சிலேடை வெண்பா
சித்தரும் கொக்கும்
ஒருகால் உறுதவத்தால், ஒண்ணிறத்தால், ஒன்றி
வருங்கால் உறுதிறத்தால், வாழும் - அருங்காட்டால்
நீர்நிலை கொள்ளுறவால் நீள்கொக்கும் சித்தரும்
ஓர்நிலை ஆவார் உணர்!
சித்தா்
ஒருகாலில் நின்றுறும் தவமுடையார். துாய வெண்ணெஞ்சுடையார். மனத்தை அடக்கி நல்வழியில் செல்லும் நெறியுடையார். காடுகளில் வாழும் அருளுடையார். நீரில் பள்ளிகொண்ட திருமாலிடம் உறவுடையார்.
கொக்கு
ஒரு காலால் நின்றிருக்கும். வெள்ளை நிறத்தைப் பெற்றிருக்கும். மீனுக்காய் மனமொன்றிக் காத்திருக்கும். பெரிய மீன் வருங்கால் கொத்திப் பிடிக்கும். வயற்காட்டில் வாழும். ஏரி, குளம் ஆகிய இடங்களில் இருக்கும்.
எனவே, நீண்ட கழுத்துடைய கொக்கும், மெய் மெலிந்திருக்கும் சித்தரும் ஒன்றாவார் என்றே உணர்க.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
12.05.2019


Aucun commentaire:
Enregistrer un commentaire