சிலேடை வெண்பா
ஆசிரியப்பாவும் வானும்
எல்லை இதற்கில்லை! ஏந்தும் இயற்கையெழில்!
தொல்லை இருப்பாகும்! ஒள்ளொளியை - நல்கும்பேர்
உற்றிடும்! மேன்மைத்தாள் பெற்றிடும்! ஓங்கிடும்வான்
கற்றிடும் ஆசிரியம் காண்!
தொல்லை - பழமை
ஆசிரியப்பா
அடி வரையறை இல்லை. முதலில் பிறந்த இயற்சீர்களைப் பெற்றுவரும். பழமைப் பாவகையாகும். [சங்க நுால்கள் பல ஆசிரியப்பாவால் அமைந்துள்ளன]. ஆசிரியர் அறிவொளியை அளிப்பவர். ஆசிரியர் என்ற பெயருடன் பா இணைந்து பெயர் அமைந்துள்ளது. [வள்ளலாரின் அருட்பெருஞ்சோதி அகவலால் ஒளிவீசும் பெயரை ஏற்றுள்ளது] [தாள் - அடி] அனைத்து அடிகளையும் பெற்றுவரும். [பெரும்பான்மை அளவடியைப் பெற்றுவரும் இப்பாவில் நெடிலடியும், கழிநெடிலடியும் வருவதுண்டு]
வானம்
எல்லா இல்லை. இயற்கையழகால் ஓங்கி ஒளிர்வது. என்றும் இருப்பது. கதிரவனின் கதிர்களால் மிளிர்வது. திருமாலின் ஒரு திருவடி மண்ணை அளந்தது. மற்றொரு திருவடி விண்ணை அளந்து.
எனவே, நாம் கற்கின்ற ஆசிரியப்பாவும் ஓங்கி ஒளிரும் வானமும் நிகரெனக் காண்க.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
22.05.2019


Aucun commentaire:
Enregistrer un commentaire