vendredi 10 janvier 2014

தமிழா விழித்தெழு!




தமிழா விழித்தெழு!

விதியே! விதியே! எனையிங்கே
     என்ன செய்ய நினைத்துள்ளாய்!
மொழியே என்றன் விழியாகும்!
     மூச்சோ எனக்குக் கவியாகும்!
கதியே என்று தமிழ்ச்சீரைச்
     காக்கும் வண்ணம் எனைச்செய்க!
பழியே நீங்க! பகையொடுங்கப்
     பாக்கள் வெடிபோல் முழங்குகவே!

பத்தும் ஐந்தும் நிறைவுற்றுப்
     படரும் வாழ்வில் செல்வேனா?
குத்தும் சமுகக் கொடுமைகளைக்
     கொள்கை கொண்டு வெல்வேனா?
முற்றும் துறந்து தமிழ்முனிபோல்
     முதலும் முடிவும் அறிவேனா?
சற்றும் என்னை அகலாமல்
     தமிழே! தாயே! காத்திடுக!

கண்ணன் அழகில் கட்டுண்டு
     களித்து மகிழ்ந்த சுடா்ஆண்டாள்
வண்ணப் பாவை பாடிடவே
     வாயில் வந்து அழைத்ததுபோல்
எண்ணம் முழுதும் தமிழேந்தி
     இனத்தின் மேன்மை உணர்வேந்தி
உண்டு உறங்கும் தமிழர்களின்
     உறக்கம் கலைத்தல் என்கடமை!

சிறுத்தை யாக! சிலிர்த்தெழும்
     சிங்கம் ஆக மறம்பொங்கும்!
கருத்தைக் கவரும் கவிதைகளில்
     காதல் கொண்டு உளம்பொங்கும்!
கழுத்தை அறுக்கும் செயல்ஏனோ?
     காக்கை பிடிக்கும் வினைஏனோ?
பழுத்த உன்றன் மொழியெங்கே?
     பகலில் உறக்கம்! விழித்தெழுக!

புகழைப் புளிமா காய்என்று
     புசிக்க எண்ணிப் பறப்பட்டாய்!
இகழை இழிவை உணராமல்
     ஏந்தும் செய்கை பயன்தருமா?
பகலை இரவாய் ஆக்குவதோ?
     பாழாய் நாள்கள் ஓட்டுவதோ?
மகனே என்று தாய்அழுவ
     மாண்பை மறந்து உறங்குவதோ?

அடிமைத் தன்மை நீங்குகவே!
     ஆணும் பெண்ணும் சமத்துவமே!
விடிவை நோக்கி நம்பெரியார்
     விளைத்த நெறியைப் போற்றுகவே!
மடமை என்ன? மதியென்ன?
     கடமை என்ன? உணர்ந்திடுக!
மிடிமை கண்டு உறங்காதே?
     விரலின் நுனியில் உலகைப்பார்!

அயலார் மொழியைத் தலைபிடித்தே
     ஆடும் தமிழா! தாய்மொழியின்
இயலின் இனிமை அறிந்தாயா?
     இன்பத் தமிழை இசைத்தாயா?
கயல்,வில், புலியாம் முக்கொடிகள்
     கண்ட ஆட்சி மீட்டாயா?
வயலில் முளைத்த களையாக
     வாழ்தல் வாழ்வா? விழித்தெழுக!

பாரோர் போற்றும் பண்பாட்டைப்
     படைத்த தமிழா! இன்றுலகில்
வேரோ(டு) உன்றன் மாண்புகளை
     வெட்டிச் சாய்க்கும் பழிபூண்டாய்!
சீரோ(டு) இருந்த புகழ்வாழ்வு
     சிதைந்து போகும்! பெயர்மறையும்!
யாரோ என்றே  என்குரலை
     எண்ணி உறக்கம்! விழித்தெழுக!

கூட்டுக் குள்ளே சிறைப்பட்டுக்
     கோட்டை என்று கூவுகிறாய்!
நாட்டுக் குள்ளே விழிப்போடு
     நடக்கக் கனவு காணுகிறாய்!
ஏட்டுக் குள்ளே புகழ்பாடி
     இருந்த காலம் போதுமடா?
பூட்டுப் போட்டே உன்வாழ்வைப்
     புதைப்பார் பகைவர்! விழித்தெழுக!

