சிலேடை வெண்பா
வெண்ணிலவும் ஆம்பலும்
விண்காணும்! தண்குளத்தில் மேல்காணும்! பாவலரின்
பண்காணும்! பால்போல வெண்காணும்! - பெண்காணும்!
மண்காணும் மாலையிலே! பின்வாடும்! வான்மதியைக்
கண்காணும் அல்லியெனக் கண்டு!
வெண்ணிலவு
விண்ணில் தோன்றும். நீர்நிலைகளில் அதன் பிம்பம் தெரியும். பாவலரின் பாட்டுக்குக் கருவாகும். பால்போல் வெண்மை நிறம் கொள்ளும். பெண்ணின் முகத்துக்கு உவமையாகும். மக்கள் கண்டு மகிழ மாலையில் தோன்றும். பின்வரும் நாள்களில் வடிவம் குன்றித் தேய்பிறை ஆகும்.
ஆம்பல் [அல்லி]
வானோக்கிப் பூக்கும். நீர்நிலைகளில் தோன்றும். பாவலரின் பாட்டுக்குக் கருவாகும். பால்போல் வெண்மை நிறம் கொள்ளும். பெண்ணின் முகத்துக்கு உவமையாகும். மக்கள் கண்டு மகிழ மாலையில் மலரும். காலையில் வாடும்.
வெண்ணிலவும் ஆம்பலும் ஒன்றென என் கண்கள் காண்கின்றன.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
10.05.2019


Aucun commentaire:
Enregistrer un commentaire