mardi 11 septembre 2012

நல்லதமிழ் [ பகுதி - 4 ]



தேவனாதன் - தேவநாதன்

   தேவ  நாதன்  தேவநாதன், இராம  நாதன்  இராமநாதன் என வருவது வடமொழி முறையாகும் . தேவன்  நாதன்  என்றும், இராம  நாதன் என்றும் கொண்டு தேவனாதன் என்றும், இராமனாதன் என்றும் எழுதுவது முறையாகாது.

வேலை கொடு - வேலைக் கொடு  

வேலை கொடு என்றால் உழைப்பதற்கு வேலை கொடு என்ற பொருள் தரும்.. வேலைக் கொடு என்றால் கூரிய ஆயதமாகிய வேலினைக் கொடு என்ற பொருள் தரும். எனவே பொருள் உணர்ந்து எழுதுக.

பூவை முகருகிறோம் - பூவை மோக்கிறோம்

பூவை முகருகிறோம் என்பது தவறாகும். பூவை மோக்கிறோம் என்பதே சரியாகும். திருக்குறளில் ''மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து'' என்று வருவதைக் காண்க.

எத்தனை - எவ்வளவு

இச்சொற்களைப் பொருள் உணர்ந்து எழுதுதல் வேண்டும். எத்தனை என்பது எண்நைக் குறிக்கும். எவ்வளவு என்பது அளவைக் குறிக்கும். எத்தனை பாடல் எழுதினாய்? எவ்வளவு துணி வாங்கினாய்? என எழுத வேண்டும். எவ்வளவு நாளிதழ் விற்றாய்? என்பது தவறாகும். எத்தனை நாளிதழ் விற்றாய்? என்பதே சரியாகும். எத்தனை அழகு என்பது தவறாகும். எவ்வளவு அழகு? என்பதே சரியாகும்.

ஆம் - ஆவது

ஆம் என்பது எண்ணோடு சேர்ந்து வரும். ஆவது என்பதும் எண்ணோடு சேர்ந்து வருவதுண்டு. ஆம் என்பது எண்ணிக்கையைக் குறிக்கும். ஆவது வரிசை முறையைக் குறிக்கும். சான்று: ''முதலாம் பாகம், இரண்டாம் பாகம்.'' ''இரண்டாவது பதிப்பு, ஆறாவது பதிப்பு''. ஆவது ஐயப்பொருளிலும் வரும், செடியை ஆடாவது மாடாவது மேய்ந்திருக்கும். ஐயத்தைக் காட்டும் சொல்லாக ஆவது பயன் படுத்தும்போது இடையில் அல்லது என்ற சொல் வருதல் கூடாது. செடியை ஆடாவது அல்லது மாடாவது மேய்ந்திருக்கும் என்றெழுதுவது தவறாகும்.

மங்களம் - மங்கலம்

மங்கலம் என்னும் சொல்தான் தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது. தமிழிலுள்ள அகர முதலிகள் மங்கலம் மங்களம் என்னும் இரண்டிற்கும் ஒரே பொருளைத்தான் தந்துள்ளன. மங்கலம் என்னும் சொல்லே தொன்மையும் செம்மையும்வாய்ந்தது. மங்களம் என்பது போலிச் சொல்லாகும்.

கருப்புக் கொடி - கறுப்புக் கொடி

கறுப்பு என்பது வெகுளியைக் குறிக்கும், நிறத்தையும்  உணர்த்தும் என்று தொல்காப்பியர் கூறுகின்றார். ''கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள'' ''நிறத்து உரு உணர்த்தற்கும் உரிய என்ப'' (தொல். உரி, 74, 75) பிங்கல நிகண்டு கறுப்பு என்ற சொல்லுக்கு ''கருநிறமும் சினக்குறிப்பும் கறுப்பே'' என்கிறது.

கருப்பு என்னும் சொல்லுக்குப் பஞ்சம் என்பதுதான் பொருளாக இலக்கியங்களிலும் அகரமுதலிகளிலும் காணப் படுகிறது.

