jeudi 23 mai 2019

சிலேடை வெண்பா



சிலேடை வெண்பா
  
ஆண்மயிலும் பெண்விழியும்
  
கண்ணழகு காதலிடும்! காரழகு தோகையிடும்!
மண்ணழகுச் சோலையுறும்! வண்ணமிகும்! - தண்டமுறும்!
பண்ணழகுச் சந்தமிடும்! பார்..கொத்தும்! பொன்மயிலை
வண்டழகுக் கண்ணை வழங்கு!
  
ஆண்மயில்
  
தோகையின் மீது ஆசையுறுவோம். மழைதரும் கார்மேகத்தைக் கண்டு தோகை விரித்தாடும். மண்ணுக்கு அழகு தருகின்ற மலர்ச்சோலையில் வாழும். வண்ணம் பல கொண்டிருக்கும். வணங்கப்படும் உயர்வை பெற்றது. புலவர்களின் பாடல்களுக்குக் கருப்பொருளாகும்.[திருப்புகழ்]. உணவைக் கொத்தித் தின்னும்.
  
பெண்விழி
  
காதலை விளைக்கும். தோகை, மை ஏற்கும். மலர்க்கண் என்ற உவமையை கொள்ளும். பல வண்ணங்கள் பூசப்பட்டு அழகேந்தும். [காதல் வண்ணங்கள் நல்கும்] இமைகளை மூடி இறைவனை ஆழ்ந்து தொழும். காதல் பாடல்களுக்குக் கருவாகும். பார்வையால் தாக்கும். [வேல்விழி, அம்புவிழி]
  
எனவே, பொன்னழகு ஆண்மயிலும் வண்டழகுப் பெண்விழியும் ஒன்றென வழங்கு.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
23.05.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire