samedi 29 août 2020

விருத்த மேடை - 41 

விருத்த மேடை - 41
  
எழுசீர் விருத்தம் - 4
வெண்டளையால் அமைந்து
  
மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி
   வண்ணன் மணிமுடி மைந்தன்
தன்னை, உகந்தது காரண மாகஎன்
   சங்கிழக் கும்வழக் குண்டே,
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்
   பொதும்பினில் வாழும் குயிலே!
பன்னியெப் போது மிருந்து விரைந்தென்
   பவளவா யன்வரக் கூவாய்!
  
[ஆண்டாள், நாச்சியார் திருமொழி - 51]
    
மிடிமையில் அழிந்திடேல் [பாரதியின் புதிய ஆத்திசூடி]
  
வறுமை வளர்ந்து வதைத்த பொழுதும்
   வழியை மதியால் வடிப்பாய்!
சிறுமை மனத்தோர் சிரித்த பொழுதும்
   செயல்களை நன்றே முடிப்பாய்!
பொறுமைக் குணமும் புதுமை மனமும்
   புனைந்து புகழைப் படைப்பாய்!
வெறுமை யகற்றி நறுமை புதுக்கி
   வினைகளை வென்று நடப்பாய்!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
இந்த எழுசீர் விருத்தம் இயற்சீர் வெண்டளையால் அமைந்துள்ளது. தேமாங்காயும் புளிமாங்காயும் அருகி வரும். ஆண்டாள் பாடலில் [குருக்கத்தி - புளிமாங்காய் வந்துள்ளது] நான்கடிகளும் ஓரெதுகை பெறவேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைய வேண்டும். ஒவ்வோர் அடியின் ஈற்றுச்சீர் மாச்சீராக அமையும். அடியின் ஈற்றிலிருந்து அடுத்த அடியின் தொடக்கத்திற்கு வெண்டளை பார்க்க வேண்டியதில்லை. நேரசையில் தொடங்கினால் 20 எழுத்துக்களும் நிரையசையில் தொடங்கினால் 21 எழுத்துக்களும் பெற்றுவரும்.
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எழுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
           
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
22.08.2020

Aucun commentaire:

Enregistrer un commentaire