samedi 4 août 2018

வெண்பா மேடை - 93


வெண்பா மேடை - 93
  
உருவகப் பின்வருநிலை அணி வெண்பா
  
சீர்முகந் தாமரையாம்! செவ்விழி தாமரையாம்!
வார்மனந் தாமரையாம்! வாயிதழும் - சார்வயிறும்
தாமரையாம்! தாள்களும் தாமரையாம்! தேனுாறும்
நாமரையும் தாமரையாம்! நம்பு!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
உவமையாம் பொருளையும், உவமிக்கப்படும் பொருளையும் வேறுபாடு ஒழிவித்து ஒன்றென்பதோர் உள்ளுணர்வு தோன்ற ஒற்றுமை பெறுவது உருவகமாகும்.
  
மேற்கண்ட வெண்பாவில் முகத்திற்கு, கண்ணிற்கு, மார்புக்கு, வாயிதழ்களுக்கு, வயிறுக்கு, கால்களுக்கு, நாவிற்குத் தாமரை உருவகமாக வந்தது. தாமரை என்ற சொல் பல முறை உருவகம் ஏற்று வந்ததால் உருவகப் பின்வருநிலை அணி யாகும்
  
விரும்பிய பொருளில் உருவகப் பின்வருநிலை அணி வெண்பா ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து 'உருவகப் பின்வருநிலை அணி' வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
03.08.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire