dimanche 9 septembre 2012

முப்படை கொண்டு முகம்


முப்படை கொண்டு முகம்



இருவிழிகள் வேலேந்தும், இளமை யாட்சி
    ஈடின்றி நடப்பதனால் காவல் செய்ய!
தரும்மொழிகள் தேனேந்தும், குளிர்ந்த பொய்கை
    தழைத்தொளிரும் தாமரையை முகமாய்க் கொண்டு!
வரும்வழிகள் பொன்னேந்தும், கதிர்கள் தொட்டு
    வஞ்சியிவள் திருவுருவம் வடிவாய் மின்ன!
பெரும்பழிகள் புரிந்தேனோ? பெண்ணே உன்றன்
    முப்படைகள் அணிவகுத்து என்னைத் தாக்கும்!



விளக்கவுரை

பெண்ணே! நான் என்ன பழி செய்தேன்.
ஏன் என்னை முப்படை கொண்டு தாக்குகிறாய்?

பெண்ணே உன் விழிகள் வேல்களை ஏந்தி
என்னைத் தாக்குகின்றன [தரைப்படை]

நீரில் மலா்வது தாமரை!
தாமரை போன்ற முகத்துதிரும் சொற்கள்
என்னைத் தாக்குகின்றன [நீா்ப்படை]

காலைக் கதிர்கள் உன்மேல் பட்டு,
உன் மேனி மின்னும்
உன்மேனியின் ஒளி பட்டு
பாதைகள் மின்னுகின்றன.
அக்காட்சி என்னைத் தாக்குகின்றது [வான்படை]

2 commentaires:


  1. முப்படை மின்னும் முகமென்று பாட்டினை
    எப்படை வெல்லும் இயம்புகவே! - அப்பப்பா!
    கொட்டும் மழையாகக் கோலத் தமிழ்கண்டேன்!
    கட்டும் கருத்தைக் கவா்ந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கருத்தைக் கவர்ந்தவளை! கண்கள் கமழ
      விருந்தை அளித்தவளை! வெல்லும் - அரும்படை
      மூன்றும் அணிந்தவளை! மூளை அறைமுழுதும்
      ஊன்றும் உணா்வெனும் ஊற்று!

      Supprimer