(பிரான்சு சித்திரைத் திருவிழா! 2008)

14 commentaires:

  1. வணக்கம்
    ஐயா

    கூட்டுக் குள்ளே சிறைப்பட்டுக்

    கோட்டை என்று கூவுகிறாய்!

    நாட்டுக் குள்ளே விழிப்போடு
    நடக்கக் கனவு காணுகிறாய்!
    ஏட்டுக் குள்ளே புகழ்பாடி
    இருந்த காலம் போதுமடா?
    பூட்டுப் போட்டே உன்வாழ்வைப்
    புதைப்பார் பகைவர்! விழித்தெழுக!

    தமிழா விழித்தெழு என்று மிக நன்றாக சொல்லியுள்ளிர்கள் .. வாழ்த்துக்கள் ஐயா.
    த.ம 2வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  2. கண்ணன் அழகில் கட்டுண்டு
    களித்து மகிழ்ந்த சுடா்ஆண்டாள்
    வண்ணப் பாவை பாடிடவே
    வாயில் வந்து அழைத்ததுபோல்
    எண்ணம் முழுதும் தமிழேந்தி
    இனத்தின் மேன்மை உணர்வேந்தி
    உண்டு உறங்கும் தமிழர்களின்
    உறக்கம் கலைத்தல் என்கடமை!//

    கடமையை அற்புதமாகச் செய்கிறீர்கள்
    எம் போன்ற பலருக்கும் நல்வழிகாட்டியாகவும்
    தொடர்ந்து இருக்கிறீர்கள்
    கலை மகளின் அருளாசியும் கம்பனின் அருட்பார்வையும்
    பரிபூரணமாய் உங்களுக்கிருக்கிறது
    வேறென்ன வேண்டும் ?
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  3. சிறப்பான கருத்துள்ள வரிகள் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  4. வணக்கம் ஐயா !

    விழித்தெழு உணர்வின் உச்சநிலை கொண்டு
    வெண்பாவைத் தேன் சுளையாய் அள்ளித் தந்துள்ளீர்கள் !
    வாழ்த்துக்கள் ஐயா அருமையான இப் படைப்பிற்கு .

    RépondreSupprimer
  5. உணர்வுப் பூர்வமான சிலிர்க்க வைத்த வரிகள், அருமை ஐயா..நன்றி!
    த.ம.9

    RépondreSupprimer
  6. விழித்தெழப் பாடிய பாடல்!
    உள்ளத்தை, உணர்வை, உயிரையும் விழித்திடச் செய்கிறது.
    அற்புதமான உணர்ச்சிக்கவிதை!

    உளமார்ந்த வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  7. கூட்டுக் குள்ளே சிறைப்பட்டுக்
    கோட்டை என்று கூவுகிறாய்!
    நாட்டுக் குள்ளே விழிப்போடு
    நடக்கக் கனவு காணுகிறாய்!
    ஏட்டுக் குள்ளே புகழ்பாடி
    இருந்த காலம் போதுமடா?
    பூட்டுப் போட்டே உன்வாழ்வைப்
    புதைப்பார் பகைவர்! விழித்தெழுக! // இந்த வரிகள் மிகவும் அருமை! சிறப்பான படைப்பு! நன்றி!

    RépondreSupprimer
  8. அற்புதமான உணர்ச்சிக்கவிதை! ஐயா
    த.ம.12

    RépondreSupprimer
  9. சிறப்பான கவிதை ஐயா...
    வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
  10. தமிழா விழித்தெழு!
    என்பதற்கேற்ப
    விழித்தெழத் தூண்டும் அடிகளால்
    தமிழரை விழித்தெழ வைக்கும்
    பா என்பேன் ஐயா!

    RépondreSupprimer
  11. எழுதா விரல்களும் ஏற்றம் பெறுமே
    தொழுதால் உமதடி தொட்டு !

    அழகிய அவசியமான வார்த்தைகள் கவிதையாக அருமை கவிஞர் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
    13

    RépondreSupprimer
  12. வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ...!!!

    தொடர வாழ்த்துக்கள் ஐயா ...!!!

    RépondreSupprimer