vendredi 1 novembre 2013

கம்பனில் ஒளிர்வது - பகுதி 3




கம்பன் கவியில் ஓங்கி ஒளிர்வது
(கருணை ஒளி, காதல் ஒளி, கடமை ஒளி, கற்பின் ஒளி)
தலைமைக் கவிதை

கடமை ஒளி

நாட்டரசன் தசரதனின் கடமை என்ன?
     நலங்கொழிக்கும் கோசலத்தார் கடமை என்ன?
காட்டரசன் சுக்கிரீவன் கடமை என்ன?
     கமழ்ராமன் இலக்குவனின் கடமை என்ன?
வாட்டரசன் இராவணனின் உடன் பிறந்தோர்
     வன்கும்பன் புகழ்வீடன் கடமை என்ன?
பாட்டரசன் நம்கம்பன் படைத்த நூலைப்
     படித்தாய்ந்து கவி.தணிகா சொன்னார் நன்றே!

செஞ்சோற்றுக் கடமையினைச் செய்தான் கும்பன்!
     செயலறிந்து உயர்பரதன் துறவு பூண்டான்!
நெஞ்சேற்று இளையவனும் பின்னே சென்றான்!
     நெடுங்காட்டில் நெடியவனும் துன்பம் ஏற்றான்!
பஞ்சேற்ற திருப்பாத சீதை ஏனோ
     படர்முள்ளின் பெருங்கல்லின் துயரம் கண்டாள்!
மஞ்சேற்ற நீர்வளமாய்க் கம்பன் பாக்கள்
     மாண்புடைய கடமையினை வடிக்கும் என்பேன்!

இந்திரனாய்ப் பிறந்திட்ட போதும் கூட
     இவ்வுலகு தூற்றுகின்ற இழிவைச் செய்தான்!
தந்திரனாய்ப் பிறந்திட்ட சகுனி தோற்பான்
     சதிநிறைந்த மந்தரையின் சொற்கள் முன்னே!
எந்திரனாய்ச் செயல்பட்டான், தந்தை சொல்லை
     மந்திரமாய்த் தலையேற்ற இராமன்! பாட்டில்
சந்திரனாய் ஒளிர்கின்ற நம்மின் கம்பன்
     தந்தகவி கடமையினைச் சாற்றும் நன்றே!

காதல் ஒளி!

வில்லழகன் மிதிலையிலே நடந்த வீதி!
     விழியழகி வீற்றிருந்த கன்னி மாடம்!
வெல்லழகன் சனகனிடம் இருந்த வன்வில்!
     வியன்போட்டி நடந்திட்ட புகழ் அரங்கம்!
செல்..அழகன் முன்னென்று செலுத்தும் காலம்!
     சிந்தனையைச் சூடாக்கிப் செழித்த ஏக்கம்!
சொல்லழகன் சுடர்க்கம்பன் இவைகள் தம்மைச்
     சுரக்கின்ற காதலுக்குச் சாட்சி வைத்தான்!

கவிகம்பன் காட்டுகின்ற காதல் காட்சி
     கவிஞர்களின் கண்களுக்குள் புகுந்தே வாழும்!
செவி..கம்பன் கவிகேட்டுச் சொர்க்கம் காணும்!
     செப்புகின்ற திருவாயும் மோட்சம் ஏற்கும்!
குவி..கம்பன் பாப்படித்துத் தமிழின் சீரை!
     கொடு..கம்பன் நெறியேந்தும் சந்தத் தேரை!
புவி..கம்பன் சீருரைக்கப் பூந்தேன் நல்கிப்
     புகழுரைத்த நற்சரோசா கவிஞர் வாழி!

என்னணியில் தொண்டாற்றித் தமிழைக் காக்கும்
     எழில்மனத்து வே.சரோசா கவிதை ஊற்று!
பொன்னணியில் பாட்டொளிரும் கம்பன் நூலில்
     பொலிந்தொளிரும் காதலினைப் பொழிந்தார் நன்றே!
இன்னணியில் கவிபாடும் என்றன் நெஞ்சை
     இவர்கவிதை மயக்கியதே! எந்த நாளும்
முன்னணியில் தமிழ்மொழியை முழங்க வேண்டி
     முகுந்தனவன் திருவடியை வணங்கு கின்றேன்!

(தொடரும்)

9 commentaires:

  1. வணக்கம் !
    சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி .என் இனிய தீபாவளி
    வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்
    அனைவருக்கும் உரித்தாகட்டும் ஐயா .

    RépondreSupprimer
  2. வணக்கம்
    ஐயா
    ரசித்தேன் கவிதை அருமை வாழ்த்துக்கள்

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  3. மிகமிக அருமையாக உள்ளது உங்கள் தலைமைக் கவிதைகள்!

    அந்தந்தத் தலைப்பில் கவிஞர்கள் பாடியதை மிக அழகாக அருமையாக விபரித்துக் கவிதையில் சொன்னவிதம் மிகவும் அருமை ஐயா! அத்துடன் அவர்கவிதைக்கு பதில் கவிதையாய் நீங்கள் தந்தவற்றையும் மிகவும் ரசித்தேன்!

    மிகச் சிறப்பு!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
  4. இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  5. அருமை ஐயா
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  6. ரசித்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

    உங்களுக்கு 7-வது வோட்டு போட்டு மகுடம் ஏற்றியுள்ளேன்!

    RépondreSupprimer
  7. வழக்கம் போல் கவிதன்னை படைத்து விட்டீர் - நல்
    வண்ணமுற சொற்களிலே நெஞ்சைத் தொட்டீர்
    பழக்கமென மரபுவழி பாடல் நாளும் - நீரும்
    படைகின்றீர் !படிக்கின்றீர் மேலும் மேலும்
    குழைக்கின்ற சந்தனமாய் மணக்கும் கவியே -கம்பன்
    குரலுக்கு மெருகூட்ட எங்கள் செவியே
    அழைகின்ற நிலைதானே நாங்கள் பெற்றோம் - சுவை
    அளித்திட்ட காரணத்தால் இன்ப முற்றோம்

    RépondreSupprimer

  8. வணக்கம்!

    ஓங்கி ஒளிர்கின்ற ஒப்பில்லாப் பாக்களைத்
    தாங்கி ஒளிர்கின்ற தண்டமிழா! - ஏங்கி..நான்
    நிற்கின்றேன்! கோலக் கவிதை நெறிகளைக்
    கற்கின்றேன் நெஞ்சம் கனிந்து!

    RépondreSupprimer