தராம் உங்கள் வாழ்த்து மலர்
    பெற்ற தம்பதிகளை அன்போடு நாமும் வாழ்த்துகின்றோம்!

    வாழ்க பல்லாண்டு!

    அருமை வெண்பா பாடிய உங்களுக்கும் வாழ்த்துக்கள் கவிஞரே!

    RépondreSupprimer
  5. பாரீசு தம்பதியர் இருவருக்கும் என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ......!

    எண்ணிலா இன்பங்கள் ஏந்தி
    ஏற்றங்கள் பலவும் பெற்றே உய்க என்றும்....!

    அருமையான வாழ்த்துக்கள் நன்றி தொடர வாழ்த்துக்கள்....!

    RépondreSupprimer
  6. ஐயாவின் வாழ்த்தோடு இன்பங்கள் எல்லாம் பெற்று வாழ வேண்டுகிறேன்.

    RépondreSupprimer
  7. நாங்களும் வாழ்த்துகிறோம்

    RépondreSupprimer