mercredi 1 août 2018

ஒற்றுப்பெயர்த்தல் - 1


ஒற்றுப்பெயர்த்தல் - 1
  
1.
ஒருமொழியைப் பாட்டின் இறுதிக்கண் வைத்துப் பிறிதொரு பொருள் பயக்கப்பாடுவது ஒற்றுப்பெயர்த்தலாகும். [யாப்பருங்கல விருத்தி]
  
2.
ஒரு மொழியைப் பாடி நிறுத்திவைத்துப் பிறிதொரு பொருள்படப் பாடுவது ஒற்றுப் பெயர்த்தலாகும். [வீரசோழியம்]
  
3.
ஒரு மொழியும் தொடர்மொழியுமாய்ப் பொருள்படும் அவற்றை அப் பொருளொழிய வேறு பொருள்பட வைப்பது ஒற்றுப்பெயர்த்தலாகும். [தண்டியலங்காரம்]
  
[ஒற்றுப்பெயர்த்தல் என்பது ஒரு செய்யுளுக்கு உரை கூறி ஓரடிக்கு வேறு உரை கூறுவது]
  
[ஒரு செய்யுளில் ஒன்றி நிற்கும் வேறு பொருளைப் பெயர்த்தெடுப்பினும் ஒற்றுப் பெயர்த்தலாகும்]
  
[ஒரு சொல்லிலுள்ள ஒற்றெழுத்தினை எடுத்துவிட, அது வேறு பொருள்படின் ஒற்றுப் பெயர்த்தலாகும். பாடல் என்ற சொல்லில் ப் + ஆ = பா, ஒற்று நீக்கிவிட ஆடல் என வரும்]
  
கற்சுமக்கும் காட்சிகளைக் கண்டுருகி என்னுடைய
சொற்சுமக்கும் கண்ணீரை! தொல்லுலகில் - பொற்குடம்
பெற்றவர் எண்ணுவரோ பொங்கும் வினைபோக்க?
பற்றினால் முற்றும் பழி!
  
பழி என்ற சொல்லில் ப் +அ = பா
ஒற்று நீங்க 'அ' இருக்கும். 'பற்றினை முற்றும் அழி' எனப் பொருள் வரும்.
  
பொருள் 1
  
கல் சுமக்கும் சிறுவர்களைக் கண்டு, என் மனம் உருகிப் பாடுகின்ற சொற்கள் கண்ணீரைச் சுமக்கும். உலகில் செல்வத்தைப் பெற்றவர்கள் இந்தத் துயரத்தைப் போக்க எண்ணவில்லை. பேராசையினால் அவர்கள் பழியைச் அதிகமாகச் சேர்க்கின்றார்.
  
பொருள் 2
  
கல் சுமக்கும் கல்லறையைக் கண்டு, என் மனம் உருகிப் பாடுகின்ற சொற்கள் கண்ணீரைச் சுமக்கும். உலகில் பிறந்தவர்கள் ஒரு நாள் இறப்போம் என்பதைப் எண்ணாமலும், செல்வத்தைப் உடையவர்கள் முன்வினையைப் போக்காமலும் வாழ்கின்றனர். பற்றினை முற்றும் அழித்தால் பொன்மேனி பெறலாம்.
  
வெண்பாவின் ஈற்றுச் சொல் ஒற்று நீங்கி வேறு பொருள் பெற்றும், ஒரு வெண்பா இரு பொருள்கள் கொண்டும் வந்ததால் இப்பாடல் ஒற்றுப்பெயர்த்தலாகும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
31.07.2018

1 commentaire:

  1. அருமை. தொடர்ந்து எழுதுங்கள். நிறைய விடயங்களை அறிந்து கொள்ள உதவுகிறது.

    RépondreSupprimer