சிலேடை வெண்பா
திருமாலும் மேகமும்
கருமைநிற முண்டாம்! கடலுற வுண்டாம்!
பெருமைநிறை யுண்டாம்!நீர் பேணும் - அருளுண்டாம்!
பேசுபுகழ்த் துாதுண்டாம்! எங்குமுளப் பேருண்டாம்!
வாசமால், மேகம் வழங்கு!
திருமால்
கருமை நிறத்தவன். பாற்கடலில் துயில்பவன். ஈடிலாப் பெருமையுடையவன். மலையைக் குடையாய்க் கொண்டு மழையைத் தடுத்து அருள் புரிந்தவன். பாண்டவர்க்குத் துாதாய்ச் சென்றவன். எங்கும் நிறைந்தவன்.
மேகம்
கருமை நிறமுடையது. கடல்நீர் ஆவியாகி மேகமாகிறது. நிலம் வாழ்வதற்கு மழையைத் தருவதால் ஈடிலாப் பெருமையுடையது. நீரைப் பொழிவது. பாவாணர் பலர் மேக துாது பாடியுள்ளனர். எங்கும் நிறைந்துள்ளது.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
03.01.2019
 

Aucun commentaire:
Enregistrer un commentaire