dimanche 20 janvier 2019

சிலேடை வெண்பா



சிலேடை வெண்பா
  
முத்தும் முல்லையும்
  
பிறப்பிடம் நீங்கும்! பிணைப்புறும்! மூடிச்
சிறப்பிடம் ஓங்கும்!கார் சேரும்! - உறுப்பிடம்
ஒத்தேகும்! துாயநிறம் ஒன்றும்! அணங்கேகும்!
முத்தேகும் முல்லை முழங்கு!
  
முத்து
  
சிப்பியிலிருந்து நீங்கும். மாலையாக இணைக்கப்படும். சிறிய பெட்டியில் வைத்துப் பேழையில் காக்கப்படும். தலையில் அணியும் மணிமுடியில் பதிக்கப்படும். புலவர் பாடும் பாடல்களில் பல்லுக்கு உவமையாகும். வெண்மை நிறம் கொண்டது. பெண்கள் விரும்பி அணியும் சரமாகும்.
  
முல்லை
  
பூத்த இடம்விட்டுப் பறிக்கப்படும். மாலையாக இணைக்கப்படும். இரவில் ஈரத்துணியால் மூடி வைக்கக்கபடும். கூந்தலில் சூடப்படும். புலவர் பாடும் பாடல்களில் பல்லுக்கு உவமையாகும். வெண்மை நிறம் கொண்டது. பெண்கள் விரும்பி ஏற்பார்.
  
எனவே, முத்தின் சிறப்புகளை முல்லையும் ஏற்கும். இரண்டும் இணையென்று முழங்குவாய்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
10.01.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire