சிலேடை வெண்பா
மதுவும் மாதுவும்
நித்தம் மயக்குவதால், நெஞ்சேறி வாட்டுவதால்,
புத்தி இழந்து புலம்புவதால், - புத்துலகைக்
காட்டுவதால், கண்ணுறக்கம் மூட்டுவதால், பொங்கிமணங்
கூட்டுவதால் மாதுமது கூப்பு!
மது
மயக்கம் தரும். உடலை வருத்தும். போதையால் அறிவை இழக்கச் செய்யும். புலம்ப வைக்கும். இவ்வுலகை மறக்கச் செய்து புத்துலகில் மிதக்கச் செய்யும். துாக்கமளிக்கும். பொங்கி மணம் மூட்டும்.
மாது
மயக்கத்தைத் தருவாள். காதல் கொடுத்து நெஞ்சத்தை வாட்டுவாள். ஒருதலைக் காதலால் அறிவை இழக்கச் செய்வாள். தனியே புலம்ப வைப்பாள். உயிரோடு இணைந்து இவ்வுலகை மறக்கச் செய்து புத்துலகைக் காட்டுவாள். படுக்கையில் சேர்ந்து உறங்குவாள். சமையல் செய்து மணங்கொடுப்பாள்.
எனவே மாதும் மதுவும் கூப்பும் இருகைகள் போன்று இணையாவர்..
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
08.05.2019


அருமை அய்யா
RépondreSupprimer