கறுப்புச்சாமி, கறுப்பண்ணன் என்று எழுதுவதே மரபாகக் கொள்க என . கி. பரந்தாமனார் கூறுகிறார்

கறுப்பு - கருமை நிறம், கறுப்பன் - கருமை நிறம் உள்ளவன், கறுப்பி - கருமை நிறம் உள்ளவள், கறுப்புத் தேள் - கருந்தேள், கருமை என்பது கார் என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது. கார் என்பதன் அடியாகப் பிறந்த கருமை என்னும் பொருளைத்தரும் மேற்காட்டப்கட்டுள்ள சொற்கள் நான்கும் அடிப்படைச் சொல்லில் உள்ள இடையின எழுத்திற்கு(ரு) மாறாக வல்லின எழுத்தைப்(று) பெற்றுப் பயன்கடுவது தமிழ் மரபில் ஏற்பட்டுள்ள ஒரு புதிர் போலும்.

கருமை என்பது கரிய நிறம் என்னும் பண்பைக் குறிக்கும். கருமை என்பதன் அடியாகப் பிறந்த கருப்பு என்ற வடிவத்தை மூ. வரதராசனாரும், பாவாணரும் பயன்படுத்தியுள்ளனர்.

கருப்புக் கொடி, கருப்புச்சாமி, கருப்பண்ணன் என எழுதுவது பிற்கால வழக்காகும்.

இறைப்பணி - இறைபணி

இறை - உயிரீறு உயர்திணைப்பெயர், உயர்திணைப் பெயரீற்று உயிர்முன் வல்லினம் இயல்பாகும். ( நன்னூல். 159) எனவே இறைபணி என்று இயல்பாக எழுத வேண்டும். ஆனால் அறம் 10 பணி ஸ்ரீ அறப்பணி என்று மிகுத்து எழுத வேண்டும். (மெய்யீறு வேற்றுமையில் மகரவீறு கெட்டு அற என நின்று வரும் வல்லனம் மிகுந்து அறப்பணி என்றாகும்)

துணை கொண்டு - துணைக்கொண்டு

துணை என்னும் சொல் தனிச்சொல்லாக நின்று துணையைக் கொண்டு என்ற பொருளில் இரண்டாம் வேற்றுமைத் தொகையாக வரும்போது வருமொழி வினையாக வந்தால், பெரியோர் துணை கொண்டு வினை செய்தான் என்பது போல் இயல்பாக வரும். (நன்னூல். 255)

துணைக்கொள் என்று இரண்டு கொற்கள் ஒட்டி ஒரு வினையாக வரும் போது மிகுந்து வரும். ''பெரியாரைத் துணைக்கோடல்'' (திருக்குறள், அதிகாரம் 45) ;. ''பெரியாரைத் துணைககொள்'' (ஆத்திசூடி 83) என்பன காண்க.

பின்புரம் - பின்புறம்

பின்புரம், மேற்புரம் என்பன தவறாகும். பின்புறம் மேற்புறம் என்றே எழுத வேண்டும். புறம் - இடத்தைக் குறிக்கும், புரம் - ஊரைக் குறிக்கும். (விழுப்புரம், பிரமாபுரம்) இடது புறம், வலது புறம் என்பன பிழையாம். இடப்புரம், வலப்புரம் என்பனவே சரியாம்.
                                                                                                                                           [தொடரும்]

2 commentaires:


  1. தேடி யளித்த செழுந்தமிழை நானுண்ண
    நாடி வருகின்றேன் நாள்தோறும்! - பாடிமகிழ்
    ஒப்பில் கவியே! உருபெறும் ஆக்கத்துள்
    தப்பிற்குப் போட்டேன் தடை!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தப்பிலா ஆக்கத்தை தந்திட வேண்டியே
      ஒப்பில்லா ஒண்டமிழை ஓதுகிறேன்! - எப்பொழதும்
      பற்றுடன் பாக்கள் படைக்கும் பாவலர்தாம்
      கற்றுக் களிப்பார் கனிந்து!

      Supprimer